தமிழக மக்களுக்கே ஒன்றும் செய்யவில்லை.. இதில் இந்திய அளவில் ஆசைபடுவது ஏன்?.. முதல்வருக்கு பாஜக கேள்வி
சென்னை: நீட் தேர்வால் தற்கொலை செய்து கொள்ள காரணமே திமுகதான் என பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியிருந்தார்.
இதுகுறித்து பாஜக தலைவர் அண்ணாமலை நேற்றைய தினம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் நாளை (இன்று) தமிழக சட்டசபை சிறப்பு கூட்டம் கூடுகிறது. நீட் தேர்விலிருந்து விலக்கு கோரும் மசோதாவை திமுக அரசு தாக்கல் செய்கிறது.
இதற்கு ஆதரவு தர பாஜக எம்எல்ஏக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நீட் யாருக்கும் எதிரானது கிடையாது என்பதைத்தான் நாங்கள் தொடர்ந்து சொல்லி வருகிறோம். இன்னொரு தகவலையும் சொல்கிறேன். இது திமுக அமைச்சர்களுக்கு புதிதாக இருக்கும்.

புள்ளி விவரங்கள்
அதாவது சுகாதாரத் துறை இயக்குநர் ஒரு புதிதாக புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு நடக்க போகும் மருத்துவ படிப்புகளுக்கான சேர்க்கையை பொருத்தமட்டில் தமிழகத்தில் 25, 593 பேர் எம்பிபிஎஸ் சேருவதற்கு தகுதியாகவுள்ளனர். அதில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டின்படி 1600 பேர் தேர்வாகியுள்ளார்கள்.

நீட் தேர்வுக்கு பயிற்சி
மேனேஜ்மென்ட் கோட்டாவில் 15250 பேர் தேர்வாகியுள்ளனர். இதில் ஒரு முக்கிய அம்சம் என்னவென்றால் யாரெல்லாம் மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பித்துள்ளார்களோ அவர்களிடம் சுகாதாரத் துறை இயக்குநரகம் ஒரு கேள்வி கேட்டுள்ளார்கள். அதாவது நீட் தேர்வுக்கு பயிற்சி வகுப்பிற்கு சென்றீர்களா, இல்லையா என கேட்டுள்ளனர்.

மக்கள் மன்றம்
தமிழகத்தில் நீட் பயிற்சி வகுப்பு எடுத்தேன் என சொன்னவர்கள் 10,511 பேர். நீட் பயிற்சிக்கு செல்லவில்லை என சொன்ன மாணவர்கள் 15,082 பேர் ஆவர். இதன் மூலம் ஏகே ராஜன் கமிட்டி பொய்யான ஒரு தகவலை மக்கள் மன்றத்தில் வைத்திருக்கிறார்கள் என்பது உறுதியாகிவிட்டது. இவர்கள் சொன்ன ஒவ்வொரு பொய்யும் மக்கள் மன்றத்தில் கட்டவிழ்க்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வுக்கான பயிற்சி
99 சதவீதம் பேர் நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்பிற்கு சென்றுள்ளார்கள் என சொன்ன ஏகே ராஜனிடம் ஆர்டிஐ மூலம் கேட்ட போது எங்களிடம் டேட்டா இல்லை, அரசு சொன்ன டேட்டாவை சொன்னதாக சொல்லியுள்ளார். அது போல் ஆளுநருக்கு அனுப்பப்பட்ட மனுவிலும் நீட்டுக்கு 99 சதவீதம் பேர் கோச்சிங் போயுள்ளதாக சொல்லியுள்ளார்கள். நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநர் பல கேள்விகளை தமிழக அரசிடம் கேட்டுள்ளார்கள்.

ஆதாரம் இதோ
இந்த புள்ளி விவரங்களை எங்கிருந்து பெற்றீர்கள் என கேட்டுள்ளார்கள். இதற்கான ஆதாரம் தற்போது Directorate of Health வெளியிட்ட டேட்டாவில் உள்ளது. இதன் மூலம் நீட் யாருக்கும் எதிரானது இல்லை என்பது நிரூபணம் ஆகியுள்ளது. எனவே தூங்கி கொண்டிருக்கக் கூடிய இந்த அரசு, பொய்யை கூறி மக்களை ஏமாற்றிவிடலாம் என கூறும் அரசு உண்மையில் நீட் யாருக்கும் எதிரானது கிடையாது. திமுகவில் உள்ள மூத்த தலைவர்கள் நடத்தக் கூடிய தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்குத்தான் இது எதிரானது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

ஸ்டாலினுக்கு ஆசை
நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்றி அதை ஆளுநருக்கு அனுப்பி, அங்கிருந்து குடியரசுத் தலைவருக்கு சென்றால், கடந்த 2017 இல் குடியரசுத் தலைவர் என்ன செய்தாரோ அதைத்தான் தற்போது செய்ய போகிறார். எனவே மக்களை ஏமாற்ற வேண்டாம், முட்டாளாக்க வேண்டாம். முதல்வர் ஸ்டாலினுக்கு 2024 ஆம் ஆண்டு இந்தியாவின் துணை பிரதமராக வர வேண்டிய ஆசை உள்ளது. இதற்காக மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜரிவால், கேசிஆர் போல் புதிதாக ஸ்டாலினும் இணைந்துள்ளார்.

புதிய கூட்டணியை உருவாக்க முயற்சி
இவர்கள் சேர்ந்து புதிய கூட்டணியை உருவாக்குவதற்குத்தான் அனைத்து டிராமாக்களையும் நடத்தி கொண்டிருக்கிறார்கள். 2018இல் ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு தொடங்கினார். அதன் நிலை என்னவென்று முழு இந்தியாவும் பார்த்தது. எனவே மத்திய அரசின் விரோத போக்கை விட்டுவிட்டு தமிழக மக்களுக்காக இந்த 8 மாதங்கள் என்ன செய்தார் என்பதை முதல்வர் தன்னையே கேள்வி கேட்டுக் கொள்ள வேண்டும். பொங்கல் தொகுப்பில் ஊழல், நிறைய துறைகளில் ஊழல் மலிந்து விட்டது. இப்படி இருக்கும் நிலையில் முதல்வர் பேசுவதெல்லாம் அகில இந்திய, இந்திய என்பதாகும். உள்ளூர் மக்களுக்கே செய்ய முடியாதவர், எதற்காக அதிக ஆசைப்படுகிறார் என்பதுதான் எனது கேள்வி.
Recommended Video

25 சதவீத எம்பிபிஎஸ் சீட்
நீட் தேர்வுக்கு முன்னர் தமிழகத்தில் உள்ள 25 சதவீத எம்பிபிஎஸ் சீட்டுகளில் ராசிபுரம், திருச்செங்கோடு பகுதிகளில் மட்டுமே தேர்வாகியிருந்தனர். அதிலும் குறிப்பாக 2 அல்லது 3 பள்ளிகளிலிருந்து மட்டுமே வந்துள்ளார்கள். நீட் தேர்வுக்கு பின்னர் பிற்படுத்தப்பட்ட சமூகத்திலிருந்து, மலைவாழ் மக்கள் சமூகத்திலிருந்து பரந்து விரிந்து நிறைய பேர் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளார்கள். இதற்காகத்தான் நான் வெள்ளை அறிக்கை கேட்கிறோம். பாஜக, அதிமுக கலந்து கொள்ளாமல், திமுக கூட்டணி கட்சியினரே கலந்து கொண்டால் அது எப்படி அனைத்து கட்சி கூட்டமாகும்? என பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications