பாஜக வளர வாய்ப்பே இல்லை! நாதக, அதிமுக வாக்குகளை அபகரிக்க பாஜக திட்டம்! அய்யநாதன் Analysis
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 3 கட்சிகள் பாஜகவை வளரவிடாது என்று பத்திரிகையாளர் அய்யநாதன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் இந்த முறை பாஜக அதிக இடங்களில் வெற்றி பெறும் என்று மாநிலத் தலைவர் அண்ணாமலை தொடர்ந்து பேசி வருகிறார். அதைத்தொடர்ந்து இப்போது அதிக வாக்கு சதவீதம் பெறுவோம் என்றும் கூறி வருகிறார்.

பாஜக தமிழ்நாட்டில் வளர வாய்ப்பே இல்லை என அதிமுகவும் திமுகவும் தொடர்ந்து கூறிவருகின்றன. ஆனால், பாஜக தமிழ்நாட்டில் வளர்ந்துள்ளது என்பதை இந்த மக்களவை முடிவுகள் உறுதிப்படுத்தும் என்கிறார் அண்ணாமலை.
அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் ஆட்களைப் போடவே திணறி வரும் பாஜக, அதிமுகவைவிட அதிக வாக்கு சதவீதத்தைப் பெறும் என்பதில் ஏதோ லாஜிக் ஓட்டைகள் உள்ளதாகப் பலரும் சொல்கிறார்கள்.
எப்படி பாஜகவின் வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என்பதைப் பற்றி சில விசயங்களை முன்வைத்துள்ளார் மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன்.

அவர் இது பற்றிப் பேசுகையில், “நான் பலமுறை பாஜக இந்தத் தேர்தலில் பிறகட்சிகளின் ஓட்டுகளைத் திருடப் பார்க்கிறது என்று வெளிப்படையாகக் குற்றஞ்சாட்டி இருக்கிறேன். இதற்காக 2 கட்சிகளைக் குறிவைத்தது பாஜக. ஒன்று, அதிமுக. மற்றொன்று நாம் தமிழர் கட்சி. அதற்காகத்தான் திட்டமிட்டு விவசாயி சின்னத்தைப் பிடுங்கினார்கள்.
பாஜகவின் கணக்கு என்ன? திமுகவுக்குப் பிறகு தான்தான் பெரிய கட்சி என்று காட்ட வேண்டும். எடப்பாடியைப் போட்டியிலிருந்து கீழே தள்ள வேண்டும். அவரை மட்டும் தள்ளினால் போதாது. நாம் தமிழர் கட்சியிலிருந்தும் வாக்குகளை அபகரிக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் பாஜக வளராமல் தடுக்கக்கூடிய கட்சிகள் மூன்றுதான். ஒன்று, விடுதலைச் சிறுத்தைகள். இரண்டு, நாம் தமிழர் கட்சி. மூன்று பண்ருட்டி வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமை கட்சி. இந்தக் கட்சிகள் தான் நாங்கள் தமிழர்கள். இந்துக்கள் இல்லை என்று உறுதியாகக் கூறி பாஜக உள்ளே வரமுடியாமல் தடுத்து வருகின்றன.

