சென்னையில் இருக்கீங்களா.. ஏர் கூலர் வாங்காதீங்க! ஏசி வாங்கலாமா? இதோ சூப்பர் டிப்ஸ்
சென்னை: சென்னை உட்பட பல மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை கடந்திருக்கிறது. வெயிலை சமாளிக்க பலரும் ஏசியை பயன்படுத்துகின்றனர். இருப்பினும், ஏர் கூலரும் நல்ல பலன் தருகிறது. இது இரண்டில் எது பெஸ்ட் என பார்ப்போம்.
ஏசியும், ஏர் கூலரும் வேலை செய்யும் விதம் வேறு, வேறு. நாம் எந்த ஊரில்/மாவட்டத்தில் இருக்கிறோம் என்பதை பொறுத்து எதை வாங்கலாம் என்பதை முடிவு செய்யலாம்.

ஏசி எப்படி வேலை செய்கிறது?
ஏசி போட்டவுடன் ரூமில் இருக்கும் காற்றை அது குளிர்விக்கிறது என்றும், இதனால்தான் ஜில்லென காற்று வருகிறது என்று நாம் நினைக்கிறோம். அதுதான் கிடையாது. ஏசி காற்றை குளிர்விப்பதில்லை. மாறாக, அது ரூமில் இருக்கும் வெப்பத்தை வெளியேற்றுகிறது.
ஒரு ஸ்பான்ஞ்ச் தண்ணீரை உறிஞ்சி ஓரிடத்தில் பிழிந்து விடுவதைப் போல, ஏசி ரூமில் உள்ள வெப்பத்தை உறிஞ்சி வெளியே பிழிந்து விடுகிறது. ரூமில் இருக்கும் சூடான காற்று ஏசியின் உள்ளே இழுக்கப்படுகிறது. அங்குள்ள குழாய்களில் குளிர்விப்பான் (Refrigerant) திரவம் ஓடிக்கொண்டிருக்கும். இந்தக் திரவம் ரூமின் வெப்பத்தை உறிஞ்சிக்கொண்டு வாயுவாக மாறுகிறது. இப்போது காற்று குளிர்ச்சியடைந்து மீண்டும் அறைக்குள் விடப்படுகிறது.
எங்கெல்லாம் பயன்படுத்தலாம்?
எனவே ஏசியை எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். சென்னை, வேலூர், மதுரை, தஞ்சாவூர், கோயம்புத்தூர், கன்னியாகுமரி என தமிழ்நாட்டின் எல்லா ஊர்களுக்கும் செட் ஆகும். ஆனால், ஏசியிலிருந்து வெளியேறும் வெப்பம் பூமியை சூடாக்குகிறது. ஆனால் ஏர் கூலர் இப்படி கிடையாது. ஏர் கூலரை பயன்படுத்துவதால் எந்த பாதிப்பும் ஏற்படாது.
ஏர் கூலர் எப்படி வேலை செய்கிறது?
ஏர் கூலர், ஏசியைப் போல ரசாயன வாயுக்களைப் பயன்படுத்தாமல், இயற்கையான ஆவியாதல் குளிர்ச்சி என்ற தத்துவத்தின் அடிப்படையில் வேலை செய்கிறது. இது நாம் வியர்க்கும் போது பேன் போட்டால் ஜில்லென்று உணர்வதைப் போன்ற ஒரு எளிய அறிவியல் முறைதான்.
கூலரின் பின்புறம் உள்ள ஃபேன் ஓடும்போது, வெளியிலிருந்து வெப்பமான காற்றை உள்ளே இழுக்கிறது. எல்லா ஏர் கூலரிலும் வாட்டர் டேங்க் இருக்கும். இந்த தண்ணீர் பம்ப் மூலம் மேலே கொண்டு செல்லப்பட்டு, பக்கவாட்டில் உள்ள கூலிங் பேட்கள் வழியாகத் துளித்துளியாகக் கீழே இறங்கும். இதனால் அந்தப் பேட்கள் எப்போதும் ஈரமாகவே இருக்கும்.
சிம்பிள் டெக்னிக்
வெளியிலிருந்து வரும் வெப்பமான காற்று இந்த ஈரமான கூலிங் பேட்கள் வழியாக ஊடுருவிச் செல்லும். அப்போது காற்றில் உள்ள வெப்பத்தை அந்தப் பேட்களில் உள்ள தண்ணீர் உறிஞ்சிக் கொள்கிறது. இதனால் தண்ணீர் ஆவியாகத் தொடங்குகிறது. இப்படித்தான் ஏர் கூலர் நமக்கு ஜில் என காற்றை தருகிறது.
எது சிறந்தது?
மேலோட்டமாக பார்த்தால் ஏசிதான் சிறந்ததாக தோன்றும். ஆனால் அதில் சூழலியல் பிரச்சனை இருக்கிறது. அதேபோல ஏர் கூலர்தான் பெஸ்ட் என்றும் சொல்லிவிட முடியாது.
காரணம், சென்னை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், ராமநாதபுரம் என கடலோர மாவட்டங்களில் இருக்கிறீர்கள் எனில், அங்கு காற்றின் ஈரப்பதம் (Humidity) அதிகமாக இருக்கும். இப்படியான இடங்களில் தண்ணீர் ஊற்றி ஏர் கூலரை பயன்படுத்தினால் அது பலன் கொடுக்காது. அதுவே வேலூர், ஈரோடு போன்ற மாவட்டங்களில் இந்த ஈரப்பதம் குறைவாக இருக்கும். அங்கு இந்த ஏர் கூலர், ஏசியை விட சிறப்பாக வேலை செய்யும்.
ஈரப்பதம் ஏன் முக்கியம்?
வெயில் அதிகமாக இருக்கும்போது வியர்க்கும். வியர்வை ஆவியாகி உடல் குளிர்ச்சியாகும். ஆனால், காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருந்தால் வியர்வை ஆவியாகாது. எனவே உடல் குளிர்ச்சியடையாது. இந்த நேரத்தில் தண்ணீர் ஊற்றி ஏர் கூலரை பயன்படுத்தினால் எந்த பலனும் கிடைக்காது. புழுக்கம்தான் அதிகமாக தெரியும். ஆனால், தண்ணீர் ஊற்றாமல் வெறுமென ஃபேனாக பயன்படுத்தலாம்.
எனவே நீங்கள் எந்த ஊர் என்பதை வைத்து அதற்கேற்ப ஏசியா? ஏர் கூலரா என்பதை முடிவு செய்துக்கொள்ளுங்கள்.












Click it and Unblock the Notifications