விஷமாகும் ருசியான உணவு.. மயோனைஸ் தடை மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு.. தமிழக அரசு உத்தரவு!
சென்னை: பச்சை முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மயோனைஸுக்கு விதிக்கப்பட்ட தடையை மேலும் ஓராண்டு காலத்திற்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சால்மோனெல்லா டைபிமிரியம் போன்ற தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களால் மாசுபடுவதால், மயோனைஸ் உணவுப்பொருளுக்கு தடை விதிக்கப்பட்டது.
மேலை நாட்டு உணவு வகைகளில் முக்கிய பங்கு வகிக்கிறது மயோனஸ். இது தற்போது இந்தியாவிலும் அதிகமான மக்களால் விரும்பப்படும் உணவாகி விட்டது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மயோனைஸை விரும்பி சாப்பிடுகின்றனர். பெரும்பாலும் மயோனைஸ் முட்டையை பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது. தந்தூரி, கிரில், பார்பிக்யூ, ஷவர்மா வகைகள், பொரித்த சிப்ஸ், ஃப்ரென்ச் ஃப்ரைஸ் உள்ளிட்ட உணவுகளுடன் மயோனைஸ் பயன்படுத்தப்படுகிறது

முட்டையின் வெள்ளைக் கருவுடன், வெஜிடபிள் ஆயில், வினிகர் சேர்த்து மயோனைஸ் தயாரிக்கப்படுகிறது. பச்சை முட்டையைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் மயோனைஸில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களால் மயோனைஸ் மாசுபடுவதால் முட்டையில் இருந்து தயாரிக்கப்படும் மயோனைஸ்க்கு ஓராண்டு தடை விதித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.
உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம், 2006-ன் பிரிவு 30 (2) (a) படி முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மையோனைஸ் வகைகளுக்கு ஓராண்டு காலம் தடை விதிக்கப்படுகிறது. பொதுமக்கள் நலன் கருதி தமிழ்நாட்டில் எந்த பகுதியிலும், மையோனைஸ் உற்பத்தி செய்வது, சேமித்து வைப்பது, விநியோகம் செய்வது, விற்பனை செய்வது உள்ளிட்டவைகளுக்கு தடை. இந்தத் தடை உத்தரவு கடந்த ஆண்டு ஏப்ரல் 8 ஆம் தேதியிலிருந்து ஓராண்டு காலத்திற்கு அமலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த தடையை மேலும் ஓராண்டு காலத்திற்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தமிழகம் முழுவதும் உள்ள உணவகங்கள், கேட்டரிங் சேவைகள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் உட்பட அனைத்து உணவு நிறுவனங்களும் பச்சை முட்டை அடிப்படையிலான மயோனைஸ் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை 2027 ஏப்ரல் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மயோனைஸ் தயாரிப்பில் பச்சை முட்டைகளைப் பயன்படுத்துவதால் சால்மோனெல்லா போன்ற நோய்க் கிருமிகளால் மாசுபடும் அபாயம் அதிகமாக உள்ளதால், உணவு விஷமாக மாறவும் வழிவகுக்கும் எனவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் தரமற்ற மயோனைஸ் சாப்ப்பிட்ட பெண் ஒருவர் பலியானதால் அதிரடி ஆய்வுகள் நடத்தப்பட்டு இந்த தடை அமல்படுத்தப்பட்டது.












Click it and Unblock the Notifications