ஆபத்து..! 2026 தமிழக சட்டசபை தேர்தலில் ஓட்டு போடப்போகும் 6.5 லட்சம் பீகார் வாக்காளர்கள்
சென்னை: பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 6.5 லட்சம் பேர் தமிழக வாக்காளர்கள் பட்டியலில் சேர இருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக தலைநகர் சென்னையில் மட்டும் பீகாரை சேர்ந்த 3.5 லட்சம் வாக்காளர்கள் வசித்து வருகிறார்கள். எனவே இந்த பீகார் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம், வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
பீகார் மாநிலத்தில் வரும் நவம்பர் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் கடந்த ஜூலை 26ஆம் தேதி வரை சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளை (BIHAR SIR) தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. அதன்படி வீடு வீடாகச் சென்று வாக்காளர்கள் குறித்த ஆய்வு மேற்கொண்டு வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யப்பட்டது.

இதற்கு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் வாக்காளர் பட்டியலில் திருத்தத்தை தொடர்ந்து 22 லட்சம் வாக்காளர்கள் உயிரிழந்து இருப்பது தெரியவந்தது. அது போல் 7 லட்சம் வாக்காளர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் வாக்காளர் அடையாள அட்டை பெற்றுள்ளது தெரியவந்தது.
36 லட்சம் பேர் பீகாரில் இருந்து நிரந்தரமாக வேறு மாநிலங்களுக்கு குடிபெயர்ந்து இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த அடிப்படையில் 65 லட்சம் பேர் பீகார் மாநில வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது.
இதில் பெயர் விடுபட்டவர்கள் தங்களது பெயர்களை செப்டம்பர் மாதம் 1ஆம் தேதி முதல் ஒரு மாத கால அவகாசத்தில் பெயர்களை சேர்க்கலாம். இதன் பின்னர் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். அரசியலமைப்பு சட்டப்படி ஒருவர் எந்தத் தொகுதியில் வசிக்கிறாரோ அந்தத் தொகுதியில்தான் அவர் வாக்களிக்க வேண்டும். அந்த அடிப்படையில்தான் பீகாரில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் நடந்தது என தேர்தல் ஆணையம் விளக்கமளித்திருந்தது.
இந்த நிலையில் பீகாரில் இருந்து வெளியேறியவர்கள் தென்னிந்திய மாநிலங்களான கர்நாடகா, தமிழகம், கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் தங்கி பணியாற்றி வருகிறார்கள். எனவே இவர்கள் தாங்கள் வசிக்கும் மாநிலத்தில் உள்ள வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரை சேர்த்துக் கொள்ளலாம்.
அதன் அடிப்படையில் பீகாரை சேர்ந்த 6.5 லட்சம் பேர் தமிழகத்தில் தங்கியுள்ளனர். இவர்களது பெயர்கள் பீகார் மாநிலத்தின் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படுவதால் இவர்கள் இனி தமிழக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்துக் கொள்ளலாம் என சொல்லப்பட்டுள்ளது.
பீகார் மாநிலத்தவர்கள் சென்னையில் மட்டும் 3.5 லட்சம் பேர் வசித்து வருகிறார்கள். இதைத் தொடர்ந்து தொழில் நகரமான கோவையிலும் டாலர் சிட்டியான திருப்பூரிலும் பீகார் மாநிலம் மட்டுமல்லாமது வட மாநிலத்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
எனவே தமிழகத்திலும் விரைவில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணி தொடங்கவுள்ளதால் தற்போது தமிழகத்தில் வசித்து வரும் பீகாரிகள் தங்களது பெயரை தமிழக வாக்காளர் பட்டியலில் சேர்க்க மனு அளிப்பார்கள். இவர்களது மனு ஏற்கப்பட்டால் தமிழகத்தில் வரும் சட்டசபை தேர்தலில் வாக்களிக்கும் வாய்ப்பை பெறுவார்கள். இப்படிப்பட்ட சூழலில் இவர்களுடைய வாக்குகள் 2026 ஆம் ஆண்டு தமிழக சட்டசபைத் தேர்தலில் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications