பெட்ரோல், டீசல் மீதான மாநில வரி.. நாவல் போல 3 பக்கத்திற்கு அறிக்கையா? பிடிஆருக்கு அண்ணாமலை பதிலடி!
சென்னை; பெட்ரோல், டீசல் மீதான மாநில வரி குறித்து தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்ட அறிக்கைக்கு பாஜக தலைவர் அண்ணாமலை பதில் அளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் பெட்ரோல் டீசல் மீதான மாநில வரிசையை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து பாஜக நாளை போராட்டம் நடத்துகிறது. மாநில அரசு பெட்ரோல், டீசல் விலை மீதான வரியைக் குறைக்கவில்லை. பாஜக ஆளும் மாநிலங்களில் பெட்ரோல், டீசல் குறைக்கப்பட்டுள்ளது.
ஆனால் தமிழ்நாட்டில் மாநில வரி குறைக்கப்படவில்லை. இதை குறைக்க வேண்டும். திமுக தனது வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்று கூறி பாஜக சார்பாக இந்த போராட்டம் நடத்தப்படுகிறது.

எதிர்ப்பு
ஆனால் தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் விலை மீதான மாநில வரியை மேலும் குறைக்க முடியாது என்று கூறி உள்ளார். பெட்ரோல், டீசல் மீதான வரியை மத்திய அரசுதான் 2014ல் இருந்து தொடர்ந்து உயர்த்தியது . அவர்கள்தான் இதன் மீதான வரியை குறைக்க வேண்டும், அவர்கள் குறைந்தால் தானாக அதன் மீதான மாநில வரி குறைந்துவிடும் என்று விளக்கமாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.

கிண்டல்
அதோடு பாஜகவின் போராட்டம் குறித்தும் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ட்வீட்டரில் பதில் அளித்துள்ளார். அதில், என்னது, விலை உயர்வை கண்டித்து போராட்டமா? ஆனால், அதற்கு முழு காரணம் வரி உயர்வு தானே? அதுவும், அனைத்து வரி உயர்வையும் பாஜகவும் அதன் கூட்டணிக் கட்சி அதிமுகவும் தானே செய்தன அப்போது, ஒரு கட்சியின் மாநிலத் தலைவர் சொந்தக் கட்சியின் தேசியத் தலைமையையும், கூட்டாளிகளையும் கண்டிக்குறாரோ?, என்று பிடிஆர் கேள்வி எழுப்பி உள்ளார்.

அண்ணாமலை பதில்
இதற்கு தமிழ்நாட்டு பாஜக தலைவர் அண்ணாமலை பதில் அளித்துள்ளார். அதில் பாஜக போராட்டம் குறித்து தவறான செய்தி பரப்பப்பட்டு வருகிறது. இதை வைத்து ஓவர் ரியாக்ட் செய்கிறார்கள். பெட்ரோல், டீசல் விலையை குறைக்காதது தொடர்பாக திமுக அரசு சொல்லும் பொய்களையும், நியாயமற்ற வாதங்களையும் எதிர்த்துதான் இந்த போராட்டம்.

அர்த்தம்
தமிழ்நாடு அரசு செய்யக்கூடிய ஒவ்வொரு செயலும் உங்கள் வாக்குறுதிக்கு எதிராக உள்ளது. இதனால் உங்கள் வாக்குறுதிகள் அர்த்தமற்றதாகி விட்டது. தேர்தல் வாக்குறுதிகளை கொடுக்கும் போது பெட்ரோல், டீசல் மீது இருக்கும் கலால் வரி குறித்து உங்களுக்கு எதுவும் தெரியாதா?

வாக்குறுதி
ஆட்சிக்கு வந்த பின் பல முறை பெட்ரோல், டீசல் மீதான விலை குறைப்பு குறித்து உங்களிடம் கேள்விகள் எழுப்பப்பட்டது. எப்போது பெட்ரோல், டீசல் விலையை வாக்குறுதி கொடுத்தபடி நீங்கள் குறைப்பீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது. பல கட்ட கோரிக்கைகள், விமர்சனங்களுக்கு பின் தமிழ்நாடு அரசு ஒரு வழியாக கடந்த ஆகஸ்ட் 14ம் தேதி பெட்ரோல் மீதான வாட் வரியை ரூபாய் 3 குறைத்தது.

வாட் வரி
ஆனால் டீசல் மீதான வாட் வரி குறைக்கப்படவில்லை. அதன்பின் கடந்த நவம்பர் 4ம் தேதி மத்திய அரசு பெட்ரோல் மீது 10 ரூபாயையும், டீசல் மீது 5 ரூபாயையும் குறைத்தது. இதையடுத்து பாஜக ஆளாத மாநிலங்கள் உட்பட 22 மாநிலங்களில் மாநில அரசுகள் வாட் வரியை குறைத்தது.

நாவல் போல அறிக்கை
இதனால் தமிழ்நாடு அரசு பெட்ரோல் மீதான வாட் வரியை குறைந்த பட்சம் மேலும் 2 ரூபாயையும். டீசல் மீதான வரியை குறைந்தபட்சம் 4 ரூபாயையும் குறைக்க வேண்டும். அதைவிட்டுவிட்டு ஒரு நாவல் போல 3 பக்க பக்கத்திற்கு அறிக்கை வெளியிட்டு தமிழ்நாடு மக்களை தவறாக வழிநடத்தாமல், உங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள், என்று அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு பாஜக தலைவர் அண்ணாமலை பதில் அளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications