வெயில் தாங்க முடியலையே.. இன்னும் வெளுக்க போகுதாமே.. வானிலை மையம் சொல்வதை கேளுங்க
சென்னை: அக்னி நட்சத்திரம் முடிந்த பின்னரும் தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் வெளியில் அதிகமாக பதிவாகி வரும் நிலையில், மேலும் ஒரு நாட்களுக்கு இதே நிலைமைதான் நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் 4ம் தேதி அக்னி வெயில் தொடங்கியது. ஆனால் இந்த வெயில் தொடங்குவதற்கு முன்னரே மாநிலம் முழுவதும் கடுமையான வெயில் வாட்டி எடுக்க தொடங்கிவிட்டது. பல மாவட்டங்களில் வெயில் சதமடிக்க தொடங்கிவிட்டது. இதனையடுத்து, அக்னி நட்சத்திரம் தொடங்கியது. வழக்கம்போல வெயிலும் வாட்டியது. அன்றாடம், பணிக்கு செல்வோர், கூலி தொழிலாளிகள், தள்ளு வண்டி வியாபாரிகள் என அனைத்து தரப்பு மக்களும் இந்த வெயிலால் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் அக்னி கடந்த 26ம் தேதி முடிவடைந்தது. இருப்பினும் வேலூர் மட்டுமல்லாது சென்னை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை கடந்து பதிவாகி வருகிறது. கடந்த சில நாட்களாக சென்னையில் வெயில் 104 டிகிரி எனும் அளவுக்கு வீசி வருகிறது. எனவே இன்று திறக்கப்பட இருந்த பள்ளிகள் 14ம் தேதி திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்திருக்கிறார். அதேபோல, மாணவர்கள் வெயிலில் அலைய வேண்டாம் என்றும் பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறுகையில், "தற்போதைய இந்த அதீத வெப்ப நிலைக்கு வறண்ட மேற்கு திசை காற்றுதான் காரணம். பொதுவாக மே மாதம் முடிந்துவிட்டால் வெப்பம் குறைந்துவிடும் என பலரும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், இது ஜூன் மாதம் வரை நீடிக்கும். கடந்த ஆண்டுகளில் இதுபோன்று அதீத வெப்பம் இதே மாத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

குறிப்பாக கடந்த 2019ம் ஆண்டு, ஜூன் மாத்தின் 14 நாட்கள் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெப்பநிலை 104 டிகிரியை தொட்டிருந்தது. எனவே இந்த வெப்பநிலை குறித்து கவலையடையாமல் இதிலிருந்து தற்காக்கும் வழிகளை பின்பற்ற வேண்டும். இன்றும் இரண்டு நாட்களுக்கு இதே அளவு வெயில் நீடிக்கும். பின்னர் காற்றின் திசை மாறுபாடு காரணமாக வெப்பநிலை குறைய வாய்ப்பு இருக்கிறது" என்று கூறியுள்ளார்.
இந்த அதீத வெப்பம், அம்மை, டைபாய்டு, அக்கி, ஹீட் ஸ்ட்ரோக், ஃபுட் பாய்ஸனிங் போன்ற நோய்கள் ஏற்படுகிறது. இதில் பெரும்பாலானோர் சந்திக்கும் பிரச்னை ஃபுட் பாய்ஸனிங்தான். வெயில் காலத்தில் உணவுகள் வேகமாக கெட்டுபோய்விடும். எனவே உணவு விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம் என்று மருத்துவர்கள் எச்சரித்து வருகின்றனர். மட்டுமல்லாது, ஒரு நாளைக்கு 13-15 டம்ளர் தண்ணீரை எடுத்துக்கொள்வதை உறுதி செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications