டெல்லியை போல் தமிழ்நாட்டில் முடியாது.. நாங்கள் ஒற்றுமையாக நிற்கிறோம்.. தமிழிசைக்கு முத்தரசன் பதிலடி!
சென்னை: தலைநகர் டெல்லியை போல் பாஜகவால் தமிழ்நாட்டில் காலூன்ற முடியாது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். டெல்லியில் ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இணைந்து போட்டியிட்டிருந்தால், பாஜகவால் வென்றிருக்க முடியாது என்று கூறியுள்ள அவர், தமிழ்நாட்டை முன்னுதாரணமாக கொண்டு மற்ற மாநிலங்கள் பாஜகவை எதிர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
27 ஆண்டுகளுக்கு பின் டெல்லி சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று பாஜக ஆட்சியமைக்க உள்ளது. இதனைத் தொடர்ந்து பாஜக தரப்பில் முதலமைச்சரை தேர்வு செய்யும் ஆலோசனை நடைபெற்று வருகிறது. மொத்தமாக 70 தொகுதிகளில் 48 இடங்களில் பாஜகவும், 22 இடங்களில் ஆம் ஆத்மி கட்சியும் வெற்றி பெற்றுள்ளன.

ஆம் ஆத்மியின் முக்கிய தலைவர்களான அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா உள்ளிட்டோரும் தோற்கடிக்கப்பட்டுள்ளனர். இதனால் சட்டசபையில் வலிமையான எதிர்க்கட்சித் தலைவரை நியமிக்க முடியாத சூழல் ஆம் ஆத்மி கட்சிக்கு ஏற்பட்டுள்ளது. அதேபோல் டெல்லி சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் வாங்கிய 6.5 சதவிகித வாக்குகளே வெற்றியாளரை தீர்மானித்துள்ளது.
ஆம் ஆத்மி போட்டியிட்டு தோல்வியடைந்த 14 தொகுதிகளில், காங்கிரஸ் கட்சி பெற்ற வாக்குகள் முக்கிய பங்கு வகித்துள்ளது. அதாவது பாஜக வேட்பாளர்கள் மற்றும் ஆம் ஆத்மி வேட்பாளர்கள் இடையில் இருக்கும் வாக்கு வித்தியாசத்தை விடவும், காங்கிரஸ் கட்சி கூடுதலாக வாக்குகளை பெற்றுள்ளது. ஒருவேளை காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கூட்டணி அமைத்து போட்டியிட்டிருந்தால், நிச்சயம் ஆட்சியமைத்திருக்க வாய்ப்பு உருவாகி இருக்கும்.
நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணியில் இருந்த காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள், டெல்லி சட்டசபை தேர்தலில் பிரிந்து நின்று போட்டியிட்டதே பாஜக ஆட்சியமைக்க வழி வகுத்து கொடுத்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் பேசுகையில், டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி - பாஜக இடையிலான வாக்கு வித்தியாசம் சொற்பம் தான்.
காங்கிரஸ், இடதுசாரிகள் மற்றும் ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் இணைந்து போட்டியிட்டிருந்தால் பாஜகவால் வெற்றி பெற்றிருக்க முடியாது. தேர்தல் முறையில் 4 பேர் ஒரு தொகுதியில் போட்டியிட்டால், யார் அதிக வாக்குகள் பெறுகிறாரோ அவர் வெற்றிபெற்றவராக அறிவிக்கப்படுவார். அந்த அடிப்படையில் குறைவான வாக்கு, கூடுதலான இடங்கள் என்பதே நடைமுறையில் இருக்கும் தேர்தல் முறை.
இந்தியா கூட்டணி லோக் சபா தேர்தலை போல் போட்டியிட்டிருந்தால், ஆம் ஆத்மி 3வது முறையாக ஆட்சி அமைத்திருக்க முடியும். ஒற்றுமையின்மை காரணமாகவே பாஜக வெற்றி பெற்றுள்ளது. இந்த தோல்வி தற்காலிகமானது. இந்த தேர்தலில் இருந்து காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் இருப்பதை போல் இந்திய அளவில் செயல்பட வேண்டும்.
டெல்லி தேர்தலுக்கு முன்பே இந்த கட்சிகள் இணைந்து ஆலோசித்து முடிவு எடுத்திருக்க வேண்டும். தங்களுக்கே பலம் என்று அனைத்து கட்சிகளும் சொல்லிக் கொள்ளலாம். ஆனால் தேர்தல் முடிவுகள் யதார்த்தத்தை காட்டிவிட்டது. தமிழ்நாட்டில் ஒருபோதும் பாஜகவால் காலூன்ற முடியாது என்று தெரிவித்துள்ளார். டெல்லியை தாமரை மலர்ந்ததை போல் தமிழ்நாட்டிலும் தாமரை மலரும் என்று தமிழிசை கூறியிருந்தார்.












Click it and Unblock the Notifications