விஜய் ஜெயிப்பது இருக்கட்டும்! ஆக்சிஸ் மை இந்தியா கணிப்பில் குளறுபடிகளா? சர்ச்சையில் சிக்கிய தரவுகள்
சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான எக்ஸிட் போல் முடிவுகளை வெளியிட்டுள்ள ஆக்சிஸ் மை இந்தியா நிறுவனம், தற்போது கடும் விமர்சனங்களுக்கும் கேலிக்கும் உள்ளாகியுள்ளது. விஜய்யின் தவெக முன்னிலையில் இருப்பதாகக் கூறிய அதே வேளையில், அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள சாதி ரீதியான புள்ளிவிவரங்கள் மற்றும் கள யதார்த்தத்திற்கு அப்பாற்பட்ட தகவல்கள் தமிழக மக்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளன.
சாதி வாரியான கணக்கீட்டில் பெரும் பிழைகள்?
தமிழக அரசியலைப் பொறுத்தவரை சாதி ரீதியான வாக்கு வங்கி என்பது மிக முக்கியமானது. ஆனால், ஆக்சிஸ் மை இந்தியா வெளியிட்டுள்ள தரவுகளில் தமிழகத்தின் மக்கள் தொகை விகிதாச்சாரம் முற்றிலும் தவறாகச் சித்தரிக்கப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அவர்கள் வெளியிட்டுள்ள தரவுகளின்படி:
பார்பனர்கள்: 9%
வன்னியர்கள்: 7%
முக்குலத்தோர்: 2%
கவுண்டர்கள்: 4%
நாடார்கள்: 3%
தமிழகத்தில் கணிசமான மக்கள் தொகையைக் கொண்ட வன்னியர்கள், முக்குலத்தோர் மற்றும் கவுண்டர் சமூகத்தினரின் சதவீதத்தை இவ்வளவு குறைவாகக் காட்டியிருப்பது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. குறிப்பாக, தமிழகத்தின் ஒரு பிராமண சமூகத்தின் சதவீதத்தை 9% என்று குறிப்பிட்டிருப்பது, கள நிலவரத்திற்கும் புள்ளிவிவரத்திற்கும் சம்பந்தமே இல்லாதது போல் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். ஏனென்றால் அவர்களின் வாக்கு வங்கி 3-4%தான் உள்ளது. "தமிழ்நாட்டின் புவியியல் மற்றும் சமூக அமைப்பைத் தெரிந்துதான் இந்த எக்ஸிட் போல் எடுக்கப்பட்டதா?" என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
போட்டியிடாத அண்ணாமலைக்கு முதல்வர் ரேட்டிங்கா?
இந்தக் கணிப்பின் மற்றொரு மிகப்பெரிய நகைமுரணாகப் பார்க்கப்படுவது, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குறித்த தகவல். இந்தச் சட்டமன்றத் தேர்தலில் அண்ணாமலை போட்டியிடவில்லை. ஆனால், ஆக்சிஸ் மை இந்தியா வெளியிட்ட "யார் அடுத்த முதல்வர்?" என்ற பட்டியலில் அண்ணாமலைக்கு 2% பேர் ஆதரவு அளித்துள்ளார்கள் என்ற விவரமும் இடம் பெற்றுள்ளது.
தேர்தல் களத்திலேயே இல்லாத ஒருவரை, முதல்வர் வேட்பாளராகக் கருதி மக்கள் வாக்களித்ததாகக் கூறுவது எக்ஸிட் போல் நடைமுறைக்கே எதிரானது என்று நடுநிலையாளர்கள் கூறுகின்றனர். தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு (Exit Poll) என்பது வாக்களித்துவிட்டு வெளியே வரும் மக்களிடம் கேட்கப்படுவது. அங்கு போட்டியிடாத ஒருவரின் பெயர் எப்படி இந்தப் பட்டியலில் வந்தது என்பது புரியாத புதிராக உள்ளது.
குப்தாவின் 'கண்ணீர்' பின்னணியும் தற்போதைய குழப்பமும்
ஏற்கனவே 2024 நாடாளுமன்றத் தேர்தலில் "400 இடங்கள்" என்று கணித்து, அது பொய்த்துப் போனதால் நேரலையிலேயே கண்ணீர் விட்டு அழுதவர் ஆக்சிஸ் மை இந்தியா தலைவர் பிரதீப் குப்தா. கடந்த காலத் தவறுகளில் இருந்து பாடம் கற்றிருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போதைய தமிழகத் தேர்தல் கணிப்பிலும் அடிப்படைத் தரவுகளில் இவ்வளவு குளறுபடிகள் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒரே வாக்கு சதவீதத்தைப் பெற்றுள்ள திமுக மற்றும் தவெக ஆகிய இரு கட்சிகளுக்கும் இடையே தொகுதிகளில் இவ்வளவு பெரிய வித்தியாசம் எப்படி வந்தது என்பதற்கும் தெளிவான விளக்கம் இல்லை. ஒருபுறம் விஜய்யின் அரசியல் வருகை மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், இத்தகைய முரணான புள்ளிவிவரங்கள் அந்தக் கணிப்பின் நம்பகத்தன்மையையே அசைத்துப் பார்த்துள்ளன.
முடிவு என்னவாக இருக்கும்?
வாக்கு சதவீதக் கணக்கீட்டில் செய்துள்ள இமாலயத் தவறுகள், ஒருவேளை இந்தக் கணிப்பு மொத்தத்தையும் தலைகீழாக மாற்றக்கூடும். தமிழகத்தின் சமூகக் கட்டமைப்பைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல் எடுக்கப்படும் இத்தகைய மேலோட்டமான கணிப்புகள், தேர்தல் முடிவுகளின் போது மீண்டும் பிரதீப் குப்தாவைச் சங்கடத்திற்குள்ளாக்க வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது.
உண்மையான முடிவுகள் வெளியாகும் போது, இந்த "9% மற்றும் 2%" கணக்குகள் எவ்வளவு பெரிய தவறு என்பது அம்பலமாகும். அதுவரை இந்த எக்ஸிட் போல் தரவுகள் வெறும் விவாதப் பொருளாக மட்டுமே இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
தவெக-வின் அதிரடி முன்னிலை
ஆக்சிஸ் மை இந்தியா நிறுவனத்தின் தலைவர் பிரதீப் குப்தா வெளியிட்டுள்ள கணிப்பின்படி, விஜய்யின் தவெக 234 தொகுதிகளில் 98 முதல் 120 தொகுதிகளைக் கைப்பற்றி, ஆட்சியமைக்கத் தேவையான மெஜாரிட்டியை நெருங்கும் அல்லது எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய கட்சி முதல் தேர்தலிலேயே இவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவது இதுவே முதல் முறையாகக் கருதப்படுகிறது.
மற்ற கட்சிகளின் நிலை:
திமுக கூட்டணி: ஆளுங்கட்சியான திமுக கூட்டணி 91 - 110 தொகுதிகளைப் பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக: பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவுக்கு இந்தத் தேர்தல் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. அக்கட்சி வெறும் 22 - 32 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும் எனப் பலரையும் அதிர வைத்துள்ளது.
நாம் தமிழர் கட்சி & பிறர்: சீமானின் நாம் தமிழர் கட்சி 3 சதவீத வாக்குகளையும், மற்றவர்கள் 4 சதவீத வாக்குகளையும் பெறுவார்கள் என கணிக்கப்பட்டுள்ளது.
வாக்கு சதவீத அடிப்படையில் பார்க்கும்போது, திமுக மற்றும் தவெக ஆகிய இரண்டு கட்சிகளுமே சமமாக தலா 35 சதவீத வாக்குகளைப் பெறும் என்றும், அதிமுக 23 சதவீத வாக்குகளைப் பெறும் என்றும் பிரதீப் குப்தா குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications