நிலைமை கைமீறுது.. 11 பேரின் மரணத்திற்கு காரணமான ஆர்சிபி.. ஆக்சன் எடுக்க போகும் பிசிசிஐ.. திட்டம்?
பெங்களூர்: பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் ஆர்சிபி அணியின் வெற்றி ஊர்வலத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பலர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். இந்த துயர சம்பவத்தை அடுத்து, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக ஆர்சிபி அணிக்கு கடும் நெருக்கடிகள் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.
ஆர்சிபி அணி மீது கடும் நடவடிக்கை
ஐபிஎல் 2025 தொடரில் ஆர்சிபி அணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, பெங்களூர் சின்னசாமி மைதானத்திற்கு வெளியே அணிக்கு பிரம்மாண்ட வெற்றி ஊர்வலம் மற்றும் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், எதிர்பாராதவிதமாக மைதானத்திற்கு வெளியே கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து ஆர்சிபி அணி மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. கர்நாடக கிரிக்கெட் சங்கத்தின் இரண்டு அதிகாரிகள் ராஜினாமா செய்துள்ளனர். மேலும், இந்த வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தையடுத்து, ஆர்சிபி அணிக்கு எதிராக பிசிசிஐ ஒரு பெரிய முடிவை எடுக்கக்கூடும்.
பொறுப்பேற்கும் முயற்சி
ஆர்சிபி அணி நடத்திய இந்த கூட்டத்திற்கு பிசிசிஐ அனுமதி தரவில்லை. போலீசும் அனுமதி தரவில்லை. ஏன் மாநில அரசும் நேரடியாக அனுமதி தரவில்லை. முழுக்க முழுக்க ஆர்சிபி அணியின் பேராசையால் இந்த கூட்டம் நடத்தப்பட்டது.
இந்த விபத்திற்கு ஆர்சிபி அணியின் நிர்வாகமே காரணம் என்று விசாரணை அதிகாரிகள் கண்டறிந்தால், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவும், இந்த தொடரின் நம்பகத்தன்மையை பாதுகாக்கவும் பிசிசிஐ ஆர்சிபி அணி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும். இதனால் ஆர்சிபி அதிகாரிகள் , நிர்வாகிகள் விசாரணை செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. விசாரணையின் முடிவில் ஐபிஎல் மரியாதையை காக்கும் விதமாக அணி நிர்வாகம் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
அனுமதியின்றி நிகழ்ச்சி நடத்தியவர்கள் மீது FIR
இந்த நெரிசல் தொடர்பாக கர்நாடக காவல்துறை பதிவு செய்துள்ள FIR-ல், குற்றம் சாட்டப்பட்டவர்களான RCB உரிமையாளர்கள், டிஎன்ஏ நிறுவனம் மற்றும் KSCA நிர்வாகக் குழுவினர் ஆகியோர் தேவையான அனுமதியின்றி வெற்றி விழாவை ஏற்பாடு செய்ததாகக் கூறப்பட்டுள்ளது.
பாரதிய நியாய சன்ஹிதாவின் (Bharatiya Nyaya Sanhita) பிரிவுகள் 105 (கொலைக்குக் காரணமான குற்றமில்லாத மரணம்), 115(2) (தானாக முன்வந்து காயம் ஏற்படுத்துதல்), 118(1) (ஆபத்தான ஆயுதங்கள் அல்லது வழிமுறைகளைப் பயன்படுத்தி தானாக முன்வந்து காயம் அல்லது பலத்த காயம் ஏற்படுத்துதல்), 118(2) பிரிவு 3(5)-உடன் இணைந்து (பொதுவான நோக்கத்திற்காக பல நபர்களால் செய்யப்படும்போது தானாக முன்வந்து பலத்த காயம் ஏற்படுத்துதல்), 190 (சட்டவிரோத கூட்டம்), 132 (பொது ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல்), 125(a) (பொய்யான பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தல்), மற்றும் 125(b) (மனித உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் கவனக்குறைவாக செயல்படுதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் FIR பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையில், இந்த நெரிசல் சம்பவம் தொடர்பாக கப்பன் பூங்கா காவல் நிலையத்தில் மேலும் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நெரிசலில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ரோலண்ட் கோம்ஸ் அளித்த புகாரின் அடிப்படையில், RCB உரிமையாளர்கள், KSCA மற்றும் DNA மீது BNS பிரிவு 125(a) இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications