குடும்ப அட்டைதாரர்களே.. ரேசன் இந்த மாசம் வாங்கிட்டீங்களா? மார்ச் 1 முதல் சிக்கல்? அறிவிப்பை பாருங்க
சென்னை: தமிழக ரேஷன் கடை ஊழியர்கள் சங்கம் தங்களது 15 அம்ச நீண்டகால கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 1ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.. இது சர்க்கரை அட்டைதாரர்களுக்கு கலக்கத்தை தந்து வருகிறது.
தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் தங்கள் கோரிக்கைகளை முன்னிறுத்தி போராட்டங்களை நடத்தி வருகின்றன..

ரேசன் கடை ஊழியர்கள்
இதில் ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் சில கோரிக்கைகளை அரசு ஏற்றுக்கொண்டதால் அவர்களின் போராட்டம் முடிவுக்கு வந்த நிலையில், இன்னும் சில சங்கங்கள் தங்கள் உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன..
ரேஷன் கடை ஊழியர் சங்கத்தின் மாநில தலைவர் ஜெயச்சந்திர ராஜா இது குறித்து விரிவான விளக்கங்களை செய்தியாளர்களிடம் அளித்துள்ளார்.. முக்கிய கோரிக்கையாக, நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்குகளில் உள்ள எடை தராசுகளையும் ரேஷன் கடைகளில் பயன்படுத்தப்படும் விற்பனை முனைய இயந்திரங்களையும் ஒன்றிணைக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்துகின்றனர்..
ரேஷன் பொருட்கள்
இதன் மூலம் தரமான பொருட்களைச் சரியான எடையில் பொட்டலங்களாக மக்களுக்கு வழங்க முடியும் என்பது அவர்களின் கருத்தாகும்.. மேலும், தமிழக அரசு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தலைமையில் அமைத்த ஊதிய மாற்றக் குழுவின் பரிந்துரைகளை உடனடியாக வெளியிட்டு அமல்படுத்த வேண்டும் என அவர்கள் கோருகின்றனர்..
பிளஸ் 2 கல்வித் தகுதியுடன் பணியாற்றும் தங்களுக்கு இளநிலை உதவியாளர் ஊதியமான ரூ.19,500 வழங்கப்பட வேண்டும் என்றும், அதேபோல் எடையாளர்களுக்கு அலுவலக உதவியாளர் ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்..
தமிழக அரசு
பொது விநியோகத் திட்டத்தை ஒரு தனித் துறையாக அறிவிக்க வேண்டும் என்பது இவர்களின் மிக முக்கியமான கோரிக்கைகளில் ஒன்றாக உள்ளது.. ரேஷன் கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள், குறிப்பாக பெண் மற்றும் மாற்றுத்திறனாளி ஊழியர்கள் கழிப்பறை வசதி இன்றி மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.. கழிப்பறை கட்டித் தரப்படும் என்ற அரசின் வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்பதால், முதற்கட்டமாக இவர்களுக்கு அந்த வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்..
வருங்கால வைப்பு நிதி பிடித்தம் செய்தல், பணி வரன்முறைப்படுத்தப்படாத நிலையில் பணியின் போது உயிரிழந்த ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்குதல் போன்ற கோரிக்கைகளும் இதில் அடங்கும்..
தாயுமானவர் திட்டத்தின் கீழ் வீடு வீடாகப் பொருட்கள் வழங்கும் திட்டத்தில் கார்டுகளின் எண்ணிக்கையை மட்டும் கணக்கில் கொள்ளாமல், எடையாளர் ஊதியம், ஏற்றுக்கூலி, இறக்குக்கூலி, மினி லாரி வாடகை மற்றும் பணியாளர்களுக்கான ஊக்கத்தொகை ஆகியவற்றை முறையாக வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.. இத்தனை அம்சங்களையும் அரசு உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி மார்ச் முதல் போராட்டக் களத்தில் குதிக்க உள்ளதாக அவர்கள் உறுதிப்படக் கூறியுள்ளனர்..












Click it and Unblock the Notifications