கோவையில் அக்.31-ல் பந்த்.. மாவட்ட பாஜக தன்னிச்சையாக செயல்படுவது ஏன்.. அண்ணாமலை பரபர விளக்கம்
சென்னை: கோவையில் நாளை மறுதினம் பந்த் போராட்டம் அறிவித்து மாவட்ட பாஜக தன்னிச்சையாக செயல்படுவது ஏன் என்பது குறித்து தமிழக மாநில தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார்.
கோவை உக்கடம் அருகே ஈஸ்வரன் கோயில் தெருவில் கார் சிலிண்டர் வெடித்ததில் உக்கசம் பகுதியை சேர்ந்த ஜமேஷா முபின் என்பவர் உயிர் இழந்தார். இது குறித்து கோவை உக்கடம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக 5 பேரை கைது செய்தனர்.
இந்த நிலையில் இந்த சம்பவத்தில் இறந்த முபின் உள்ளிட்டோருக்கு கேரள குண்டுவெடிப்பில் தொடர்புடையவர்களுடன் தொடர்பிருப்பதாக விசாரணையில் தெரியவந்தது. மேலும் முபினின் வீட்டிலிருந்து 100 கிலோ வெடி பொருட்களை கைப்பற்றப்பட்டன.

அஜாக்கிரதை
இந்த சம்பவத்தில் மாநில அரசின் அஜாக்கிரதை போக்கை கண்டித்து கோவை மாவட்ட பாஜகவினர் மற்றும் மக்கள் இணைந்து வேலைநிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்கள். இது தொடர்பாக தனிநபர் ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில் அண்ணாமலை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த பந்தானது தமிழகம் முழுவதுக்கும் அறிவிக்கப்பட்டது அல்ல.

எந்த சம்பந்தமும் இல்லை
இதற்கும் அண்ணாமலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என வாதாடினார். இந்த சம்பவம் தொடர்பாக நவம்பர் மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது. இது குறித்து அண்ணாமலை இன்றைய தினம் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில், கோவையில் அக்டோபர் 31 ஆம் தேதி பந்த் போராட்டத்தை அந்த மாவட்ட பாஜகவினரும் மக்களும் அறிவித்துள்ளனர்.

நிர்பந்தம் இல்லை
இதில் மாநில தலைவராக நான் எந்த நிர்பந்தமும் செய்யவில்லை. ஆயுத பூஜை, தீபாவளி முடிந்து இப்போதுதான் வியாபாரம் களைகட்டியுள்ளது , மேலும் நாளை ஞாயிற்றுக்கிழமை கடைகளுக்கு விடுமுறை, திங்கள் மீண்டும் பந்த்தால் கடையடைப்பு என்றால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என வியாபாரிகள் சங்கத்தினர் கேட்டுள்ளார்கள்.

பந்த்
இதனால் பந்தை நடத்துவதும் நிறுத்துவதும் முழுக்க முழுக்க மாவட்ட பாஜக மற்றும் மக்களின் முடிவாகும். இதில் என் தலையீடு எதுவும் இல்லை. ஒரு வேளை கோவை சம்பவத்தை என்ஐஏவுக்கு மாற்றுவதில் தமிழக அரது இன்னும் தாமதப்படுத்தியிருந்தால் தமிழகம் முழுவதும் பந்த் போராட்டத்திற்கு நான் ஏற்பாடு செய்திருப்பேன்.

கார் வெடிப்பு சம்பவம்
கடந்த 18 ஆம் தேதியே கோவையில் கார் வெடிப்பு சம்பவம் குறித்து மத்திய உளவுத்துறை தமிழக டிஜிபிக்கும் கோவை மாநகராட்சி கமிஷனருக்கும் கடிதம் எழுதியுள்ளது. ஆனால் அவர்கள் இருவருமே அந்த கடிதம் வரவே இல்லை என சாதிக்கிறார்கள். ஆனால் அந்த கடிதம் அனுப்பப்பட்டதற்கான ஆதாரம் என்னிடம் இருக்கிறது. இது குறித்து வழக்கு என வரும் போது ஆதாரத்தை நீதிமன்றத்தில் ஒப்படைப்பேன் என்றார்.












Click it and Unblock the Notifications