மாற்றி யோசித்த மக்கள்.. உதவிய டிராக்டர்கள்.. ரயில் விபத்தில உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது எப்படி?
சென்னை: திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை ரயில் நிலையத்தின் அருகே மைசூரு தர்பாங்கா பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் 2 ஏசி பெட்டிகள் தீப்பிடித்ததோடு பல பெட்டிகள் தடம்புரண்டது. இதில் சிக்கிய பயணிகளை பொதுமக்கள் விரைந்து மீட்டதோடு, விபத்து ஸ்பாட்டுக்கு செல்ல முடியாமல் தவித்த தீயணைப்பு வாகனங்களுக்கு டிராக்டர்கள் உதவி செய்தன. இதனால் ரயிலில் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டு உரிய நேரத்தில் தீ அணைக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவின் மைசூர் ரயில் இருந்து பீகார் மாநிலம் தர்பங்காவுக்கு பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் மைசூரில் இருந்து புறப்பட்டு பெங்களூர் வழியாக ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், செ்னனை சென்ட்ரல் வழியாக தர்பங்கா நோக்கி செல்லும்.

இந்நிலையில் தான் இந்த பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் இன்று இரவு திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை ரயில் நிலையத்தின் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக இன்னொரு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது.
அதாவது அந்த பகுதியில் உள்ள லூப் லைன் எனப்படும் ரயில் தண்டவாளத்தில் சரக்கு ரயில் நின்றது. அப்போது மெயின் லைனில் செல்ல வேண்டிய பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் லூப் லைனில் சென்று நின்ற சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகள் தடம் புரண்டன. பெட்டிகள் அருகே உள்ள தண்டவாளம் மற்றும் அதனை சுற்றிய இடங்களில் தடம்புரண்டு தலைக்குப்புற கவிழ்ந்தன. 2 ஏசி பெட்டிகள் தீப்பிடித்து எரிந்தன. பயணிகள் தங்களின் உடைமைகளை தூக்கிய கொண்டு வெளியே ஓடிவந்தனர்.
முதற்கட்ட தகவலின்படி இந்த விபத்தில் உயிர் பலி இல்லை. இருப்பினும் 7 பேர் வரை காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பற்றி அறிந்தவுடன் ரயில்வே அதிகாரிகள், போலீசார், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். தீயணைப்பு வீரர்கள் ரயில் பெட்டியில் பிடித்த தீயை போராடி அணைத்தனர்.
இத்தகைய சூழலில் தான் ரயில் விபத்தில் பெரும் அசம்பாவிதம் நடக்காமல் இருந்ததற்கு அந்த பகுதி மக்கள் தான் காரணம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதாவது ரயில் விபத்து நடந்தவுடன் அந்த பகுதி மக்கள் ஓடிச்சென்று பயணிகளை பத்திரமாக மீட்டுள்ளனர். அதேபோல் தீயணைப்பு வாகனங்கள் ரயில் விபத்து நடந்த ஸ்பாட்டுக்கு செல்ல முடியாமல் நின்றது. வழிப்பாதை எதுவும் இல்லாததால் தீயணைப்பு வாகனங்களால் உடனடியாக ஸ்பாட்டுக்கு செல்ல முடியவில்லை.
இந்த வேளையில் டிராக்டர்கள் ரயில் விபத்து நடந்த இடத்துக்கு சாலையில் இருந்து வழிப்பாதையை ஏற்படுத்தி கொடுத்தது. செடிகள் நிறைந்த இடத்தின் வழியாக டிராக்டர்கள் செல்ல அதன்பின்னால் தீயணைப்பு வாகனங்கள் சென்று தீயை அணைத்ததாக கும்மிடிப்பூண்டி எம்லெ்ஏ கோவிந்தராஜன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications