கருப்பு எழுத்துக்கள்.. "நம்பிக்கையுடன் போகிறேன்".. "தங்கச்சி செங்கொடி".. நெகிழ்ந்த திருமாவளவன்.!
செங்கொடிக்கு வீரவணக்கம் தெரிவித்து ட்வீட் பதிவிட்டுள்ளார் திருமாவளவன்
சென்னை: "மக்கள் மன்றத்தைச் சார்ந்த தங்கை செங்கொடியின் ஈகத்தை தற்போது நினைவுகூர்ந்திட வேண்டியது நாம் அவருக்குச் செலுத்தும் நன்றிக் கடனாகும்" என்று விசிக தலைவர் திருமாவளவன் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
பல வருட காலமாக எதிர்பார்க்கப்பட்ட, பேரறிவாளன் மனு தொடர்பாக சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பளித்துள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் எல் நாகேஸ்வர ராவ், போபண்ணா மற்றும் பிஆர் கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு பேரறிவாளனை விடுதலை செய்வதாக தீர்ப்பளித்துள்ளது.
சுப்ரீம்கோர்ட் தனக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, வழக்கில் 142-வது பிரிவை செயல்படுத்தி, விடுதலை செய்துள்ளது... தேச வரலாற்றில் இது போன்ற தீர்ப்பை வழங்குவது மிகவும் அரிதான ஒன்றாக பார்க்கப்படுகிறது..

திருமா வரவேற்பு
இந்த தீர்ப்பை தலைவர்கள் பலர் வரவேற்று வருகின்றனர்.. அந்த வகையில் விசிகவின் தலைவர் திருமாவளவனும் வரவேற்றுள்ளார்.. இந்த தீர்ப்பு குறித்து 2 ட்வீட்களையும் பதிவிட்டுள்ளார்.. "பேரறிவாளனுக்கு 30ஆண்டுகளாக இழைக்கப்பட்ட அநீதி வீழ்த்தப்பட்டது. ஒரு நிரபராதிக்கு எதிரான இந்த அநீதிக்கு காரணமானவர்களுக்குச் சட்டம் என்ன தண்டனை வழங்கப் போகிறது? இத்தகைய கேள்விக்கு இங்கே விடை இல்லை. பாதிக்கப்பட்டுள்ள பேரறிவாளனின் மறுவாழ்வுக்கு ஒன்றிய அரசு என்ன செய்யப் போகிறது?

அறப்போர் வென்றது
ஒரு தாயின் அறப்போர் வென்றது... அற்புதம் அம்மாளின் உறுதிமிக்க, இடையறாத, சட்டவழியிலான நெடும்போருக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி. அனைத்து சனநாயக சக்திகளின் நல்லாதரவு மற்றும் தமிழக அரசு நல்கிய ஒத்துழைப்பால் விளைந்த நீதி. உச்சநீதிமன்ற நீதிபதிகளின் நேர்மைத்திறத்துக்கு எமது பாராட்டுகள்" என்று பதிவிட்டுள்ளார்.

திருமாவளவன்
அதேபோல மறைந்த செங்கொடியையும் திருமாவளவன் நினைவுகூர்ந்துள்ளார்.. கடந்த 2011, ஆகஸ்ட் 28ம் தேதி காஞ்சி மக்கள் மன்ற சமூக செயல்பாட்டாளரும், பறை இசைக் கலைஞருமான செங்கொடி தீக்குளித்து உயிரிழந்தார். 7 தமிழர்களின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையை முன்வைத்து உயிர் தியாகம் செய்தது தமிழக மக்களை பெருத்த அதிர்ச்சிக்கு ஆளாக்கியது.

கடிதம்
இறப்பதற்கு முன்பு, தான் எழுதிய கடிதத்தில், "தோழர் முத்தக்குமாரின் உடல் தமிழகத்தை எழுப்பியது போல், என்னுடைய உடல் இந்த 3 தமிழர்களின் உயிரை காப்பாற்ற பயன்படும் என்ற நம்பிக்கையுடன் செல்கிறேன்" இப்படிக்கு தோழர். செங்கொடி" என்று கருப்பு மையினால் தன் கைப்பட எழுதியிருந்தார். இந்த கடிதத்தை பலரும் சோஷியல் மீடியாவில் ஷேர் செய்து வருகின்றனர்.. அந்த வகையில் திருமாவளவனும் இதுகுறித்து ட்வீட் பதிவிட்டுள்ளார்.

செங்கொடி
அந்த ட்வீட்டில், "மக்கள் மன்றத்தைச் சார்ந்த தங்கை செங்கொடியின் ஈகத்தை தற்போது நினைவுகூர்ந்திட வேண்டியது நாம் அவருக்குச் செலுத்தும் நன்றிக் கடனாகும். பேரறிவாளன் உள்ளிட்ட மூவரையும் மரணத் தண்டனையிலிருந்து காத்திட அவர் தன்னைத்தானே மாய்த்துக் கொண்டார். அவருக்கு எமது செம்மாந்த நன்றிகலந்த வீரவணக்கம்" என்று பதிவிட்டுள்ளார். அத்துடன், செங்கொடி கைப்பட எழுதிய கடிதத்தையும் ட்விட்டில் ஷேர் செய்துள்ளார்..












Click it and Unblock the Notifications