விடாதே.. கெட்டியா பிடிச்சுக்கோ அப்படித்தான்.. சூப்பர்.. இந்தக் கரடியைப் பாருங்க, கத்துக்கங்க!
சென்னை: எங்கோ ஒரு பனிப்பிரதேசத்தில் தாய் கரடி ஒன்று பனிமலையை கடக்கும் நிலையில் அந்த கரடியை பின்பற்றி அதன் குட்டி பல்வேறு தோல்விகளுக்கு மத்தியில் மலை உச்சியை அடைந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.
ஒரு பனிப்பிரதேசத்தில் பெரிய பனிமலை உள்ளது. அந்த பனிமலையை ஒரு தாய் கரடி குட்டி கரடியை அழைத்து கொண்டு அந்த பனிமலையை கடக்க செல்கிறது.
அப்போது தாய் கரடியுடன் மிகவும் குஷியாக குட்டி கரடி செல்கிறது. பின்னர் தாய் கரடி லாவகமாக பனிமலையில் ஏறுகிறது. குட்டிக் கரடியோ தத்தி தடுமாறி சில தூரம் கடக்கிறது. பின்னர் சரிகிறது.

குட்டியை பார்க்கும் தாய்
சரிந்தவுடன் குட்டியை பார்க்கும் தாய் தன் பார்வையால் குட்டிக்கு ஊக்கத்தை அளிக்கிறது. இந்த ஊக்கம் மற்றும் தனது தன்னம்பிக்கையுடன் மீண்டும் ஏறுகிறது குட்டி. மீண்டும் சறுக்கல். இப்படியே பரமபத விளையாட்டு ஏணியில் ஏறுவதும் பாம்பு மூலம் சறுக்குவதும் போல் உள்ளது.

இழக்காமல்
தாய் கரடி உச்சத்தை அடைய உள்ளது. அதை பார்க்கும் குட்டி கரடி தன்னை அம்மா தனியாக விட்டு விட்டு சென்றுவிடுவாரோ என்ற பயத்துடன் தன்னம்பிக்கையை இழக்காமல் மீண்டும் ஏறுகிறது.

ஆரம்பித்த இடம்
மலை உச்சியை அடைய உள்ள தாயுடன் சிறிய மீட்டர் தூரத்திலேயே குட்டி செல்கிறது. எப்படியும் இலக்கை அடைந்து விடுவோம் என்று எண்ணும் குட்டியின் சந்தோஷம் நிலைக்கவில்லை. ஆம் தொபுகடீரென சரிந்து ஆரம்பித்த இடத்தை விட பின்தங்கி விழுந்து விடுகிறது.

முகத்தில் எத்தனை சந்தோஷம்
அதற்குள்ளாக தாய் உச்சியை அடைந்துவிடுகிறது. அப்போது தாய் கரடி தனது குட்டியை பார்த்து கொண்டே மேலே நிற்கிறது. இது குட்டி கரடிக்கு ஆறுதலை அளித்திருக்கும். எனவே இந்த முறை விடாமல் தாய் பயணம் செய்த பாதையை கெட்டியாக பிடித்து கொண்டு தாய் இருக்கும் இடத்தை அடைகிறது. அதன் முகத்தில் எத்தனை சந்தோஷம்.
|
வேகமாக பரவும் வீடியோ
இந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. சின்னஞ்சிறிய கரடி எத்தனை தோல்விகளுக்கு மத்தியில் தனது இலக்கை அடைந்துள்ளது, அதன் தன்னம்பிக்கை, விடா முயற்சியை கண்டு மனிதர்களாகிய நாமும் எத்தனை சோகம் வந்தாலும் துவண்டு விடாமல் வெற்றி என்ற இலக்கை அடைய வேண்டும்.












Click it and Unblock the Notifications