களைகட்டும் உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி...சென்னையில் நடைபெற்ற விழிப்புணர்வு மாரத்தான்!
சென்னை : செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சென்னையில் நடத்தப்பட்ட மாரத்தான் போட்டியில், அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில், 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி, வருகிற 28-ந் தேதி முதல் ஆகஸ்டு 10-ந் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தியாவில் முதல்முறையாக நடத்தப்படும் இந்தப் போட்டித் தொடரில், இந்தியா, அமெரிக்கா, நார்வே, பிரான்ஸ், நெதர்லாந்து உள்பட 189 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.

இதற்கான விரிவான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்து வருகிறது. உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொள்ள வரும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தங்குவற்காக, சென்னை மற்றும் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள 50க்கும் மேற்பட்ட ஹோட்டல்கள், சொகுசு விடுதிகளுக்கு தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. இந்த பிரம்மாண்ட செஸ் போட்டியை பொதுமக்களுக்கு கொண்டு சேர்க்கும் வகையில், தமிழகம் முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சென்னை மெரினா கடற்கரையில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. இந்த மாரத்தானை அமைச்சர்கள் மெய்யநாதன், மா. சுப்பிரமணியன், சேகர் பாபு ஆகியோர் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர். நேப்பியர் பாலம் முதல் கலங்கரை விளக்கம் வரையிலான மாரத்தானில், ஏராளமான மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: செஸ் ஒலிம்பிக்கிற்கான விழிப்புணர்வு ஓட்டமாக இந்த சிறப்பு ஓட்டம் அமைந்துள்ளது. மேலும் வெற்றிக்கான தொடக்கமாக இந்த சிறப்பு ஓட்டம் அமைந்துள்ளது. செஸ் விளையாட்டு வீரர்கள் நட்சத்திர விடுதிகள் உட்பட 24 இடங்களில் பத்திரமாக தங்க வைக்கப்பட உள்ளனர். 344 மருத்துவ பணியாளர்கள் கொண்டு வீரர்களுக்கு மருத்துவ உதவிகள் வழங்கப்பட உள்ளது. பொது மக்கள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு மருத்துவ முகாம்கள் உட்பட தேவையான அனைத்து வசதிகளும் அங்கு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
Recommended Video
செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடங்குவதற்கு இன்னும் ஒருசில நாட்களே உள்ள நிலையில், போட்டியில் கலந்துகொள்ளும் சர்வதேச வீரர்கள் சென்னைக்கு வந்தவண்ணம் உள்ளனர். இதனால் இந்த பிரம்மாண்ட போட்டி களைகட்ட தொடங்கியுள்ளது.












Click it and Unblock the Notifications