திருமாவளவனும் சீமானும் இருக்கின்ற வரை பாஜக தமிழ்நாட்டில் வளரவே முடியாது. கன்னியாகுமரியை தாண்டி ஒரு கவுன்சிலர் கூட ஜெயிக்க முடியாது. இதுதான் உண்மை.
திமுகவும் பாஜகவை எதிர்க்கிறது. ஏதாவது சர்ச்சை வந்தால், எங்கள் கட்சியில் உள்ளவர்கள் அதிகம் பேர் இந்துக்கள் தான் என்பார்கள். நாம் இந்துவா? தமிழனா? நமது கலாச்சாரமே வேறு.
ஆகவே, அதை விட்டுவிடுவோம். மற்ற மூன்று கட்சிகளும் வலிமையாக பாஜகவை எதிர்க்கின்றன. மொழிவழி தேசிய அரசியல் என்பது தமிழ்நாட்டில்தான் இருக்கிறது. வேறு மாநிலத்தில் எங்கே இருக்கிறது?
ஆகவேதான் நாம் தமிழர் கட்சியைக் குறிவைத்தது பாஜக. அடுத்து அதிமுக இருக்கின்றவரை திமுகவுக்கு மாற்று கட்சியாக வேறு கட்சி வர முடியாது. அதனால்தான் அதைக் குறிவைக்கிறார்கள்.
கடந்த தேர்தலில் 39 தொகுதிகளில் பரப்புரை செய்து 22 லட்சம் வாக்குகளை வாங்கினார் டிடிவி தினகரன். 6% வாக்குகள் வாங்கினார். இந்த முறை அவரை ஏன் முடக்கியது பாஜக? தமிழ்நாட்டில் 3 முறை முதலமைச்சராக இருந்தவர் பன்னீர்செல்வம். அவருக்கு ஒரே ஒரு சீட்டுக் கொடுத்து பலாப் பழ சின்னத்தில் நிற்கவைத்துவிட்டது பாஜக? இதனால் அவர் வளர்வாரா? அழிவாரா?
அமமுகவைச் சேர்ந்தவர்கள் தேனி, திண்டுக்கல் தவிர வேறு தொகுதிகளில் பாஜகவுக்கு ஓட்டுப் போடுவார்களா? ஆக, திட்டம் போட்டு இந்த முறை பல கட்சி வாக்குகளை தங்கள் பக்கம் இழுக்க வேண்டிய வேலையைச் செய்துவிட்டது பாஜக.

அப்படிச் செய்துவிட்டு, ஒடிசாவில் போய் வேறு மாநிலத்துக்காரர் ஒடிசாவை ஆளலாமா? என்கிறார் அமித்ஷா. இதைச் சொல்ல இவர் யார்? இவர் குஜராத்காரர்தானே? ஒடிசாவில் இவருக்கு என்ன வேலை?
ஆகவேதான் சீமான் அந்தக் கருத்தை உடனடியாக பிடித்து பதிலடி கொடுத்தார். அவர் இதைத்தானே தமிழ்நாட்டில் சொன்னார். உடனே பிரிவினை சக்திகள் எனச் சொன்னவர்கள் யார்?
தமிழ்நாட்டிலிருந்து ஒடிசாவுக்குப் போன விகே பாண்டியன் என்ற அதிகாரி தனது திறன் அனைத்தையும் அந்த மாநிலத்திற்காகக் கொடுத்திருக்கிறார். இந்தத் தேர்தலில் அவர் போட்டியிடவே இல்லை. நவீன் பட்நாயக் கட்சி பொறுப்பை அவர் எடுத்துக் கொள்ளவே இல்லை. எதற்கு தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் ஒடிசாவை ஆளலாமா? என்று பேசுகிறார் அமித்ஷா.
தமிழ்நாட்டுக்கு வந்தால், இங்கிருந்து ஒருவர் பிரதமராக வர வேண்டும் என்று பேசும் அமித்ஷா, ஒடிசாவில் ஒரு தமிழர் ஆளக் கூடாது என்கிறார். ஏன் இந்த இரட்டை வேடம்?
ஆக, அடுத்த கட்சிகளின் ஓட்டு வங்கியைத் திருடி வளரப் பார்க்கிறது பாஜக. அண்ணாமலையை மாநிலத்தின் தலைவராக வளர்க்க 150 கோடியைச் செலவு செய்துள்ளது பாஜக. அவர் வளர்ந்துவிட்டாரா? தேர்தல் முடிவுகள் வந்த பிறகு அவர் எங்கே போகிறார் எனப் பொறுத்திருந்து பாருங்கள்" என்று பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications