Amit shah visit: அமித் ஷா வருகைக்கு மத்தியில் திடீரென முளைத்த பேனர்கள்.. வாசகத்தை கவனிச்சீங்களா?
சென்னை: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மதுரைக்கு வருகை தந்துள்ள நிலையில், சென்னை மற்றும் மதுரையில் வைக்கப்பட்டுள்ள பேனர்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. "எங்க தமிழ்நாடு எப்பவுமே டெல்லிக்கு Out of Control தான்" என்ற வாசகத்துடன் பிரமாண்ட பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.
அடுத்த ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜக தன் கவனத்தை தமிழகத்தின் பக்கம் திருப்பியுள்ளது. தமிழ்நாட்டில் கூட்டணிக் கட்சிகளை சேர்ப்பதிலும், பாஜகவை கட்டமைப்பு ரீதியாக பலப்படுத்தும் பணிகளையும் உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரடியாக கவனித்து வருகிறார்.

மதுரைக்கு வந்துள்ள அமித் ஷா
இந்நிலையில் மதுரையில் பாஜக மாநில, மாவட்ட, மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்று, கட்சியினருக்கு பல்வேறு ஆலோசனை வழங்க இருக்கிறார் அமித் ஷா. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வியூகங்கள் வகுப்பது தொடர்பாக கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்க உள்ளார் அமித் ஷா.
மதுரையில் நடந்த திமுக பொதுக்குழுக் கூட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு பதில் தரும் வகையில் அமித்ஷாவின் இன்றைய பேச்சு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பல திட்டங்களுடனும் அமித் ஷா மதுரைக்கு வந்திருப்பதாக கூறப்படுகிறது.
பரபர பேனர்கள்
இந்நிலையில், அமித் ஷாவின் தமிழக வருகையின்போது, சென்னை, மதுரையில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. "எங்க தமிழ்நாடு எப்பவுமே டெல்லிக்கு Out of Control தான்", "டெல்லி படையெடுப்புக்கு ஒருபோதும் தமிழ்நாடு வீழாது" போன்ற வாசகங்களுடன் பிரமாண்ட பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.
முன்பு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழ்நாட்டுக்கு வருகை தந்தபோது பேசிய விஷயங்களுக்கு எதிராக தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பேசியிருந்த விஷயங்களே இந்த பேனர்களில் வாசகங்களாக இடம்பெற்றுள்ளன. இந்த பேனர்களை, அமித் ஷா வருகையை ஒட்டி திமுகவினர் அமைத்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

ஸ்டாலின் பேசியது
கடந்த ஏப்ரல் மாதம் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பேசிய தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், "ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா 2026-ல் நாங்கள் தான் ஆட்சி அமைப்போம் என்று நாடாளுமன்றத்தில் பேசுகிறார். தமிழ்நாட்டிற்கு வந்து அதை சொல்லிவிட்டுப் போயிருக்கிறார். நான் அவருக்கு சவாலாக ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். டெல்லியின் ஆளுகைக்கு தமிழ்நாடு என்றைக்குமே அடிபணியாது.
அப்படி ஒரு தனி குணம், ஒரு தனித் தன்மை கொண்டவர்கள் நாங்கள். மற்ற மாநிலங்களுக்குச் சென்று அங்கே உள்ள கட்சிகளை உடைத்து, ரெய்டு மூலமாக மிரட்டி, ஆட்சி அமைக்கின்ற உங்களுடைய ஃபார்முலா இங்கே தமிழ்நாட்டில் வேலைக்கு ஆகாது. நீங்கள் ஏமாற வேண்டாம். 2026-ல் திராவிட மாடல் ஆட்சி தான். எங்களுடைய தமிழ்நாடு எப்போதுமே டெல்லிக்கு out of control தான்.
எந்த ஷாவாக இருந்தாலும் - ஸ்டாலின்
இங்கே இருக்கக்கூடியவர்கள் சிலரை மிரட்டி, கூட்டணி வைத்துக் கொண்ட நீங்கள் ஜெயிக்க முடியுமா? உங்கள் பரிவாரங்கள் எல்லோரையும் சேர்த்துக் கொண்டு வாருங்கள். ஒரு கை பார்ப்போம். நாங்கள் இந்த உருட்டல், மிரட்டல்களுக்கு எல்லாம் அடிபணிகின்ற அடிமைகள் அல்ல. அமித்ஷா அல்ல.. எந்த ஷா-வாக இருந்தாலும் சொல்கிறேன் இங்கே ஆளமுடியாது. இது தமிழ்நாடு. இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இருக்கும்வரை உங்கள் திட்டம் பலிக்காது" எனப் பேசி இருந்தார்.












Click it and Unblock the Notifications