அதிமுக உடன் கூட்டணி வைத்தால் பதவியை ராஜினாமா செய்வேன்..அண்ணாமலை ஆவேசம்..உற்று கவனிக்கும் மேலிடம்
அதிமுக உடன் கூட்டணி வைத்தால் தனது பதவியை ராஜினாமா செய்து விடுவேன் என்று கூறியுள்ளார் மாநிலத்தலைவர் அண்ணாமலை.
சென்னை: லோக்சபா தேர்தலில் அதிமுக உடன் பாஜக கூட்டணி வைத்தால் தலைவர் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் மாநிலத்தலைவர் அண்ணாமலை. நான் தேசிய மேனேஜர் அல்ல, கட்சியின் மாநில தலைவர் என்று கூறினேன். தமிழ்நாட்டில் பாஜகவை வளர்ப்பதற்குரிய வெற்றி பெற வைப்பதற்குரிய உத்திகள் என்னிடம் இருக்கின்றன. என் ஸ்டைலில் செயல்பட முடியாத போது நான் ராஜினாமா செய்து விட்டு ஒரு தொண்டனாகவே இருப்பேன் என்றும் கூறியுள்ளார்.
பாஜக மாநிலத்தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றத்தில் இருந்தே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இருக்கிறது கமலாலயம். பாஜக ஐடி விங் தலைவர் நிர்மல்குமார் அண்மையில் அதிமுகவில் இணைந்தார். இந்நிலையில் நிர்மல்குமார் தலைமையில் ஏராளமான பாஜகவினர் அதிமுகவில் இணைந்தனர்.
பாஜகவின் ஓபிசி அணியின் மாநில செயலாளர் அம்மு என்கிற ஜோதி அதிமுகவில் இணைந்துள்ளார். அடுத்தடுத்து அதிமுகவில் இணைந்த பல்வேறு நிர்வாகிகள் இணைந்துள்ளதால் பாஜக தலைமைக்கும் அதிமுக தலைமைக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுந்தது.

அண்ணாமலை கோபம்
இதனையடுத்து அண்ணாமலை ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு என்று கூறினார். பாஜகவினர் எடப்பாடி பழனிச்சாமியின் போட்டோக்களை எரித்தனர். அதே நேரத்தில் அண்ணாமலையின் போட்டோக்களை பாஜகவினர் எரித்தனர். மாறி மாறி அதிமுக, பாஜக தலைவர்கள் பேட்டி அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

அதிமுக பாஜக கூட்டணி நீடிக்கிறது
அதே நேரத்தில் அதிமுக நிர்வாகிகளும் பாஜக நிர்வாகிகளும் கூட்டணி நீடிப்பதாகவே கூறி வருகின்றனர். 2024ஆம் ஆண்டு நடைபெற உள்ள லோக்சபா தேர்தலை அதிமுகவும் பாஜகவும் இணைந்து எதிர்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மாநிலத்தலைவர் அண்ணாமலை மிகப்பெரிய புயலை கிளப்பியுள்ளார்.

பாஜக நிர்வாகிகள் கூட்டம்
தமிழக பாஜக மாநில நிர்வாகிகள் மற்றும் அணி தலைவர்கள் கூட்டம் சென்னை அமைந்தகரையில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாநில துணை தலைவர் சக்கரவர்த்தி தலைமை தாங்கினார்.
அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம், பூத் கமிட்டி அமைப்பது பற்றியும், கட்சிக்கு நிதி வசூலிப்பது குறித்தும் பேசினார். மாநில நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அணிகளின் தலைவர்கள் மத்தியில் மாநில தலைவர் அண்ணாமலை பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

அண்ணாமலை பேச்சு
தமிழகத்தில் நாம் தனியாக இருந்தால் மட்டுமே கட்சியை வளர்க்க முடியும். அதிமுக உடன் கூட்டணி என்ற நிலைப்பாட்டை எடுத்தால், தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு சாதாரண தொண்டனாக இருப்பேன். பாஜகவை வளர்த்தெடுக்கத்தான் பாடுபட்டுக்கொண்டிருக்கிறேன். எனக்கு உரிய சுதந்திரம் அளிக்க வேண்டும் என்றார்.

ராஜினாமா செய்வேன்
நான் தேசிய மேனேஜர் அல்ல, கட்சியின் மாநில தலைவர் என்று கூறினேன். தமிழ்நாட்டில் பாஜகவை வளர்ப்பதற்குரிய வெற்றி பெற வைப்பதற்குரிய உத்திகள் என்னிடம் இருக்கின்றன. என் ஸ்டைலில் செயல்பட முடியாத போது நான் ராஜினாமா செய்து விட்டு ஒரு தொண்டனாகவே இருப்பேன் என்று கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்கு நேரம் கேட்டு இருக்கிறேன். கர்நாடக சட்டசபைத் தேர்தல் நடைபெறுவதால் வருகிற மே மாதம் 10ஆம் தேதி வரை கட்சி பணிகளில் பிஸியாக இருப்பேன் என்றும் அண்ணாமலை கூறவே, கரு. நாகராஜன், அமர்பிரசாத் ரெட்டி ஆகியோர் பரபரப்புடன் எழுந்து நீங்கள் இப்படி பேசக்கூடாது என்று தெரிவித்தனர்.

கூட்டத்தில் சலசலப்பு
இதையடுத்து, கூட்டத்தில் இருந்த மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி எழுந்து, உங்களுடைய பேச்சு தெளிவாக இல்லை. அதனால் விளக்கமாக கூறுங்கள் என்றார். இதனையடுத்து மதுரையை சேர்ந்த ஷா என்ற கட்சி நிர்வாகி நாராயணன் திருப்பதி நாராயணன் கருத்துக்கு ஆட்சேபனை தெரிவித்தார். இதேநேரத்தில் ஏராளமானோர் அண்ணாமலையின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து முழக்கங்களை எழுப்பினர். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

வானதி சீனிவாசன்
அப்போது வானதி சீனிவாசன் எம்எல்ஏ கட்சியின் மைய குழுவில் பேசவேண்டிய கருத்தை ஏன் இப்போது பேசுகிறீர்கள்? என்று கேட்டார். இதனால் பா.ஜ.க. மாநில நிர்வாகிகள் மற்றும் அணி தலைவர்கள் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. கூட்டத்தில், பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் காந்தி, சரஸ்வதி உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். நேற்றைய பாஜக நிர்வாகிகள் கூட்டம் பரபரப்பாகவே நடந்து முடிந்துள்ளது. லோக்சபா தேர்தலுக்காக பாஜகவிற்கு எதிராக மத்திய அளவில் கூட்டணியை வலிமைப்படுத்த எதிர்கட்சிகள் முயற்சி செய்து வருகின்றன. அதே நேரத்தில் தமிழ்நாட்டில் பாஜக அதிமுக கூட்டணி பிளவுபடும் சூழ்நிலை உருவாகி வருகிறது. அண்ணாமலைக்கு எதிராக அதிமுக காய் நகர்த்த ஆரம்பித்து விட்டதாகவே அரசியல் நோக்கர்கள் கூறி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications