PMAY திட்டத்தில் வீடு கட்ட 70% செலவழிப்பதாக தமிழக அரசு கூறுவது முழுப் பொய்.. அண்ணாமலை குற்றச்சாட்டு!
சென்னை: PMAY-G திட்டத்தின் கீழ் கட்டப்படும் ஒவ்வொரு வீட்டிற்கும் 70% செலவழிப்பதாக தமிழக அரசின் கூற்று முழுக்கப் பொய்யானது. உண்மைச் சரிபார்ப்புக் குழு என்று அழைத்துக் கொள்ளும் தமிழக அரசு நியமித்துள்ள குழு, தன்னை உண்மைக்கு அப்பாற்பட்ட குழு என்றே அழைக்க வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
மத்திய அரசின் திட்டங்களுக்கு வேறு பெயர் கொடுத்து மாநில அரசு புதிய திட்டங்களாக அறிமுகம் செய்துள்ளது என்றும், வீடற்றோருக்கு வீடு வழங்கும் 'பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா' திட்டத்தை 'கலைஞர் கனவு இல்லம்' எனும் திட்டமாக திமுக அரசு பெயர் மாற்றியுள்ளது என்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்திருந்தார்.

தமிழக அரசின் உண்மை சரிபார்ப்புக்குழு விளக்கம்: இந்த நிலையில், தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு குழுவின் அதிகாரப்பூர்வ கணக்கில் இதுதொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது. அதில்,
பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம் : பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம் என்பது ரூ.1.2 லட்சம் வழங்கும் திட்டமாகும். இதில் ரூ.72,000 மத்திய அரசும், ரூ.48,000 தமிழ்நாடு அரசும் வழங்குகின்றன.
மத்துய அரசு வழங்கும் தொகை போதாது என்பதை உணர்ந்து தமிழ்நாடு அரசு, கான்கிரீட் கூரை அமைப்பதற்காக கூடுதலாக ரூ.1,20,000 வழங்குகிறது. ஆக, இத்திட்டத்தில் மொத்தம் ரூ.2,40,000 ஒரு பயனாளிக்கு வழங்கப்படுகிறது.
மேற்கண்ட ரூ.2.4 லட்சத்தில் தமிழ்நாடு அரசு 70% தொகையை வழங்குகிறது. மத்திய அரசு 30% மட்டுமே தருகின்றது.
திமுக அரசு கூறுவதை உண்மை என்று முன்வைப்பதற்காக மட்டுமே உருவாக்கப்பட்டிருக்கும், தமிழக அரசின் உண்மைச் சரிபார்ப்பாளர் என்று கூறிக்கொள்பவர் கூற்றைச் செய்தியாக்க, கோபாலபுரம் ஊடகம் களமிறங்கியதிலும் தவறான செய்தி வெளியிட்ட பின்பு அந்த பதிவை நீக்கியதிலும் ஆச்சரியமில்லை.
— K.Annamalai (@annamalai_k) February 22, 2024
எனவே, இங்கே சில…
கலைஞர் கனவு இல்லம் : இத்திட்டத்தின் முதல் கட்டமாக 1 லட்சம் வீடுகள் தலா ரூ.3.50 லட்சம் செலவில் இவ்வாண்டில் கட்டப்படும். தமிழ்நாடு அரசே ஒட்டுமொத்த நிதியையும் வழங்கும்.
கிராமங்களில் ஏழை, எளிய மக்களுக்கு வீடு கட்டித்தரும் திட்டம் இதுவாகும். 2030 ஆம் ஆண்டுக்குள் 'குடிசைகள் இல்லா தமிழ்நாடு' என்ற இலக்குடன் மொத்தம் 8 லட்சம் வீடுகள் கட்டித்தரப்பட இருக்கின்றன. பயனாளிகளுக்கு வீடு கட்ட நிலம் இல்லாவிடில், நிலத்தையும் அரசே வழங்குகிறது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அண்ணாமலை மறுப்பு: இந்நிலையில், தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்புக் குழு வெளியிட்ட தகவலை மறுத்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், திமுக அரசு கூறுவதை உண்மை என்று முன்வைப்பதற்காக மட்டுமே உருவாக்கப்பட்டிருக்கும், தமிழக அரசின் உண்மைச் சரிபார்ப்பாளர் என்று கூறிக்கொள்பவர் கூற்றைச் செய்தியாக்க, கோபாலபுரம் ஊடகம் களமிறங்கியதிலும் தவறான செய்தி வெளியிட்ட பின்பு அந்த பதிவை நீக்கியதிலும் ஆச்சரியமில்லை.
எனவே, இங்கே சில உண்மையான ஆதாரங்களை முன்வைக்கிறோம்:
1) PMAY-U கடன் இணைக்கப்பட்ட மானியத் திட்டத்தின் கீழ், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம், தேசிய வீட்டுவசதி வங்கிக்கு, வட்டி மானியம் வழங்குகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் ஒரு வீட்டுக்கு அதிகபட்ச வட்டி மானியம் ரூ.2.7 லட்சம் வரை வழங்கப்படுகிறது.
2) 2016-17 மற்றும் 2022-23 நிதியாண்டுகளுக்கிடையே, PMAY-G திட்டத்தின் கீழ் மத்திய அரசு தமிழக அரசுக்கு வழங்கியது ரூ. 5541 கோடி ஆகும். இந்த ஆண்டுகளில், இந்தத் திட்டத்துக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து பயன்படுத்திய மொத்த நிதி ரூபாய் 6921 கோடி.
ஒட்டுமொத்தப் பயன்பாட்டில், PMAY-G திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டுவதற்கு ஆன மொத்த செலவில், மத்திய அரசு 80% செலவிட்டுள்ளது என்பது தெளிவாகிறது.
3) இன்னும் சிறிது ஆழமாகச் சென்றால், எடுத்துக்காட்டாக, கடந்த நிதியாண்டு 2022-23ஐ உதாரணமாக எடுத்துக் கொள்வோம்.

மத்திய அரசின் பங்கு: ₹2004.39 கோடி
மொத்தப் பயன்பாடு (மாநிலப் பங்கு உட்பட): ₹2290.47 கோடி.
தமிழக அரசின் பங்கு ₹286.08 கோடி எனத் தெரிகிறது. ஆனால், தமிழக அரசின் செலவீட்டுப் பட்டியலில் வேறுவிதமாக இருக்கிறது.
உண்மைக்கு அப்பாற்பட்ட குழு: கடந்த 2022-23 நிதியாண்டில், ரூ.555.89 கோடி செலவழித்துள்ளதாக தமிழக அரசு கூறுகிறது. இது உண்மையாகச் செலவிட்ட நிதியை விட ₹269.81 கோடி அதிகமாகும். இதைக் குறித்து தணிக்கை அதிகாரிகள் கேட்கும்போது, தமிழக அரசு பதில் கூறிக்கொள்ளட்டும்.
சுருக்கமாகக் கூறினால், PMAY-G திட்டத்தின் கீழ் கட்டப்படும் ஒவ்வொரு வீட்டிற்கும் 70% செலவழிப்பதாக தமிழக அரசின் கூற்று முழுக்கப் பொய்யானது. உண்மைச் சரிபார்ப்புக் குழு என்று அழைத்துக் கொள்ளும் தமிழக அரசு நியமித்துள்ள குழு, தன்னை உண்மைக்கு அப்பாற்பட்ட குழு என்றே அழைக்க வேண்டும்." எனத் தெரிவித்துள்ளார் அண்ணாமலை.












Click it and Unblock the Notifications