அயோத்தி ராமரின் குலதெய்வம்.. ஸ்ரீரங்கம் போல பஞ்சரங்க தலங்கள்.. தரிசனம் செய்தால் என்ன பலன்கள்
சென்னை: வைணவத்தில் ஐந்து என்ற எழுத்தை உணர்த்தும் பஞ்சசம்ஸ்காரம், பஞ்ச தத்துவங்கள், பஞ்சரங்க தலங்கள் அதி முக்கியத்துவம் வாய்ந்ததாக மதிக்கப்படுகிறது. ஸ்ரீராமபிரான் இந்த பஞ்ச க்ஷேத்திரங்களையும் அங்குள்ள மூலவர்களையும் வணங்கி வழிப்பட்டு வந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில் இந்த தலங்களின் சிறப்புகளையும் பெருமைகளையும் அறிந்து கொள்வோம்.
பஞ்சரங்க தலங்கள்: காவிரி பாயும் நதிக்கரையில் எழுந்தருளி மக்களுக்கு அருள்பாலிக்கிறார் பள்ளி கொண்ட பெருமாள். அவை பஞ்சரங்க தலங்களாக பக்தர்களால் போற்றப்படுகின்றன. பள்ளி கொண்ட பெருமாளை தரிசனம் செய்வது தனி சிறப்பு. தமிழகத்தில் சிறப்பு வாய்ந்த ஸ்ரீரங்கம் போல மேலும் நான்கு கோவில்கள் இணைந்து பஞ்சரங்க தலங்களாக போற்றப்படுகின்றன. ஆதிரங்கம், மத்தியரங்கம், அப்பாலரங்கம், சதுர்த்தரங்கம், பஞ்சரங்கம் என்ற ஐந்து தலங்கலாகும்.

ரங்கம் என்றால் என்ன: கர்நாடக மாநிலம் மற்றும் தமிழகம் என காவிரி ஆறு பாயும் ஆற்றங்கரையில் ஸ்ரீமகாவிஷ்ணுவின் கோயில்கள் அமைந்துள்ள நதித்திட்டுக்கள் ஆகும். ரங்கம் என்றால் ஆறு பிரிந்து செல்லும் இடத்திலுள்ள மேடான பகுதி என்று பொருளாகும். அதே போல், ரங்கம் என்றால் மண்டபம், அரங்கம், சபை எனவும் பொருள்படும். பஞ்சரங்க தலங்கள் என்பது ஆதிரங்கம், மத்தியரங்கம், அப்பாலரங்கம், சதுர்த்தரங்கம், பஞ்சரங்கம் என்ற ஐந்து தலங்கலாகும்.
ஆதிரங்கம்: கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் ஸ்ரீரங்கப்பட்டிணத்தில் அமைந்துள்ளது ஆதிரங்கம். இங்கு ஸ்ரீரங்கநாதருக்கு மாலையிட்டது போல் காவிரி ஆறு இரண்டாகப் பிரிந்து மீண்டும் ஒன்று சேர்ந்து செல்கிறது. இங்கு பெருமாள் புஜங்க சயன திருக்கோலத்தில் காட்சியளிக்கின்றார்.
மத்தியரங்கம்: திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் மத்தியரங்கமாகும். தமிழ்நாட்டின் மத்திய மண்டலத்தில், திருச்சி மாநகருக்கு அருகில் காவிரி ஆறு இரண்டாகப் பிரிந்து மீண்டும் ஒன்று சேருமிடம் ஸ்ரீரங்கம் ஆகும். சிலர் இக்கோயிலை அனந்தரங்கம் என்றும் அழைக்கின்றனர். இதன் மற்றொரு சிறப்பம்சம், 108 திவ்யதேசங்களில் முதலாவது திவ்யதேசம் எனவும் பூலோக வைகுந்தம் எனவும் போற்றப்படுவதுண்டு. மேலும் பன்னிரு ஆழ்வார்களில் மதுரகவி ஆழ்வார் தவிர்த்த மற்ற 11 ஆழ்வார்களாலும் பாடப் பெற்ற ஒரே திவ்யதேசமும் ஆகும். ஸ்ரீராமர் குலதெய்வமாக வழிபட்டு விபீஷணனால் கொண்டு வரப்பட்ட மூர்த்தி ஸ்ரீரங்கம் ரங்கநாதர்.
அப்பால ரங்கநாதர் கோயில்: அப்பாலரங்கம் என்பது, திருப்பேர் நகர் கோவிலடி அப்பால ரங்கநாதர் கோயில் ஆகும். 108 திவ்ய தேச கோவில்களில் 8வது திவ்ய தலமாகவும். பஞ்சரங்க கோவில்களில் மூன்றாவது பக்தர்களுக்கு அருள்பாலித்து வருபவர் கோவிலடியில் எழுந்தருளியிருக்கும் அப்பால ரங்கநாதர். இந்தத் திவ்ய தேசத்திலிருந்து தான், நம்மாழ்வார் மோட்சத்திற்குப் போனதாகச் சொல்வார்கள். கல்லணை- திருக்காட்டுப் பள்ளி சாலையில் கோவிலடி கிராமத்தில் காவிரி கரையோரத்தில் தரைமட்டத்தில் இருந்து சற்று உயரமான இடத்தில் அமைந்துள்ளது அப்பால ரங்கநாதர் கோவில்.
சதுர்த்தரங்கம்: கும்பகோணம் நகரிலுள்ள ஸ்ரீசாரங்கபாணி கோயில் சதுர்த்தரங்கம் ஆகும். இக்கோயிலானது, காவிரி ஆறு, அரசலாறு, காவிரி என இரண்டாகப் பிரிந்து மீண்டும் ஒன்று கூடும் இடத்தில் அமைந்துள்ளது. இந்த திவ்யதேசத்தில் பெருமாள் சந்நிதியானது ஒரு தேரின் வடிவமைப்பில் காணப்படுகிறது. தேரின் இரு பக்கங்களிலும் பெருமாள் வைதீக விமானத்தின் கீழ் சங்கு சக்ரதாரியாக சார்ங்கம் என்னும் வில்லை ஏந்தியவாறு கிழக்கு நோக்கி உத்தான சயனத் திருக்கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றார்.
அந்தரங்கம்: திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் பஞ்சரங்கம் என்பது, காவிரி ஆற்றின் வட கரையில், திருஇந்தளூர் என்னும் இடத்தில் அமைந்துள்ள திருயிந்தளூர் பரிமள ரங்கநாதர் கோயில் ஆகும். மேலும் இக்கோயில் அந்தரங்கம் என்றும் அழைக்கப்படுகிறது. வேதசக்கர விமானத்தின் கீழ் ஸ்ரீபரிமள ரங்கநாதர் சதுர் புஜங்களுடன் ஆதிஷேசன் மீது கிழக்கு முகமாக வீரசயன திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். பெருமாளின் இரு பக்கங்களிலும் ஸ்ரீதேவி கங்கையாகவும், பூதேவி காவிரியாகவும் காட்சியளிப்பது இத்தலத்தின் சிறப்புகளில் ஒன்றாகும். ஆன்மீக தரிசனம் செல்ல விரும்புபவர்கள் அயோத்தி ராமர் வணங்கிய இந்த பஞ்சரங்க தலங்களையும் தரிசனம் செய்யலாம்.












Click it and Unblock the Notifications