இது 2வது சுதந்திர போராட்டம்.. வெள்ளையனை போல் வெளியேற்றனும்.. பாஜகவை தாக்கிய ப. சிதம்பரம்
சென்னை: ‛‛பாரத் ஜோடோ யாத்திரை எனும் பாரத் ஒற்றுமை நடைப்பயணம் என்பது இந்தியாவின் 2வது சுதந்திர போராட்டம். வெள்ளையனை வெளியேற்றியது போல் ‛அவர்களை' வெளியேற்றும் வரை ஓயமாட்டோம்'' என பாஜகவை ப சிதம்பரம் தாக்கி பேசினார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தலைமையில் இன்று கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 'பாரத் ஜோடோ யாத்ரா'என்ற இந்திய ஒற்றுமை நடைபயணம் துவங்கியது.
கன்னியாகுமரி காந்தி மண்டபத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தேசியக்கொடியை ராகுலிடம் வழங்கி பாரத் ஜோடோ யாத்திரையை துவங்கி வைத்தார்.

ப சிதம்பரம் பேச்சு
இதையடுத்து நடந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ராஜ்யசபா எம்பியுமான ப சிதம்பரம் பேசினார். அப்போது அவர் வெள்ளையர்களுடன் பாஜகவை மறைமுகமாக ஒப்பிட்டு தாக்கி பேசினார். மேலும் வெள்ளையனை வெளியேற்றியது போல் பாஜகவை ஆட்சியில் இருந்து வெளியேற்றும் வரை ஓயமாட்டோம் என்ற வகையில் பேசினார். இந்த கூட்டத்தில் ப சிதம்பரம் பேசியதாவது:

மன்னிக்க வேண்டுகிறேன்
காலையில் தனது தந்தை ராஜீவ் காந்தியின் ஆசியை பெற்று, காந்தி மண்டபத்தில் காந்தியின் ஆசி பெற்று, காமராஜர் மண்டபத்தில் காமராஜரின் ஆசியை பெற்று இந்த பாரதத்தை இணைக்கும் நடைப்பயணத்தை ராகுல்காந்தி துவங்க உள்ளார். இந்த நடைப்பயணத்தை கேலி, கொச்சை செய்பவர்கள் இந்த நாட்டில் இருக்கிறார்கள் என்பதை நினைத்து வருந்துவதோடு, அவர்களை மன்னிக்க வேண்டும் என்று காந்தியையும், காமராஜரையும் கேட்டு கொள்கிறேன்.

வெள்ளையனே வெளியேறு இயக்கம்
1942ல் மகாத்மா காந்தி வெள்ளையனே வெளியேறு என்ற கோஷத்தோடு இயக்கத்தை துவங்கினார். பாரதத்தை விட்டு வெளியேறு என வெள்ளையனை பார்த்து மகாத்மா காந்தி கூறினார். இந்த சமயத்தில் ‛செய் அல்லது செத்து மடி' என்ற தாரக மந்திரத்தை காந்தி கூறினார். வெள்ளையனை வெளியேற்றும் வரை பயணம் நிற்காது என பெரும் அறைக்கூவலாக காந்தியடிகள் கூறினார்.

பிரதிபலிக்கும் மனநிலை
இன்று காங்கிரஸ் கட்சி, ராகுல் காந்தியை பார்த்து விமர்சிப்பவர்களுக்கு நான் பதில் ஒன்றை கூறுவேன். வெள்ளையனே வெளியேறு என காந்தியும், காங்கிரஸ் கட்சியும் சொன்னபோது அந்த போராட்டத்தில் நீங்கள் பங்கு பெறவில்லை. மாறாக அந்த போராட்டத்தை கொச்சைப்படுத்தினீர்கள். வெள்ளையன் தொடர்ந்து இந்த நாட்டில் இருக்க வேண்டும் என்பதற்காக அவன் அடியிலேயே பணிந்தீர்கள். இன்று பாரத்தை இணைப்போம் என கூறும்பாது கொச்சைப்படுத்துகிறீர்கள். வெள்ளையனே வெளியேறு என்பதற்கு எதிராக இருந்த அந்த மனநிலை தான் தற்போது இந்தியா ஒற்றுமையாக இருக்க கூடாது என்ற எண்ணத்தை பிரதிபலிக்கிறது.

2வது சுதந்திர போராட்டம்
இந்தியாவை இணைக்க வேண்டும். இந்தியாவை பிணைக்க வேண்டும் என நாங்கள் சொல்கிறோம். இந்தியாவை பிளக்க வேண்டும் என அவர்கள் சொல்கிறார்கள். சுதந்திர போராட்டத்தில் உங்களுக்கு பங்கு கிடையாது என்பதை வரலாறு சொல்லும். அதேபோல் இந்த 2வது சுதந்திர போராட்டத்திலும் உங்களுக்கு பங்கு கிடையாது என்பதை நாங்கள் அறிவோம். நீங்கள் பங்கு பெறவில்லை என்பதற்காக நாங்கள் பின்வாங்கப்போவது இல்லை. ஒவ்வொரு அடியாக முன்வைத்து கோடிக்கணக்கான மக்களை இணைத்து வெள்ளையனே வெளியேறு என எப்படி கூறினோமோ அப்படி இந்தியாவை பிளவுப்படுத்தும் சக்திகளை வெளியேற்றும் வரை நம்முடைய பயணம் முடியாது என்பதை கூறுகிறேன்'' என பேசினார்.












Click it and Unblock the Notifications