அவ்வளவுதானா? தமிழக தேர்தல் பற்றி.. அமித் ஷா மேஜைக்கு போன ரிப்போர்ட்.. உடனே பறந்த உத்தரவு!
சென்னை: தமிழக பாஜகவின் தொகுதிப்பொறுப்பாளர்களுக்கு பாஜகவின் தேசிய அமைப்புச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் மற்றும் தமிழக பாஜகவின் தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல் இருவரிடமிருந்தும் முக்கிய தகவல் ஒன்று பகிரப்பட்டுள்ளது.
அதாவது, "பாஜக போட்டியிடும் 27 தொகுதிகளில் இரட்டை இலக்கத்தில் இந்த முறை நாம் வெற்றிபெற்றாக வேண்டும். அதற்கு, தேசிய தலைமையிடமிருந்து என்ன உதவியோ அதனை கேட்டுப் பெற்றுக்கொள்ளலாம். அதே சமயம், இரட்டை இலக்கத்தில் நமது வெற்றி இருக்க வேண்டும் என்பதால் கடைசிக்கட்ட தேர்தல் வியூகத்தில் சீரியசாக இருக்க வேண்டும். அந்த வியூகம் என்னவென்பதை உங்களுக்கு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. அதனால், அந்த பணிகளில் தீவிரமாக இருங்கள். அலட்சியம் கூடாது.

மேலும், ஒவ்வொரு பூத்களிலும் பாஜகவுக்கு 60 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெறத்தக்க வகையில் உங்களின் வியூகங்கள் இருக்கட்டும். தோழமைக் கட்சிகளை ஒருங்கிணைத்து அவர்களின் வாக்குகள் முழுமையாக தாமரைக்கு கிடைக்க வழிவகை காணவேண்டும். நமக்கு கிடைத்த உளவுத் தகவலின்படி, பாஜக போட்டியிடும் தொகுதிகளில் நம் கூட்டணியில் உள்ள தோழமைக் கட்சிகளின் வாக்குகளை திமுக பக்கம் திசைத் திருப்ப அக்கட்சியிலுள்ள ஒரு டீம் சிரத்தையாக செயலாற்றுகிறது. அதனால், அதிமுக உள்ளிட்ட தோழமைக்கட்சிகளின் வாக்குகள் திமுக பக்கம் சென்று விடாதபடிக்கு உங்களின் கடைசிக்கட்ட முயற்சிகளும் வியூகங்களும் இருக்க வேண்டும்.
அந்த வகையில் ஒவ்வொரு பூத்திலும் 60 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை வாங்கித்தருகிற பாஜக நிர்வாகிகள் அனைவருக்கும் ஒரு சர்ப்ரைஸ் காத்திருக்கிறது. அதிக வாக்குகளை வாங்கித் தரும் நிர்வாகிகள் அனைவரையும் டெல்லிக்கு அழைத்துச் சென்று பிரதமர் மோடி மற்றும் அமைச்சர் அமித்சா ஆகியோரை சந்திக்கவும், அவர்களுடன் இணைந்து விருந்து சாப்பிடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன், பிரதமர் கையால் உங்களுக்கு நினைவு பரிசுகளும் வழங்கப்படும். அதனால், இதனை மனதில் நிறுத்தி பாஜகவை இரட்டை இலக்கத்தில் வெற்றுபெற வைக்க கடைசிக் கட்ட பணிகளில் சீரியசாக இருக்க வேண்டும்" என்று அறிவுறுத்தியுள்ளனர்.
இந்த ஆஃபர் விவகாரம் தான் தற்போது கமலாலயத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், இப்படி ஒரு நிலை எடுக்க என்ன காரணம் என விசாரித்தபோது, "அதிமுக கூட்டணியில் 27 இடங்களில் பாஜக போட்டியிடுகிறது. பாஜகவின் வெற்றி வாய்ப்புகள் பற்றி பல்வேறு கருத்துக்கணிப்புகள் வெளிவந்துள்ள நிலையில், உண்மை நிலவரம் அறிய ஆர்.எஸ்.எஸ். அமைப்பும், அந்த 27 தொகுதிகளிலும் அண்மையில் ஒரு சர்வே எடுத்துப் பார்த்துள்ளது. அந்த சர்வேயில், 3 இடங்களில் மட்டுமே பாஜக ஜெயிக்கும் என முடிவுகள் வந்துள்ளதாம்.
இந்த ரிசல்ட் ஆர்.எஸ்.எஸ்.சுக்கு அதிர்ச்சியைத் தந்த நிலையில், பாஜகவின் தேசிய தலைவர் நிதின் நபின்னுக்கு இந்த சர்வே ரிசல்ட்டை அனுப்பி வைத்துள்ளது ஆர்.எஸ்.எஸ்.! தேசிய தலைமை வழியாக மோடிக்கும் அமித் சாவுக்கும் அந்த முடிவுகள் அனுப்பி வைக்கப்பட்டதாம். இதனை அடுத்து நடந்த ஆலோசனையில்தான், பாஜக நிர்வாகிகளை முடுக்கி விடும் யோசனையில் இந்த ஆஃபர் திட்டத்தை கையிலெடுத்து அதனை பாஜகவின் தொகுதி பொறுப்பாளர்களுக்கும் கட்சியின் மாநில நிர்வாகத்திற்கும் அறிவுறுத்தப்பட்டது" என்று பின்னணிகளைச் சொல்கின்றனர் பாஜகவின் மேலிட தொடர்பாளர்கள்.
- சிறப்பு நிருபர் எழில்












Click it and Unblock the Notifications