ஆடிட்டர் ரமேஷ் பெண் விவகாரத்தில்தானே கொல்லப்பட்டார் - எச்.ராஜாவை ட்விட்டரில் சீண்டிய வன்னியரசு
சென்னை: பாஜக பிரமுகர் ஆடிட்டர் ரமேஷ் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டார் என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா ட்விட்டரில் பதிவிட்டுள்ள நிலையில், அவர் கந்து வட்டி, பெண் விவகாரத்தில்தானே கொல்லப்பட்டார் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் வன்னியரசு கேள்வி எழுப்பி இருக்கிறார்.
சேலத்தை சேர்ந்த பாஜக முன்னாள் மாநில செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் கடந்த 2013 ஆம் ஆண்டு ஜூலை 19 ஆம் தேதி அவரது அலுவலகத்தில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் தொடர்புடையதாக கூறி பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில், போலீஸ் பகுருதீன் ஆகியோரை காவல்துறை கைது செய்தது. இவர்கள் தற்போது சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கின்றனர்.

ஆடிட்டர் ரமேஷ் நினைவு நாள்
இவர்களுக்கு எதிரான வழக்கு சென்னை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஆடிட்டர் ரமேஷ் கொல்லப்பட்டு இன்றுடன் 9 ஆண்டுகள் நிறைவடைந்து இருக்கிறது. இதனை ஒட்டி 9 ஆம் ஆண்டு நினைவு நாளை பாஜகவினர் மற்றும் இந்து அமைப்பினர் அனுசரித்து வருகின்றனர்.

பாஜகவினர் பதிவு
ட்விட்டரில் ஆடிட்டர் ரமேஷை கொலை செய்தவர்களுக்கு விரைவில் தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தியும், ரமேஷின் செயல்பாடுகளை நினைவுகூர்ந்தும் பாஜகவினர் பதிவிட்டு வருகின்றனர். மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி ஸ்ரீனிவாசன், பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா உள்ளிட்டோர் ட்விட்டரில் பதிவிட்டு உள்ளனர்.

எச்.ராஜா பதிவு
இதில் எச்.ராஜா தனது ட்விட்டர் பதிவில், "9 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் ஆடிட்டர் ரமேஷ் அவர்கள் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டார். அவருக்கு எனது இதயப்பூர்வமான அஞ்சலியை தெரிவித்துக்கொள்கிறேன். தமிழகத்திலிருந்து பயங்கரவாதத்தை வேரறுக்க சபதமேற்போம்." என்று பதிவிட்டு இருக்கிறார்.

வன்னியரசு பதில்
எச்.ராஜாவின் இந்த பதிவை ரீட்வீட் செய்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் வன்னியரசு "கந்து வட்டி மற்றும் பெண் விவகாரத்தில் தானே இவன் (2013 இதே நாளில்) கொல்லப்பட்டான். இதுல எங்க இசுலாமிய தீவிரவாதம்? இந்தியாவிலிருந்தே பார்ப்பன பயங்கரவாதத்தை அழித்தொழிக்க உறுதி ஏற்போம்." என்று பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications