அட்டை பெட்டியில் குழந்தை உடல்.. நடந்தது இதுதான்! சுகாதாரத்துறை மீது தப்பு இல்லை.. அமைச்சர் விளக்கம்
சென்னை: கேஎம்சி மருத்துவமனையில் அட்டைப்பெட்டியில் வைத்து குழந்தையின் உடல் தந்தையிடம் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இந்த விவகாரத்தில் சுகாதாரத்துறை தவறு ஏதும் இல்லை என்று அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை கே.எம்.சி மருத்துவமனையில் இறந்த பெண்குழந்தையின் உடலை துணியில் சுற்றி கொடுக்காமல் அட்டைபெட்டியில் வைத்து கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அரசு மருத்துவமனையில் இறந்த குழந்தையின் உடலுக்கு நேர்ந்த அவலம் தொடர்பாக கடும் விமர்சனங்கள் எழுந்த நிலையில், பிணவறை ஊழியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இது தொடர்பாக விசாரணை நடத்த குழுவையும் சுகாதாரத்துறை அமைத்துள்ளது. இந்த நிலையில், இந்த விவகாரத்தில் சுகாதாரத்துறை தவறு ஏதும் இல்லை என்று அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் மா சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- புயல் அடித்துக் கொண்டு இருந்த காரணத்தால் தன்னுடைய மனைவிக்கு சுய பிரவசம் பார்க்க முயன்று இருக்கிறார்கள்.
அந்த குழந்தையை வெளியே எடுக்க எராளமான முயற்சிகள் மேற்கொண்டு குழந்தை கர்பபையிலேயே இறந்து இருக்கிறது. அதற்கு பிறகுதான் ஒரு தனியார் மருத்துவமனைக்கு போயிருக்கிறார்கள். அங்கே முடியாது என்று சொன்னவுடன் இங்கே வந்து இருக்கிறார்கள். இதில் என்ன பெரிய தவறு நடந்து இருக்கிறது என்றால் பிணவறையில் இருக்கும் ஊழியர், அந்த சிசுவை போலீசில் புகார் அளித்துவிட்டு அட்டை பெட்டியில் வைத்து கொடுத்ததுதான் பெரிய தவறு.
அட்டை பெட்டியில் துணி சுற்றி கொடுத்ததாக சொல்கிறார்கள். எது உண்மை என்று விசாரிக்க சொல்லியிருக்கிறோம். பெட்டியில் வைத்து எடுத்து வந்தது மழைக்கு பாதுகாப்பு என்று மருத்துவர்கள் சொன்னாலும் கூட இதுஏற்றுக்கொள்ளக் கூடியது இல்லை. இதனால்தான் பணியாளரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து இருக்கிறோம். மூன்று மருத்துவர்களை விசாரிக்க சொல்லியிருக்கிறோம். இதை ஒரு பெரிய பூதாகரமான விஷயமாக்கியிருக்கிறார்கள்.
இறந்தே பிறந்த குழந்தை..பெண் குழந்தை என்பதால் போலீசில் புகார் கொடுத்து இருக்கிறார்கள். துணி சுற்றித்தான் கொடுத்து இருக்கிறார்கள். மழை பெய்து கொண்டே இருந்ததால் நனையக் கூடாது என்பதற்காக பெட்டியை வைத்து எடுத்து சென்றதாக சொல்கிறார்கள். ஆனாலும் குழந்தையை அப்படியே கொடுத்தார்களா என விசாரிக்க சொல்லியிருக்கிறோம். இருந்தாலும் கூட பணியிடை நீக்க சொல்லியிருக்கிறோம். ஆம்புலன்ஸ் கிடைக்கவில்லை. தனியார் மருத்துவமனையில் மின்சாரம் தட்டுப்பாடு என சொல்வது குறித்து கேட்கிறீர்கள். அன்றைக்கு சூழல் உங்களுக்கே தெரியும்.

58 செ.மீட்டர் மழை பெய்தது. மருத்துவமனையில் தண்ணீர் நின்றால் கரண்ட் இருந்து இருக்காது. அதனால் ஏற்பட்டதுதானே தவிர.. மழை மீது குற்றம் சாட்ட முடியுமா.. வீட்டிலேயே சுகப்பிரசவத்திற்கு முயற்சி செய்து குத்தி குத்தி எடுத்தது போன்ற தகவலை குழந்தையின் தந்தையே கூறியுள்ளார். அந்த பேட்டியிலேயே அவர் தெளிவாக கூறியிருக்கிறார். மருத்துவத்துறையின் தவறு இதில் எதுவும் இல்லை.
மழையும், அன்றைக்கு ஏற்பட்ட பெரிய அளவில் ஏற்பட்ட அந்த பேரிடரும் தான் முக்கியமான காரணம் என்பதை. சமூக வலைத்தளத்தில் பெரிய செய்தியாக ஆக்கிக்கொண்டிருக்கிறவர்கள் கொஞ்சம் சிந்தித்து பார்க்க வேண்டும். இது எதையுமே நினைத்து பார்க்காமல் அட்டைப்பெட்டியில் குழந்தையை தூக்கிக்கொண்டு செல்கிறார்கள் என்று பெரிய அளவில் பூதாகரமாக்கி கொண்டிருப்பது என்பது சரியானதா என்பதை சமூக வலைத்தளத்தில் இருப்பவர்கள் நினைத்து பார்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications