பாஜக வளர்ச்சியை பார்த்து முதல்வருக்கு தூக்கம் கெடப்போகிறது.. சொல்கிறார் அண்ணாமலை
சென்னை: திமுக அமைச்சர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் முதல்வரை தூங்க விடுங்கள் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை "வேண்டுகோள்" விடுத்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பாஜக என்ற ஒரு கட்சி தமிழகத்தில் இல்லை என 5 ஆண்டுகளுக்கு முன் திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
ஆனால் இன்று பாருங்கள், பாஜகவை எதிர்க்கட்சியாக அவரே நினைக்கிறார். முதல்வருக்கு இரண்டு விதமான பயம் வந்துவிட்டது. முதலில் அவருடைய கட்சியில் யார் என்ன செய்வார்கள் என்பது முதல் பயமாகும்.

பாஜக வளர்ச்சி
அடுத்த பயம் பாஜக வளர்ச்சியை கண்டும் பயப்படுகிறார். இந்த இரு பயங்களும் சேர்ந்து முதல்வர் ஸ்டாலினின் தூக்கத்தை கெடுப்பதாக அவரே தெரிவித்துள்ளார். எனவே திமுக அமைச்சர்களையும் எம்எல்ஏக்களையும் நான் ஒன்று கேட்டுக் கொள்கிறேன். முதலமைச்சரை தூங்க விடுங்கள். ஒரு முதல்வருக்கு தூக்கம் என்பது மிகவும் முக்கியம்.

அமெரிக்க அதிபர்
அமெரிக்க அதிபராக இருந்த டொனால்ட் டிரம்ப் தூங்காமல் இருந்ததால் என்ன பிரச்சினை என்பதை நாம் பார்த்தோம். முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மிகவும் குறைவான நேரமே தூங்கினார். காலையில் 2 மணிக்கும், 3.30 மணிக்கும் ட்விட்டரில் டிரம்ப் கருத்துகளை பதிவிட்டு வந்தார். அதையெல்லாம் உலகம் பார்த்துக் கொண்டிருந்தது.

எட்டரை கோடி மக்கள்
கட்சியெல்லாம் தாண்டி எட்டரை கோடி தமிழக மக்களை ஆள கூடிய முதல்வருக்கு நல்ல ஒரு தூக்கம் தேவை. அதனால் திமுக நண்பர்கள், முதல்வரின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு அவரை தூங்குவதற்கு அனுமதியுங்கள். ஏனென்றால் பாரதிய ஜனதா கட்சி வளரும் போது தூக்கம் என்பது இன்னும் கெடும். அதனால் முதல்வர் தூங்குவதற்கு நிறைய அவகாசம் கொடுங்கள்.

உடன்பாடு
முதல்வர் சொன்ன கருத்தில் எனக்கு உடன்பாடு இருக்கிறது. அவர் சொன்னதில் எந்த தவறும் கிடையாது. வாயை கொடுத்து கெட்டு போவார்கள் என்பார்கள். ஆனால் இதில் முக்கியமான உண்மை என்னவென்றால் உள்ளத்தினில் என்ன இருக்கிறதோ அது வெளியே வருகிறது. மனதில் என்ன இருக்கிறதோ அது வெளியே வருகிறது.

திமுக அமைச்சர்கள்
திமுக அமைச்சர்களின் மனதில் ஜாதி இருக்கிறது, அதனால்தான் ஒரு அமைச்சர் ஒரு அதிகாரியை ஜாதி பெயர் சொல்லி கூப்பிடுகிறார். அந்த அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஒரு பேராசிரியாக இருந்து எம்எல்ஏவாக இருந்து கொண்டு உயர்கல்வித் துறை அமைச்சராகவும் இருந்து கொண்டு பொன்முடி ஓசி என பேசுகிறார்.

வார்த்தை
அந்த வார்த்தையை விட அவர் சொன்ன தோரணையை பாருங்கள். நேற்று ஏதோ ஒப்புக்கு சப்பாக மன்னிப்பு கேட்டார். அந்த தோரணையை பார்த்தாலே தெரியும் அவர்கள் மிட்டா மிராசுதாரர்களாகவே அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரன், தனக்கு ஒரு புகார் இருக்கு என சொல்ல வந்த பெண்ணை பேப்பரால் அடிக்கிறார்.

முதல்வர் வேதனை
இதை பாஜக கேட்ட போது செல்லமாக தட்டுனேன் என கூறியுள்ளார். திமுகவின் முடிவுரை இந்த காலகட்டத்தில் இந்த ஆட்சியில் எழுதப்பட்டுவிட்டது. இதை மக்கள் நிச்சயம் எழுதுவார்கள் என்பதில் எனக்கு எந்தவிதமான மாற்றுக் கருத்துகளும் இல்லை என்றார் அண்ணாமலை. கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த திமுக பொதுக் குழு கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில் என் முகத்தை பார்த்தாலே தெரியும், கட்சினர் சிலரது செயலால் தூக்கமின்றி தவிக்கிறேன். என்னை தூங்க விடாமல் செய்கிறார்கள். துன்பப்படுத்துவது போல் அமைச்சர்களோ, நிர்வாகிகளோ நடந்து கொண்டால் நான் என்ன செய்வது என கேள்வி எழுப்பினார்.












Click it and Unblock the Notifications