சென்னையில் பணமோசடியில் கைதாகி ஜாமீனில் வந்த பாஜக பிரமுகரை கடத்திய கும்பல்: 8 பேர் கைது
சென்னை: சென்னையில் பணமோசடியில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்த பாஜக பிரமுகரை கடத்திய கும்பலை சேர்ந்த 8 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை ராஜாஅண்ணாமலைபுரம், ரிவர்வியூ போட்கிளப் ரோட்டை சேர்ந்தவர் நாகராஜன் (30). இவர் முஹம்மது நூர்தின் என்பவரிடம் பணம் வாங்கி ஏமாற்றிய வழக்கில் 26-07-2021 அன்று கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார்.
கடந்த 16-08-2021 அன்று நிபந்தனை ஜாமீனில் வெளியில் வந்த நாகராஜன் சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திட்டு வந்துள்ளார்.

மர்ம கும்பல்
அதே போல் 31ம் தேதி கையெழுத்திட்டு வந்து விட்டு திரும்பிய போது காவல் நிலையம் வெளியே வைத்து மர்ம கும்பல் ஒன்று காரில் கடத்தியுள்ளது. இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் போலீசாரிடம் தெரிவித்ததையடுத்து, போலீசார் செல்போன் சிக்னலை வைத்து தேடி போரூர் அருகே நாகராஜனை மீட்டனர்.

சாஸ்திரி நகர் போலீஸார்
அவரை கடத்திச் சென்ற 8 பேரையும் கைது செய்த சாஸ்திரி நகர் போலீசார் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். அப்போது நாகராஜ் கடந்த 6 மாதத்திற்கு முன்பு, மனோகரன் என்பவரிடம் 10 கோடி கடன் வாங்கி தருவதாக கூறி 10 லட்சம் ரூபாயை கமிஷனாக பெற்று லோனும் வாங்கி தராமல், பணத்தை திருப்பி தராமலும் ஏமாற்றி வந்ததால் ஆத்திரமடைந்து கடத்தியது தெரியவந்தது.

8 பேர் மீது வழக்கு
கைது செய்யப்பட்ட மனோகரன் (42), சிவகுமார் (45), விஜய் (31), அலெக்ஸ் (36), ஐயப்பன் (29), கன்னியப்பன் (34), மணிகண்டன் (28), சத்ய சாய் பாபு (40), ஆகிய எட்டு பேர் மீதும் 147, 148, 294(b), 323,341,365, 506(2), உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து இரண்டு கார்களையும் பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கைதானது எப்படி?
இவர்கள் 8 பேரையும் போலீஸார் கைது செய்தது எப்படி என்பது குறித்து போலீஸார் கூறுகையில், கடத்தப்பட்ட இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து அந்த கடத்தல் கும்பலின் செல்போன் சிக்னலை வைத்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அதில் நாகராஜை போரூரில் உள்ள ஒரு ஜிம்மில் வைத்திருந்தது தெரியவந்தது. இவர்களை கைது செய்த போலீஸார் கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.












Click it and Unblock the Notifications