ஆவணங்கள் ரெடியா? பி.எம். கிசான் பலன்.. நில விவரங்கள் பதிவு செய்ய மயிலாடுதுறை விவசாயிகளுக்கு அழைப்பு
மயிலாடுதுறை: விவசாயிகள் தங்களது கிராமங்களில் வேளாண் துறை வாயிலாக நடத்தப்படும் முகாம் மற்றும் இ சேவை மையங்களுக்கு நேரடியாக சென்று தங்களது விபரங்களை அளித்து பயன்பெறுவதற்கான அறிவிப்புகள் அந்தந்த மாவட்டம் சார்பில் வெளியிடப்பட்டு வருகிறது... அந்தவகையில், விவசாயிகள் நில உடமை திட்டத்தில், நில விபரங்கள் பதிவு செய்ய வேண்டும் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டரும் இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தமிழக விவசாயிகளை பொறுத்தவரை அரசின் பல்வேறு திட்ட பலன்களை நேரடியாகவே பெற்று வருகிறார்கள்.. இந்த திட்டத்தைபெற, தங்களது நில உடைமை விபரங்கள், பயிர் சாகுபடி அறிக்கை போன்ற தொடர்புடைய ஆவணங்களை ஒவ்வொரு முறையும் சமர்ப்பிக்க வேண்டியது அவசியமாகும்.

இதில் ஏற்படும் காலதாமதத்தை தவிர்க்கும் வகையில், விவசாயிகள் நில உடைமை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.. எனவே, விவசாயிகள் பதிவு விவரங்களுடன் ஆதார் எண், மொபைல் போன் எண் மற்றும் நில உடைமை விவரங்களை சம்பந்தப்பட்ட வருவாய் கிராமத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.
பிரதமரின் பிஎம் கிசான்
இந்த வருடம் முதல் பிரதமரின் பிஎம் கிசான் பயிர் காப்பீடு திட்டம் போன்ற அரசின் திட்டங்களில் விவசாயிகள் எளிதில் பயன்களை பெறுவதற்கும் , தேசிய அளவிலான தனித்துவ அடையாள எண் மிகவும் அவசியமாகும்.. எனவேதான், வேளாண் துறை தவிர, மாவட்ட ஆட்சியர்களும் இதுகுறித்த அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்கள். அந்தவகையில், மயிலாடுதுறை கலெக்டர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் வெளியிட்டுள்ள அறிவிப்பில் உள்ளதாவது:
"பதிவு செய்யாத விவசாயிகள் அனைவரும் தங்களது நில உடைமை ஆவண விவரங்கள், ஆதார் எண், கைபேசி எண் ஆகிய விவரங்களுடன் தங்கள் கிராமத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தோட்டக்கலைத்துறை, வேளாண்மைத்துறை கள அலுவலர்களை கிராம நிர்வாக அலுவலகத்தில் நேரில் சந்தித்து தங்களது நில உடைமை ஆவண விவரங்களை விடுபாடின்றி வேளாண் அடுக்ககம் திட்டத்தில் இணைக்கும் பணியினை உடன் முடித்துக்கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
நில உடைமை விவரங்கள்
மேலும் விவசாயிகள் பொது சேவை மையங்களிலும், (CSCs) சென்று தங்களது நில உடைமை விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம்.
விவசாயிகளின் அனைத்து ஆவணங்களும் இணைக்கப்பட்ட பின்னர் ஒருங்கிணைக்கப்பட்ட ஆதார் எண் போன்ற தனித்துவமான தேசிய அளவிலான அடையாள எண் ஒவ்வொரு விவசாயிக்கும் ஏற்படுத்தப்படும். மேற்படி திட்டத்தில் இணைந்தால் மட்டுமே பிரதம மந்திரி கவுரவ நிதித் திட்டத்தின் (PMKISAN) கீழ் நிதி உதவி பெறும் விவசாயிகள் தடையின்றி திட்டப்பயன்களை தொடர்ந்து பெற முடியும். அடுத்த தவணை தொகை இதில் இணைந்து பதிவு செய்த விவசாயிகளுக்கு மட்டுமே வழங்கப்படும்.
பிரதம மந்திரி கவுரவ நிதித்திட்டம்
2025-2026-ம் நிதி ஆண்டு முதல் பிரதம மந்திரி கவுரவ நிதித் திட்டம் (PMKISAN) பயிர்க் காப்பீடுத் திட்டம் (PMFBY) போன்ற ஒன்றிய மற்றும் மாநில அரசின் திட்டங்களில் விவசாயிகள் எளிதில் பயன்பெற தேசிய அளவிலான தனித்துவ அடையாள எண் மிகவும் அவசியம் என்பதால் விவசாயிகள் தங்களது கிராமங்களில் ஊராட்சி மன்ற அலுவலகம் (அ) கிராம நிர்வாக அலுவலகங்களில் வேளாண்மை உழவர் நலத்துறை அலுவலர்களால் ஜூன் 30 வரை நடத்தப்படும் சிறப்பு முகாம்கள் மற்றும் அருகில் உள்ள பொது சேவை மையங்களுக்கு நேரடியாகச் சென்று தங்கள் நில உடைமை விவரங்கள், ஆதார், கைபேசி எண் ஆகிய விவரங்களை அளித்து எவ்வித கட்டணமுமின்றி 30.06.2025 ஆம் தேதிக்குள் இத்திட்டத்தில் பதிவு செய்து பயன்பெறலாம்" என்று கலெக்டர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications