இந்தியா போச்சு.. பாரத் ஏன்? இந்தி திணிப்பு! தமிழ் என உச்சரிக்க மோடிக்கு உரிமையில்லை- ஸ்டாலின் ஆவேசம்
சென்னை: சட்டங்களில் 'இந்தியா' என உள்ளதை 'பாரத்' என மாற்றும் மசோதாவுக்கு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதற்கு முன் இந்தி திணிப்பு என்ற புயலை எதிர்கொண்டதை போல் மீண்டும் எதிர்கொண்டு வீழ்த்துவோம் என எச்சரித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
இந்திய தண்டனை சட்டம் உள்ளிட்ட 3 சட்டங்களில் இந்தியா என்ற பெயர் உள்ள இடத்தில் இனி பாரத் எனும் பெயர் இடம்பெற வேண்டும் என்பது தொடர்பான மசோதாவை, நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்துள்ளார்.

இந்திய தண்டனை சட்டத்தின் பெயர் பாரதிய நியாய சன்ஹிதா என மாற்ற பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, குற்றவியல் நடைமுறை சட்டத்தின் பெயரை பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா மற்றும் இந்திய ஆதார சட்டத்தின் பெயரை பாரதிய சக்ஷயா என பெயரை மாற்ற இந்த மசோதாக்கள் பரிந்துரைக்கின்றன.
2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்தும் நோக்கில் 26 கட்சிகள் ஒன்றிணைந்து, "இந்தியா" என பெயர் சுருக்கம் வரும் வகையில் கூட்டணியை உருவாக்கியுள்ளன. இதற்கு பாஜக கடும் எதிர்வினையாற்றி வருகிறது. இந்தியாவின் பெயரை பாரத் என மாற்ற வேண்டும் என பாஜகவை சேர்ந்த பல்வேறு தலைவர்களும் கோரிக்கையை முன்வைத்தனர். இந்த நிலையில் தான் 3 சட்டங்களை, பாரத் என தொடங்கும் பெயர் கொண்டு மாற்றி அமைக்கும் மசோதாக்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
பாஜகவின் இந்த மசோதாக்களுக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், பாஜக அரசின் இந்த முயற்சிக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தியாவின் பன்முகத்தன்மையை சிதைக்க முயற்சிக்கும் பாஜகவின் இந்த முயற்சி மொழி ஏகாதிபத்தியத்தின் கோரத்தாண்டவம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய பாஜக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ள ட்வீட்டில், "பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, பாரதிய சக்ஷயா என பெயர் மாற்றம் செய்வது மொழி ஏகாதிபத்தியத்தை காட்டுவதாக உள்ளது. இனிமேல் தமிழ் என்ற வார்த்தையைக்கூட உச்சரிக்க பிரதமர் மோடிக்கோ, பாஜகவுக்கோ தார்மீக உரிமை இல்லை" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், "வரலாற்றில், தமிழகமும் திமுகவும் இத்தகைய அடக்குமுறைகளுக்கு எதிரான முன்னணிப் படைகளாக உருவெடுத்துள்ளன. இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள் முதல் நமது மொழி அடையாளத்தைப் பாதுகாப்பது வரை, இதற்கு முன் இந்தித் திணிப்பு என்ற புயலை எதிர்கொண்டோம். மீண்டும் தளராத உறுதியுடன் அதைச் மேற்கொள்வோம்.
இந்திய ஒற்றுமை என்ற அடித்தளத்துக்கே விரோதமானது மத்திய பாஜக அரசின் இந்தச் செயல். இந்தி காலனித்துவத்திற்கு எதிரான எதிர்ப்பு நெருப்பு மீண்டும் எரிகிறது. இந்தி மூலம் நமது அடையாளத்தை மாற்ற முயற்சிக்கும் பாஜகவின் செயலை உறுதியாக நின்று வீழ்த்துவோம்" என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications