செருப்பு போடாதவர்.. 75 வயதில் முதல்முறை எம்எல்ஏ.. யார் இந்த நாகர்கோவில் பாஜக வேட்பாளர் காந்தி?
சென்னை: நாகர்கோவில் தொகுதியில் சிட்டிங் எம்எல்ஏ-வான எம்.ஆர்.காந்தி மீண்டும் பாஜக சார்பாக போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. காலில் செருப்பு கூட அணியாமல், திருமணம் செய்யாமல் எளிய வாழ்க்கையை வாழ்ந்து வர்ம் எம்.ஆர்.காந்தி குறித்து விரிவாக பார்க்கலாம்.
சட்டசபைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக இடம்பெற்றுள்ளது. பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போது வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி சிட்டிங் எம்எல்ஏ-வான எம்.ஆர்.காந்திக்கு மீண்டும் சீட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நாகர்கோவிலில் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிட காய் நகர்த்தி வருவதாக சொல்லப்பட்டது.

யார் இந்த காந்தி?
ஆனாலும் எம்.ஆர்.காந்திக்கு தொகுதியில் இருக்கும் செல்வாக்கு அவருக்கு சாதகமாக அமைந்துள்ளது. ஏனென்றால் நாகர்கோவில் மக்கள் காந்தி எம்எல்ஏ ஆக வேண்டும் என்று விரும்புவதாக பலரும் சொல்வார்கள். கடந்த சட்டசபைத் தேர்தலில் நாகர்கோவில் தொகுதியில் திமுக சார்பாக போட்டியிட்ட சுரேஷ் ராஜனை 11,669 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
மிசாவில் சிறை சென்றவர்
பாஜகவின் தாய் இயக்கமான ஜனசங்கத்தின் மாவட்டத் தலைவராக 1967ஆம் ஆண்டு பொறுப்பில் இருந்தவர் எம்.ஆர்.காந்தி. அதேபோல் 1975ஆம் ஆண்டு மிசாவில் ஓராண்டு சிறையில் அடைக்கப்பட்டவர். தொடர்ந்து ஜனசங்கம் பாஜக கட்சியாக உருவெடுத்த போது, தொடர்ந்து பணிகளை மேற்கொண்டு வந்தவர் எம்.ஆர்.காந்தி.
திருமணம் செய்யவில்லை
அதுமட்டுமல்லாமல் 1996ஆம் ஆண்டு பத்மநாபபுரம் தொகுதியில் போட்டியிட்டு வென்ற முதல் பாஜக எம்எல்ஏ வேலாயுதம். அதன்பின் கன்னியாகுமரி மாவட்டத்தில் 25 ஆண்டுகளுக்கு பின் வென்ற எம்எல்ஏ எம்.ஆர்.காந்தி தான். செருப்பு கூட அணியாத எளிமையான வாழ்க்கை வாழ்பவர். அதேபோல் திருமணம் கூட செய்து கொள்ளாமல் பொதுவாழ்க்கையில் ஈடுபட்டு வருகிறார்.
6 முறை தோல்வி
2021 தேர்தலில் போட்டியிட்டு வெல்வதற்கு முன் 6 முறை சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர். கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல் உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட்டு ஒவ்வொரு முறையும் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருக்கிறார். இதன் காரணமாகவே 2021ஆம் ஆண்டு காந்தி மீது நாகர்கோவில் மக்களுக்கு ஒரு அனுதாபம் ஏற்பட்டது.
திமுக வேட்பாளர் யார்?
சொந்தமாக வீடு கூட இல்லாமல் கசங்கிய ஜிப்பாவுடன் கன்னியாகுமரி மாவட்டம் முழுக்க வலம் வந்தவர். தற்போது மீண்டும் நாகர்கோவில் தொகுதியில் எம்.ஆர்.காந்தி போட்டியிட இருக்கிறார். இவரை எதிர்த்து திமுக சார்பாக ஆஸ்டின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த முறை இவர் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர். இவர் ஏற்கனவே நாகர்கோவில் தொகுதியில் வென்றிருக்கிறார்.
களம் எப்படி?
இம்முறையும் நாகர்கோவில் தொகுதியில் சுரேஷ் ராஜன், ஹெலன் டேவிட்சன் உள்ளிட்டோர் சீட் கேட்டனர். இருந்தாலும் நாகர்கோவில் தொகுதியில் கிறிஸ்தவ நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பலரும் வென்றுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் ஆஸ்டின் கடந்த சில ஆண்டுகளாக அண்ணா அறிவாலயத்தில் இருந்து கட்சிப் பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.
சவால் அளிக்கும் பாஜக
இதனால் சில கணக்குகள் சரியாக அமைந்ததால், ஆஸ்டினுக்கு சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த முறை அல்லாமல் இம்முறை நாகர்கோவில் தொகுதியில் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்பதில் ஸ்டாலின் முனைப்புடன் இருக்கிறார். அதற்கேற்ப சிட்டிங் எம்எல்ஏ-வான என்.ஆர்.காந்திக்கு சீட் கொடுத்து பாஜகவும் சவால் அளித்துள்ளது.












Click it and Unblock the Notifications