டாஸ்மாக் கடைகளில் பில் தர வேண்டும்.. விலைப்பட்டியல் வைக்கணும்.. தமிழக அரசு அதிரடி சுற்றறிக்கை
சென்னை: டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களை வாங்குவோருக்கு பில் வழங்கவும், மதுக்கடைக்கு வருவோரின் பார்வையில் படும்படி விலைப்பட்டியல் வைக்கவும் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் முதன்மை இயக்குனர் சார்பில் மாவட்டம் தோறும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தஞ்சாவூரைச் சேர்ந்த அனைத்து மக்கள் அரசியல் கட்சி நிறுவனர் ராஜேஸ்வரி பிரியா உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்தார்.
அவர் தனது மனுவில், "தமிழகத்தில் 5823 மதுபான கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் மாதத்திற்கு கோடிக்கணக்கில் தமிழக அரசிற்கு வருமானம் கிடைத்து வருகிறது. தமிழக அரசின் முதுகெலும்பாக மதுபானக்கடை வருமானம் உள்ளது. ஆனால் தமிழகத்திலுள்ள மதுபான கடைகளில் சட்ட விரோத மற்றும் ஒழுங்கற்ற முறையில் மதுபான விற்பனை நடந்து வருகிறது.

அதிகமாக வசூல்
அதில், விற்பனையாகும் மதுபானத்திற்கு உரிய ரசீது வழங்கப்படுவது கிடையாது. ஒவ்வொரு மதுபான பாட்டிலுக்கும் நிர்ணய விலையை விட 10 ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்யப்பட்டு வருகிறது. மதுபான கடைகளில் போலி மதுபானங்களும் விற்பனை செய்யப்படுகின்றன. நீதிமன்ற உத்தரவின்படி தமிழ்நாட்டில் உள்ள மதுபான கடைகளில் ரசீது வழங்கப்பட வேண்டும். ஆனால் தமிழகத்தில் உள்ள எந்த ஒரு மதுபானக் கடையிலும் ரசீது வழங்கப்படுவதில்லை.

விலை அதிகம்
இது குறித்து புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே 2010ஆம் ஆண்டு முதல் தற்போது வரை மதுபான கடைகள் மூலம் பெற்ற வருமானம் பற்றிய விவரம், மது அருந்துபவர்களை தடுப்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், ஒவ்வொரு மதுபான கடையிலும் மதுபானத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிகமாக வசூல் செய்வதை தடுக்க வேண்டும். கணினி மயமாக்கப்பட்ட ரசீது வழங்கப்படவும், போலி மதுபான விற்பனையை தடுக்க வேண்டும். இதற்கான உத்தரவு அரசுக்கு பிறப்பிக்க வேண்டும்" என்று மனுவில் கூறியிருந்தார்

டாஸ்மாக்
இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆனந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது "டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை சட்டத்தின்படி அனைத்து கடைகளிலும் விலைப்பட்டியல் வைக்கவும், வாங்கும் மதுபானத்திற்கு பற்றுச்சீட்டு வழங்கவும் தமிழ்நாடு மாநில வாணிப கழகம் முதன்மை இயக்குனர் தரப்பில் அனைத்து மாவட்ட டாஸ்மாக் நிர்வாகத்திற்கும் சுற்றறிக்கை, அனுப்பி வைக்கப்பட்டது " எனக்கூறி, அரசு தரப்பில் பிரதி தாக்கல் செய்யப்பட்டது.

ஆய்வு செய்ய வேண்டும்
இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், குறிப்பிட்ட கால இடைவெளியில் டாஸ்மாக் கடைகளில் ரசீது வழங்குவது மற்றும் விலை பட்டியல் வைக்கப்பட்டுள்ளது குறித்து ஆய்வு செய்ய உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.












Click it and Unblock the Notifications