பிக்பாஸில் வென்று “நோ யூஸ்”.. கொண்டாடப்படும் விக்ரமன்! விஜய் பாடலை வைத்து தன்னை தானே புகழும் அஜீம்
பிக்பாஸில் வெற்றிபெற்ற அஜீம் தன் ட்விட்டர் பக்கத்தில் விஜய்யின் பீஸ்ட் படத்தின் பாடலை வைத்து தன்னை தானே புகழ்ந்து இருக்கிறார்.
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6 வது சீசன் கடந்த வாரம் நிறைவடைந்த நிலையில், தமிழ் மக்கள் பலரால் வெற்றிபெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட விக்ரமன் கையை உயர்த்தாமல், பலரால் விமர்சிக்கப்பட்ட அஜீமின் கையை உயர்த்தி கமல்ஹாசன் வெற்றியாளர் என்று அறிவித்தது இன்று வரை விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில், அஜீம் தன் ட்விட்டர் பக்கத்தில் தன்னை தானே புகழ்ந்து வருகிறார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பத்திரிகையாளரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளருமான விக்ரமன், சீரியல் நடிகர் அசீம், மக்கள் தரப்பிலிருந்து வந்த ஷிவின் ஆகியோர் இறுதிப் போட்டிக்கு முன்னேறினர்.
இதில் கலந்துகொண்ட விக்ரமன் தொடர்ந்து பிற்போக்கான கருத்துக்கள் தெரிவித்தாலோ, உருவ கேலி, பாலின கேலி, தொழிலை கேலி செய்வது போன்று தரக்குறைவாக யாராவது பேசினாலோ அதை கண்டித்து நெறிப்படுத்தி வந்தார்.
நாடாளுமன்றத்தில் ஒரு பிக்பாஸ் வீடு.. பட்ஜெட்டுக்கு முன் அல்வா தயாரிப்பது ஏன்? வெளியான சுவாரசியம்!
தவறை தட்டிக்கேட்ட விக்ரமன்
அதேபோல் குறிப்பிட்ட தரப்பினர், சமூகத்தினர் மீது மேம்போக்காக விமர்சித்தாலும் முதலில் அதை தட்டிக்கேட்டது விக்ரமன் தான். ஒரு முறை போட்டியாளர் ஷிவின் மீன்காரிபோல் கத்தாதே என சொன்னதை கண்டித்தது தொடங்கி, அந்நியன் படத்தில் பிற்போக்கான கருத்துக்கள் இருந்ததால் அந்த கதாப்பத்திரத்தில் தன்னுடைய கொள்கைக்கு உடன்பாடு இல்லை என கூறியது வரை பல விசயங்களை நேரடியாக கண்டித்தவர் விக்ரமன்.
அறம் வெல்லும்
இதனால் விக்ரமனை கொண்டாடி தீர்த்த மக்கள், அவர் தெரிவித்த அறம் வெல்லும் என்ற வார்த்தையை பொங்கல் அன்று கோலத்தில் எழுதினார்கள். சமூக வலைதளங்களில் அதிகளவில் டிரெண்ட் செய்தார்கள். ஆனால், அஜீமோ பிக்பாஸ் நிகழ்ச்சியின் அறிமுக நாளிலேயே "எங்குப் பிறப்பினும் தமிழன் தமிழனே இங்குப் பிறப்பினும் அயலான் அயலானே" என்று கமல்ஹாசன் முன்னிலையில் இனப்பெருமை பேசி கமல்ஹாசனால் ஆட்சேபிக்கப்பட்டார்.
அஜீமை கண்டித்த கமல்
இதே கருத்தை கமல்ஹாசன் கண்டித்த பிறகும் வீட்டிற்குள் மீண்டும் பல முறை அசீம் பேசினார். அதையும் எதிர்த்தவர் விக்ரமன். இதேபோல், விக்ரமன் அரசியல்வாதி என்பதால் அவரை கட்டப்பஞ்சாயத்து என்று விமர்சனம் செய்தது, ஆயிஷாவை ஒருமையில் மரியாதை குறைவாக பேசியது, கையை உயர்த்தி பேசாதே என்று ஆணாதிக்கத்துடன் சத்தம் போட்டது, கமல்ஹாசன் முன்னிலையிலேயே விக்ரமனின் சமூகம் குறித்து பேசியது, ஷிவினை அவரது பாலினம் சார்ந்து விமர்சித்தது என வாரந்தோறும் சர்ச்சைகளில் சிக்கி வந்தார் அஜீம்.
அத்துமீறிய அஜீம்
அதேபோல், தன்னுடைய தவறை சுட்டிக்காட்டுபவர்கள் வயதுக்கு குறைவானவர்களாக இருந்தால் அதை வைத்து விமர்சிப்பது, ராப் பாடகரான எடிகேவின் தொழிலை விமர்சித்தது, நகைச்சுவை கலைஞரான அமுதவானின் நடவடிக்கைகள்போல் கேலி செய்து நடித்துகாட்டி இழிவுபடுத்தியது, ஒருமையில் பேசியது, பிறருக்கு மரியாதை கொடுக்காமல் தனக்கு மட்டும் பிறர் மரியாதை கொடுக்க வேண்டும் என எதிர்பார்த்தது, தற்பெருமை பேசுவது என அஜீமின் நடவடிக்கைகள் மக்களை முகம் சுழிக்க வைத்தன.
என் மாமா எம்.எல்.ஏ.
குறிப்பாக, கோடிக்கணக்கான மக்கள் பார்க்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் விவாகரத்து செய்த தன்னுடைய மனைவியின் பெயருக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் ஆடை கட்டுப்பாடு பற்றி அநாகரீகமாக பேசினார் அஜீம். அதேபோல் விக்ரமன் இருக்கும் கட்சியில் என்னுடைய தாய் மாமா எம்.எல்.ஏ என்று அவர் சொன்ன நிலையில், விசிக எம்.எல்.ஏ. ஆளுர் ஷாநவாஸ் அதற்கு மறுப்பு தெரிவித்ததன் மூலம் அவர் பொய் சொன்னது அம்பலமானது.
திமிரு பிடித்த தமிழன்
பல முறை கமல்ஹாசன் மற்றும் சக போட்டியாளர்களால் கண்டிக்கப்பட்ட பிறகும் மன்னிப்பு கேட்டுவிட்டு மீண்டும் அதே தவறை செய்வதை 106 நாட்களாக செய்து வந்த அஜீம், தன்னை பற்றி பல இடங்களில் தற்பெருமை பேசி வந்தார். இதை வீட்டிலேயே விக்ரமன் விமர்சித்தார். ஆனால், திமிரு பிடித்த தமிழன் என்ற ஹேஷ்டேக் டிரெண்ட் ஆக வேண்டும் என்று வீட்டிலேயே விருப்பம் தெரிவித்தார் அஜீம்.
அதிர்ச்சியளித்த பிக்பாஸ் முடிவு
இதனை அடுத்து கடந்த வாரம் நடைபெற்ற பிக்பாஸ் இறுதிப்போட்டியில் தமிழ் மக்கள் எதிர்பார்த்ததற்கு மாறாக அஜீம் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். இதனை ஏற்காத மக்கள் சமூக வலைதளங்கள் விஜய் டிவியை புறக்கணிக்க வேண்டும் என்று கருத்திட்டனர். ஒரு வாரமாகியும் அஜீமின் வெற்றியை எதிர்த்தும் விக்ரமனை கொண்டாடியும் அவர்கள் கருத்திட்டு வருகின்றனர்.
விக்ரமனை கொண்டாடும் மக்கள்
யூடியூப் சேனல்களும் போட்டிப்போட்டுக்கொண்ட விக்ரமனை நேர்காணல் எடுத்தும், ரசிகர் சந்திப்பு நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகின்றன. மறுபக்கம் அஜீமோ ட்விட்டரில் மட்டுமே பேசியும் எழுதியும் வருகிறார். அதிலும் மக்கள் நாயகன் அஜீம் என்று தன்னை தானே புகழ்ந்து அவர் ஹேஷ்டேக் பதிவிட்டு வருகிறார். இந்த நிலையில் இன்று ட்விட்டரில் ஒரு பதிவை அஜீம் வெளியிட்டு இருக்கிறார்.
அஜீமின் தற்புகழ்ச்சி
அதில், "பிக்பாஸில் வெற்றிபெற்று ஒரு வாரம் ஆகிவிட்டது.
பல பேரின் மொகமா
நின்னு ஆடுற புலி தானே
வெளயாட நெனச்சா
உன் விதி முடிப்பானே
சில பேரின் பெயர் தான்
ஒரு ஆளுமை பெருமானே
ஒரு வீரன் தடமே
நீ காயம் வாங்குற எடமே" என்று பீஸ்ட் படத்தில் விஜய்க்கு வரும் பாடல் வரிகளை குறிப்பிட்டு #MakkalNayaganAzeem என்னும் ஹேஷ்டேக்குடன் தன்னை தானே புகழ்ந்து இருக்கிறார்.