இந்தியை திணித்தால் நிச்சயம் எதிர்ப்போம்.. சமரசமே கிடையாது.. பாஜக அண்ணாமலை
சென்னை: இந்தியை திணித்தால் எதிர்ப்போம். அதில் சமரசமே இல்லை என பாஜக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் பிபிசி தமிழுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில் இந்தியை வலுக்கட்டாயமாக திணித்தால் பாஜக கட்டாயம் எதிர்க்கும். அதில் சமரசமே கிடையாது. வலுக்கட்டாயமாகத் திணித்தது யார், சம்பந்தமே இல்லாமல் இதில் பாஜக பெயரை இழுத்து விடுகிறார்கள்.
முதல் கல்விக் கொள்கையில்தான் இந்தி திணிப்பு வருகிறது. இப்போது புதிய கல்விக் கொள்கையைப் பொறுத்தவரை கண்டிப்பாக தாய்மொழியில் படிக்க வேண்டும்.
8ஆவது வரை தாய்மொழி
எட்டாவது வரை தாய்மொழியில் படிப்பது ஒரு வாய்ப்பாகத் தரப்படுகிரது. மூன்று மொழி படியுங்கள். பிடித்த மொழியைப் படியுங்கள் என்கிறோம். இந்தி கட்டாயமல்ல, ஆனால் தமிழ் கட்டாயம். தமிழ்நாட்டில் 20 சதவீதம் பேர் மொழிவாரியாக சிறுபான்மையினராக இருக்கிறார்கள்.
நிலைப்பாடு
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட விவகாரத்தில் எங்களுக்கு ஒரே நிலைப்பாடுதான். இந்த விவகாரத்தைப் பொறுத்தவரை, உணர்ச்சிகளை ஒரு பக்கம் ஒதுக்கிவைத்துவிட்டு விவாதிக்க வேண்டும். ராஜீவ் காந்தி, ஒரு முன்னாள் பிரதமர் தமிழ்நாட்டில் கொல்லப்படுகிறார். பிரதமராக இருந்தபோது அவர் எடுத்த சில முடிவுகளுக்காகக் கொல்லப்படுகிறார்.
உச்சநீதிமன்றம்
இந்த வழக்கு தமிழகத்தைச் சேர்ந்த சி.பி.ஐ. அதிகாரியால் விசாரிக்கப்பட்டு, உச்ச நீதிமன்றம் வரை சென்று தீர்ப்பு வெளியாகிவிட்டது. இதற்கும் பா.ஜ.கவுக்கும் தொடர்பே கிடையாது. இதில் இந்தியர்களும் இருக்கிறார்கள். வெளிநாட்டவரும் இருக்கிறார்கள். இதற்கான சதி இந்தியாவுக்கு வெளியில் நடந்திருக்கிறது. ஆகவே, இந்திய அரசின் நிலைப்பாடு என்பது இந்தியாவுக்கான நிலைப்பாடுதான்.
பாஜக
தவறுசெய்தவர்கள் தண்டனைக் காலத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டும். இது தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாடு அல்ல. பேரறிவாளன் எந்தத் தவறும் செய்யவில்லை, ஒரே ஒரு பேட்டரிதான் வாங்கிக் கொடுத்தார் என்கிறோம். ஆனால், அது போன்ற விஷயங்களை நீதிமன்றம்தான் சொல்ல வேண்டும். இதற்கும் பா.ஜ.கவுக்கும் தொடர்பே இல்லை என்றார் அண்ணாமலை.