பிரபல எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணனுக்கு பாரதிய பாஷா விருது அறிவிப்பு.. முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
சென்னை: தமிழ்நாட்டை சேர்ந்த பிரபல எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணனுக்கு பாரதிய பாஷா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 100 க்கும் அதிகமான புத்தகங்களை ராமகிருஷ்ணன் எழுதியுள்ளார். இந்த நிலையில் எஸ் ராமகிருஷ்ணனுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மல்லாங்கிணறு என்ற ஊரை சேர்ந்த எஸ்.ராமகிருஷ்ணன் தற்போது சென்னையில் வசித்து வருகிறார். சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் என பலவற்றை 1984 ஆம் ஆண்டு எழுதி வருகிறார். வார இதழ்களிலும் இவர் எழுதிய தொடர்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றன.

சாகித்ய அகடமி விருதையும் எஸ் ராமகிருஷ்ணன் பெற்றுள்ளர் . 'சஞ்சாரம்' என்ற நாவல் எழுதியதற்காக கடந்த 2018-ஆம் ஆண்டு சாகித்ய விருது அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், இந்தியாவில் பெருமைக்குரிய விருதுகளில் ஒன்றான பாரதிய பாஷா விருது எஸ் ராமகிருஷ்ணனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
கொல்கத்தாவைச் சேர்ந்த இலக்கிய அமைப்பான பாரதிய பாஷா பரிஷத் இந்த ஆண்டுக்கான விருதை எஸ்.ராமகிருஷ்ணனுக்கு அறிவித்துள்ளது. இந்திய அளவில் சிறந்த இலக்கியங்களை தேர்வு செய்து இந்த அமைப்பு விருது வழங்கி வருகிறது. விருதுடன் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு ரூ.1 லட்சம் பரிசுத் தொகையும் வழங்கப்படும்.
பாரதிய பாஷா விருது பெறும் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:- "இந்திய அளவில் புகழ்மிக்க #BharatiyaBhashaParishad அமைப்பின் விருது பெறவுள்ள எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் அவர்களுக்கு என் பாராட்டுகள்!
சமகாலத் தமிழிலக்கியத்தின் நன்கு அறியப்பட்ட முகமாக விளங்கி, குறிப்பிடத்தக்க பல படைப்புகளை அளித்து, #SahityaAkademi, #இயல், #கலைஞர்_பொற்கிழி உள்ளிட்ட பல உயரிய அங்கீகாரங்களைப் பெற்றுள்ள அவரது எழுத்துப்பணிக்கான மற்றுமொரு ஊக்கமாக இவ்விருது அமையும் என நம்புகிறேன். தமிழ்ச்சமூகத்தின் வளர்ச்சிக்கும், மானுடத்தின் மேன்மைக்கும் உரமாகும் மேலும் பல படைப்புகளை அவரிடம் இருந்து எதிர்நோக்குகிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications