"இருங்க கொஞ்சம்".. ஆழம் பார்க்குதே திமுக.. இந்திரா இருந்திருந்தால்.. திருமா வேற: அர்ஜுன் சம்பத் நறுக்
இந்து மக்கள் கட்சி அர்ஜுன் சம்பத் திமுகவை சாடி பேட்டி ஒன்றினை தந்துள்ளார்
சென்னை: திமுகவை பற்றி ஜனாதிபதியிடம் முறையிட்டு, தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியை கொண்டு வர வேண்டும் என்று இந்து மக்கள் கட்சியின் அர்ஜுன் சம்பத் கோரிக்கை விடுத்துள்ளார்.
நேற்றைய தினம், திமுக எம்பி கனிமொழி செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, ஆளுநரின் வெளிநடப்பு குறித்து கருத்து கூறியிருந்தார்.
அதில், "சட்டமன்றத்தில் இருந்தோ அல்லது நாடாளுமன்றத்தில் இருந்தோ எதிர்கட்சிகள் தான் வெளிநடப்பு செய்வார்கள். ஆனால் இங்கு கவர்னரே வெளிநடப்பு செய்திருக்கிறார்.

கருவி
அவர் எதிர்கட்சியாக செயல்படுகிறார் என்பதையே அவரின் வெளிநடப்பு உணர்த்துகிறது. கவர்னரை தூண்டி விட்டு செயல்படுபவர்கள் இது ஜனநாயக நாடு என இதன் மூலம் தெரிந்து கொள்ள வேண்டும்... கவர்னரின் வெளிநடப்பு என்பது அப்பட்டமான மரபு மீறல்... மத்திய அரசு எழுதி கொடுக்கும் உரையை தான் குடியரசு தலைவர் படிக்கிறார். குடியரசு தலைவர் அதை படிக்காமல், தான் நினைத்ததை படிப்பேன் என்றால் மத்திய அரசு ஒப்புக்கொள்ளுமா? பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் கவர்னரை ஒரு கருவியாக பயன்படுத்தி வருவது ஜனநாயக விரோத செயல்" என்று காட்டமாக கூறியிருந்தார்.

அக்கா கனிமொழி
இந்நிலையில், கனிமொழியின் இந்த கருத்து குறித்து இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத்திடம் கருத்து கேட்கப்பட்டது. அதற்கு அர்ஜூன் சம்பத் அளித்த பேட்டிதான் இது: "ஆளுநரை ஓடவிட்டுட்டாங்க, மோடியை சந்துக்குள்ளே துரத்திவிட்டுட்டாங்க" என்றெல்லாம் எங்க அக்கா கனிமொழி அப்பவே பேசினவங்கதான். அன்று, திருவிடந்தையிலே, 2 லட்சம் வேலைவாய்ப்புகளை தமிழக மக்களுக்கு தருவதற்கு பாரத பிரதமர் மோடி வந்தார்.. அப்போ இந்த திமுக, கருப்பு பலூன் விட்டாங்க.. மோடி வருகிறபோது அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள். அப்பவே கனிமொழி சொன்னாங்க, "மோடியை நாங்க துரத்தியடித்து விட்டோம்" என்று சொன்னார்..

ஆடு தாடி
அப்பறம் இவங்க வைக்கும் கோரிக்கை என்னன்னா, "ஆட்டுக்குத் தாடி எதற்கு? நாட்டுக்கு கவர்னர் எதற்கு? என்பது. கவர்னர் எங்கே போனாலும் அவருக்கு எதிர்ப்பு காட்டுவது. அடைந்தால் திராவிட நாடு, இல்லாவிட்டால் சுடுகாடாம். இப்போது எப்படி என்றால், மத்திய அரசாங்கம் கொண்டு வருகிற ஒவ்வொரு கொள்கைக்கும், ஒவ்வொரு திட்டத்துக்கும், ஒவ்வொரு வளர்ச்சிக்கும் எதிர்ப்பு காட்டுகிறார்கள். மத்திய அரசாங்கம், ஆதார் அட்டையாள அட்டையை அறிமுகப்படுத்தி வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்கிறது. ஆனால், இவங்க என்ன சொல்றாங்கன்னா, போட்டிக்கு, நாங்களும் ஒரு அடையாள எண்ணை தருவோம் என்று சொல்கிறார்கள்.

அதிபர் ஸ்டாலின்
மத்திய அரசாங்கம், கல்வி கொள்கையை கொண்டு வந்தால், நாங்களும் ஒரு கல்வி கொள்கையை தயார் பண்ணுவோம்ன்னு சொல்றாங்க. இப்படி மத்திய அரசாங்கத்தின் எந்த திட்டத்தையும் நிறைவேற்ற விடாமல், ஏதோ தங்களை தனி நாடுபோல, கற்பனை செய்து கொள்கிறார்கள். பிரிவினைவாதம் செய்கிறார்கள். இந்தியாவை "ஒன்றியம்" என்கிறார்கள். இந்தியாவுக்குள்ளே அவர்கள் இருந்து கொண்டு, ஒரு முதல்வர், என்கிற நிலைமையில் இருந்து மாறி, தன்னை ஒரு அதிபர் போல நினைத்து கொண்டு, இந்த திமுககாரங்க அந்த எண்ணத்துடன்தான் செயல்படறாங்க.

இந்திரா காந்தி
வழக்கமாக எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள்தான் வெளிநடப்பு செய்வாங்க.. சட்டசபையில் வரலாற்றிலேயே முதல்முறையாக, கவர்னர் வெளிநடப்பு செய்திருக்கிறார். இதன்மூலம் இந்த திமுகவின் சதித்திட்டத்தை முறியடித்திருக்கிறார். இந்திராகாந்தி மட்டும் இப்போது இருந்திருங்கன்னா, இந்நேரம் இந்த கவர்ன்மென்ட்டை டிஸ்மிஸ் செய்திருப்பாங்க. அரசியல் சாசன பிரிவு 366-ன்படி சஸ்பெண்ட் செய்திருப்பாங்க. அரசியல் சாசனம் 356ன்படி, திமுகவை டிஸ்மிஸ் செய்திருப்பாங்க.. ஏற்கனவே 356-ன் கீழ், இந்திராகாந்தி, லஞ்ச ஊழலுக்காக, இதே திமுகவை, கருணாநிதி அவர்களை டிஸ்மிஸ் செய்திருக்காங்க. ராஜீவ் படுகொலைக்கு பிறகு, ஜெயின் கமிஷன் அறிக்கையில், படுகொலைக்கு திமுக துணை போனது என்றுசொல்லி, 356ஐ பயன்படுத்தி திமுகவை டிஸ்மிஸ் செய்திருக்காங்க.

திருமாவளவன்
அதனால் நான் சொல்வது என்னவென்றால், இப்போது நம்முடைய 356ஐ ஆளுநர் பயன்படுத்த வேண்டும்.. தமிழகம் முழுக்க சீர்குலைந்து போயிருக்கிறது.. இந்த விசிகவால் சட்டம் ஒழுங்கு கெட்டுப்போய்விட்டது.. கட்டப்பஞ்சாயத்து, ரவுடியிஸம், தமிழ்நாடு முழுக்க சாதி மத மோதல்களை உருவாக்குவது, இதுதான் விசிகவின் வேலை.. தனித்தமிழ்நாடு என்கிறார் திருமாவளவன். அதுமட்டுமல்ல, பயங்கரவாதம், கோவை குண்டுவெடிப்பு, ஐஎஸ்ஐஎஸ் நடமாட்டம், தமிழகத்தில் அதிகமாகி கெண்டிருக்கிறது. இந்த நிலை நீடித்தால் தமிழகம் இன்னொரு காஷ்மீராக மாறிடும். திமுகவின் கொள்கையை, கவர்னரின் வாயால் படிக்க வைக்கணும்னு பார்க்கறாங்க.

குரங்கு குட்டி
கவர்னரின் உரை என்பது ஏற்கனவே தயார் செய்யப்பட்டது. அச்சிடப்பட்ட ஒன்று. ஆளுநர் அதை பார்த்து இதையெல்லாம் ஆட்சேபித்து இருக்கிறார். ஆளுநர் படிக்கிறபோது, அதை படிப்பதற்கு, அரசியல் சாசனப்படி அவருக்கு உரிமை உண்டு.. கவனர்னர் படிக்க வந்தபோது, குரங்கு குட்டியை விட்டு ஆழம் பார்க்கிற மாதிரி, விசிகவை விட்டு சத்தம் போடவைத்தது திமுக. திமுக எப்பவுமே எதையுமே நேரடியாக செய்யாது.. கம்யூனிஸ்ட், காங்கிரஸ் இவங்கள எல்லாம் வைத்து, சட்டசபையில் சத்தம் போட வைத்து, கவர்னரை அவமானப்படுத்தி உள்ளார்கள்..

களேபரம்
கவர்னரை அவமானப்படுத்தினால், இந்திய அரசியல் சட்டத்தையே அவமானப்படுத்துவது போலத்தான்.. இவர்கள் எல்லாம் அப்படி கோஷம் போடுகிறார்களே, ஆனால், அதை கட்டுப்படுத்த சபாநாயகர் முயற்சிக்கவில்லை.. எல்லாரையும் அமைதிப்படுத்த முதல்வரும் முயற்சிக்கவில்லை. அந்த களேபரத்திலும், இந்த அரசாங்கம் எழுதி கொடுத்த உரையை ஆளுநர் வாசித்தார்.. இந்த அரசாங்கம், பிரிவினை கருத்தை கொண்டுவரக்கூடிய வார்த்தைகளை, இந்த அரசாங்கம் சொல்லக்கூடிய பொய்களை வாசிக்காமல் ஆளுநர் தவிர்த்தார். அதன்பிறகு, முதல்வர் கவர்னரை வைத்து கொண்டே, அவருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற முயற்சித்தார் முதல்வர்.. அதனால்தான் கவர்னர் வெளிநடப்பு செய்தார்..

"கெட் அவுட் ரவி"
ஆனால், வெளியில் எப்படி சொல்லிக் கொள்கிறார்கள் என்றால், "கெட் அவுட் ரவி"யாம்... இருங்க, உங்களை எல்லாம் கூடிய சீக்கிரம் 356-ல் கெட் அவுட் பண்ணியே ஆகணும்.. ஆளுநர் இது தொடர்பாக ஜனாதிபதிக்கு தெரியப்படுத்த வேண்டும்.. அங்கே தெரிவித்துவிட்டு, தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியையும் கொண்டு வர வேண்டும்.. இந்து மக்கள் கட்சி இந்த கோரிக்கையை முன்வைக்கிறது" என்றார்.












Click it and Unblock the Notifications