டெல்டாவில்.. முக்கிய தொகுதியிலேயே அடிவாங்கும் திமுக.. சிக்கலில் பெரிய மீன்! இவருக்கே இந்த நிலைமையா?
சென்னை: கடந்த 3 தேர்தல்களில் திருவிடைமருதூரில் வெற்றி பெற்ற கோவி.செழியன் இந்த முறை அங்கு ஜெயிப்பது கடினம் என்று கூறுகிறார்கள் தொகுதியின் களநிலவரத்தை நன்கு அறிந்தவர்கள்.
தஞ்சாவூர் மாவட்டத்தின் மிக முக்கியமான தொகுதிகளில் ஒன்று திருவிடைமருதூர். பொதுவாக டெல்டா பகுதியில் திமுக மிக ஸ்ட்ராங்காக கால் ஊன்றியிருக்கிறது. ஆனால் இந்த தேர்தலில் டெல்டா மாவட்டங்களில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கனிசமான வெற்றியை பெற முடியுமா என்பது சந்தேகம் தான் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளில் திமுக கூட்டணி 159 தொகுதிகளில் வெற்றி பெற்றது. திமுக மட்டும் 133 தொகுதிகளில் வென்றது. குறிப்பாக டெல்டாவில் உள்ள ஒன்பது மாவட்டங்களில் 46 தொகுதிளில் 40 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. இது 2021 தேர்தலில் தமழிகம் முழுவதும் திமுக கூட்டணி பெற்ற தொகுதிகளில் 27 விழுக்காட்டிற்கு மேல். அப்படி 2021-ல் ஆட்சி அமைக்க பேருதவி புரிந்த டெல்டாவில் இந்த முறை திமுக வெற்றி பெற திணறும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். அதற்கு எடுத்துக்காட்டாக திருவிடைமருதூர் தொகுதியை சுட்டிக்காட்டுகிறார்கள் அவர்கள்.

திருவிடைமருதூரில் 2011, 2016 மற்றும் 2021 என தொடர்ந்து வெற்றி பெற்றவர் கோவி. செழியன். அவர் எப்படி தோற்பார்? என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள். ஆனால், மூன்று முறையும் அவர் சொற்ப வாக்கு வித்தியாசத்தில் தான் வென்றார்(2011- 394 வாக்குகள், 2016-532 வாக்குகள், 2021-10,680 வாக்குள்) என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள். சுமார் 2.5 லட்சம் வாக்குகள் உள்ள தொகுதியில் இவ்வளவு குறைவான வாக்கு வித்தியாசத்தில் பெறும் வெற்றி என்பது பெரிதல்ல என்றும் அவர்கள் தங்கள் வாதத்திற்கு வலு சேர்க்கிறார்கள். அதிலும், தனிப்பட்ட முறையில் கோவி. செழியனின் செல்வாக்கு கொஞ்சம் டேமேஜ் ஆகியிருப்பதாகவும் தொகுதியில் பேச்சு அடிபடுகிறது. குறிப்பாக உயர்கல்வி துறை அமைச்சரான பிறகு அவர் தொகுதி மக்களிடம் ஒட்டாமல் டிஸ்டன்ஸ் மெயிண்டெய்ன் பன்னி வருவதாகவும், இதனால், வாக்காளர்களுடனான நெருக்கம் குறைந்துவிட்டதாகவும் கூறுகிறார்கள் தொகுதிவாசிகள்.
இதனால் வாக்காளர்களிடையே கோவி. செழியன் மீது அதிருப்தி நிலவுதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனாலும், இந்த முறையும் திருவிடைமருதூரில் கோவி. செழியனுக்கு தான் வாய்ப்பு வழங்கப்படும் எனத் தெரிகிறது. எனவே, நான்காவது முறையாக தனது வெற்றியை தொடர கோவி.செழியன் கொஞ்சம் அதிகமாகவே மெனக்கெட வேண்டும் என்பது தான் உண்மையாம்.
திருவிடைமருதூர் தொகுதியில் பட்டியலின மக்கள் அதிகம் உள்ளனர். மேலும், வன்னியர் சமுதாய மக்களும் அதிகமாக உள்ளனர். இதே போல், சௌராஷ்ட்ர மக்கள், யாதவர்கள், பிராமனர்களும் கனிசமாக இருக்கும் தொகுதி. இப்படி கலவையான சமுதாய வாக்காளர்களை கொண்ட இந்த தொகுதியை இந்த முறை தட்டித்தூக்கிவிட வேண்டும் என கங்கணம் கட்டியிருக்கிறது அதிமுக கூட்டணி. அதிமுக சார்பில் கடந்த முறை போட்டியிட்டு தோல்வியை தழுவிய வீரமணி மற்றும், அருள்ராஜ், ராஜகுமாரன் ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. சரியான வேட்பாளரை அதிமுக தேர்வு செய்தால் திருவிடைமருதூரில் கோவி.செழியனுக்கு டஃப் கொடுக்கலாம் என்பது தான் உண்மை நிலவரமாம்.
- சிறப்பு நிருபர்












Click it and Unblock the Notifications