கொடுக்கிற தெய்வம் கூரையை பிய்ச்சுகிட்டு கொடுக்கும் என்பார்களே! அது போன்ற கதை ஒன்று அதிமுகவில்!
சென்னை: அதிமுகவில் ராஜ்யசபா சீட் கேட்டு நூற்றுக்கணக்கான முக்கியப் பிரமுகர்கள் கடிதம் கொடுத்துவிட்டு காத்திருந்த சூழலில், சீட்டே கேட்காத ஒருவரை களமிறக்கி இது தான் அதிமுக என்பதை நிரூபித்துள்ளது அக்கட்சியின் தலைமை.
நடிகர் தனுஷின் புதுப்பேட்டை திரைப்படத்தில் வரும் பிரபல வசனமான 'யாருடா இவன்' என்பதை போல், அதிமுக ராஜ்யசபா வேட்பாளர் தருமர் குறித்து 'யார் இவரு' என சொந்தக்கட்சியினரே விவாதிக்கத் தொடங்கியுள்ளனர்.
அதிமுகவில் அறிவிக்கப்படவுள்ள இரண்டு ராஜ்யசபா வேட்பாளர்களில் ஒருவர் முக்கிய பிரமுகராகவும் மற்றொருவர் கட்சியில் சாதாரண பொறுப்பில் உள்ள கீழ்மட்ட நிர்வாகியாகவும் இருப்பார் என்ற தகவலை ஒன் இந்தியா தமிழ் தான் முதல்முறையாக கூறியிருந்தது. நேற்று அது தான் நடந்திருக்கிறது.

ராமநாதபுரம் மாவட்டம்
ராமநாதபுரம் மாவட்ட முதுகுளத்தூர் யூனியன் சேர்மனாகவும் அதிமுகவில் ஒன்றியச் செயலாளராகவும் இருப்பவர் தருமர். ஜெயலலிதா காலத்தில் இவர் அதிமுக மாவட்டச் செயலாளராகவும் இருந்திருக்கிறார். முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்த இவர் ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர விசுவாசி. இந்நிலையில் ராஜ்யசபா சீட்டே கேட்காத இவருக்கு நேற்று மாலை 6 மணிக்கு மேல் தான் அதிமுக தலைமைக் கழகத்தில் இருந்து சென்னைக்கு வருமாறு அழைப்பே சென்றிருக்கிறது. அதன் பின்னர் தான் ராஜ்யசபா வேட்பாளர் விவரமும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தருமருக்கு சீட்
இந்த தகவலை அறிந்த தருமர் அப்படியே மகிழ்ச்சியில் திக்குமுக்காடிவிட்டாராம். முன்னாள் அமைச்சர்களின் வாரிசுகளும், வழக்கறிஞர்களும், முக்கிய நிர்வாகிகளும் ராஜ்யசபா சீட் கனவு கண்ட நிலையில் அவர்களின் கனவை தகர்த்தெறிந்து மாநிலங்களவை உறுப்பினராக டெல்லிக்கு செல்லவுள்ளார் தருமர். கொடுக்கிற தெய்வம் கூரையை பிய்ச்சுகிட்டு கொடுக்கும் என்பார்களே, அது போன்ற ஒரு நிலை தான் தருமர் விவகாரத்தில் ஏற்பட்டுள்ளது.

இது தான் அதிமுக
இதனிடையே நடிகர் ராஜசேகரின் இது தாண்டா போலீஸ் திரைப்படத்தின் தலைப்பை போல் அதிமுக ஐடி விங் நிர்வாகிகள் இது தாண்டா அதிமுக என பெருமிதம் தெரிவித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். கட்சிக்காக உழைக்கும் கடைக்கோடி தொண்டனும் நிர்வாகியும் கூட உயர்ந்த இடத்துக்கு வர முடியும் என்பது அதிமுகவில் மட்டுமே சாத்தியம் என அவர்கள் சமூக வலைதளங்களில் பரப்புரை நிகழ்த்த ஆரம்பித்துள்ளனர்.

ஓ.பி.எஸ்.க்கு முக்கிய பங்கு
தருமருக்கு ராஜ்யசபா சீட் கொடுக்கப்பட்டதன் பின்னணியில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு முக்கிய பங்குண்டு. தர்மயுத்தத்தின் போதும் அதற்கு பிறகும் அவரை நம்பி சென்றவர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் ஓ.பி.எஸ். பெரிதாக எதையும் செய்யவில்லை என்ற பேச்சு இருந்தது. அதனை இந்த முறை பொய்யாக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த ஓ.பி.எஸ். போராடி வாதாடி தனது ஆதரவாளர் ஒருவரை எம்.பி.யாக ஆக்கி அழகு பார்க்கவுள்ளார்.

சேர்மன் பதவி
ராஜ்யசபா சீட் எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்த முக்கிய நபர்களை மட்டும் சமாதானப்படுத்தும் வேலையில் இறங்கியுள்ளது அதிமுக தலைமை. இதனிடையே முதுகுளத்தூர் யூனியன் சேர்மன் பதவியை தருமர் ராஜினாமா செய்யவுள்ள நிலையில், அப்பதவியை கைப்பற்ற அங்கு போட்டி உருவாகியுள்ளது.












Click it and Unblock the Notifications