பிரதமர் மோடி என்ன ஜாதி தெரியுமா? ராகுல் வெளுத்த விளாசலில் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் விளக்கம்!
டெல்லி: பிரதமர் மோடி ஓபிசி (OBC, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு) வகுப்பை சேர்ந்தவரே இல்லை என மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முன்வைக்கும் விமர்சனங்களுக்கு தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
மணிப்பூர் முதல் மகாராஷ்டிரா வரை பாரத் ஜோடோ நியாய யாத்திரை நடத்தி வருகிறார் ராகுல் காந்தி. தமது யாத்திரையின் போது பேசிய ராகுல் காந்தி, பிரதமர் மோடி ஒரு நாளைக்கு 3 முறை உடை மாற்றி, ரூ9 லட்சம் மதிப்புள்ள சூட் அணிந்து, ரூ 1.5 லட்சம் மதிப்புள்ள பேனாவால் எழுதும் மோடிக்கு, OBC என்றால் - 'ஒன்லி பிசினஸ் கிளாஸ்'. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அவர்களால் ஒருபோதும் நீதி வழங்க முடியாது.

தேர்தலுக்காக சான்றிதழில் OBCக்கள் ஆனவர்கள், தங்கள் ஆட்சி நாட்களை எண்ண வேண்டியது தான், ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நாங்கள் எடுத்துக் காட்டுவோம். தமது நண்பர்களுக்கு" நாட்டின் செல்வத்தால் நிரப்பப்பட்ட கருவூலம், இளைஞர்களுக்கு 'வேலையில்லா திண்டாட்டம்' என்ற நோய் கொடுத்தவர்தானே மோடி. மோடி பிறப்பால் அல்ல, அவர் 'பேப்பரால் OBC'. அவர் பிறந்து 50 ஆண்டுகள் வரை அவர் OBC ஆக இருக்கவில்லை. என்னுடைய இந்த உண்மையை உறுதி செய்த பாஜக அரசுக்கு நன்றி என கூறியிருந்தார்.
இதற்கு தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் தெரிவித்த பதில்: 91 (ஏ) வட்டாரப் பட்டியலில் மோத் காஞ்சி சாதி உள்ளது. 91 (ஏ) வட்டாரப் பட்டியலில் மோத் காஞ்சி சாதி (Modh-Ghanchi) உள்ளது. பிற்படுத்தப்பட்டோருக்கான தேசிய ஆணையம் 15.11.1997 அன்று மத்திய அரசுக்கு குஜராத் மாநிலத்திற்கான இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான மத்திய பட்டியலில் மோத் காஞ்சி இனத்தை சேர்க்க ஆலோசனை வழங்கி, அதற்கான அரசிதழ் அறிவிக்கை 27.10.1999 அன்று வெளியிடப்பட்டது. பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான தேசிய ஆணையச் சட்டம், 1993-ன்படி, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான மத்திய பட்டியலில் எந்தவொரு சாதி / சமூகத்தையும் சேர்க்க வேண்டும் என்ற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான தேசிய ஆணையத்தின் ஆலோசனை பொதுவாக மத்திய அரசைக் கட்டுப்படுத்தும்.
குஜராத் மாநிலத்திற்கான இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் மத்திய பட்டியலில் மோத் காஞ்சி சாதி உட்பட 104 சாதிகள் / சமூகங்கள் உள்ளன. ஓ.பி.சி.க்களின் மாநிலப் பட்டியலிலும், இதர பிற்படுத்தப்பட்டோரின் மத்தியப் பட்டியலிலும் மோத்-காஞ்சியை சேர்ப்பதற்கான மேற்கண்ட இரண்டு முடிவுகளும் எடுக்கப்பட்டபோது, நரேந்திர மோடி சட்டமன்ற அல்லது நிர்வாகப் பதவியை வகிக்கவில்லை. இவ்வாறு தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் விளக்கம் தந்துள்ளது.












Click it and Unblock the Notifications