வட சென்னையின் கனவு நிறைவேறியது.. விம்கோ நகரில் நிற்கும் எக்ஸ்பிரஸ் ரயில்கள்.. பாஜக கொண்டாட்டம்
சென்னை: திருவொற்றியூர் விம்கோ நகர் ரயில் நிலையத்தில் நீண்டதூர எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிற்க வேண்டும் என வட சென்னை மக்கள் கோரிக்கைகள் வைத்து வந்தனர். இதன் மூலம் சென்னை சென்ட்ரலுக்கு செல்லாமல் இங்கு இறங்கி சென்னையின் இதரப் பகுதிகளுக்கு எளிதாக செல்ல முடியும் என்பதால் கோரிக்கையை ரயில்வே துறைக்கு வைத்தனர். இதனை ஏற்றுக்கொண்டு ரயில்கள் நின்று செல்ல ரயில்வே உத்தரவிட்டது. அதன்படி விம்கோ நகர் ரயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று சென்றது. இதனை பாஜகவினர் இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள்.
சென்னை விம்கோ நகர் ரயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்ல வேண்டும் என்பது வட சென்னை மக்களின் நீண்ட கால கோரிக்கையாக இருந்து வந்தது, திருவொற்றியூர், எர்ணாவூர், காசிமேடு மற்றும் ராயபுரம் போன்ற பகுதிகளில் வசிக்கும் மக்கள் இந்தக் கோரிக்கையைத் தொடர்ந்து முன்வைத்தனர். திருவள்ளூர் மற்றும் கும்மிடிப்பூண்டி வழித்தட ரயில் பயணிகள் சங்கங்களும் போராட்டத்தை முன்னெடுத்தன. அரசியல் கட்சிகளும் ரயில்வே அமைச்சகத்திற்கு கோரிக்கை வைத்தன.

ஆந்திர ரயில்கள் நிற்கும்
இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட ரயில்வே அமைச்சகம், சென்னை திருவொற்றியூர் பகுதியில் உள்ள விம்கோ நகர் ரயில் நிலையத்தை முக்கியமான போக்குவரத்து மையமாக மாற்றி உள்ளது. இங்கு எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கான நிறுத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி சென்னை சென்ட்ரல் மற்றும் ஆந்திர மாநிலங்களுக்கு இடையே இயங்கும் சில முக்கிய ரயில்கள் இப்போது விம்கோ நகரில் நின்று செல்கின்றன.
விம்கோ நகரில் நிற்கும் ரயில்கள்
சென்னை சென்ட்ரல் - விஜயவாடா செல்லும் பினாகினி எக்ஸ்பிரஸ், விஜயவாடா ஜன சதாப்தி எக்ஸ்பிரஸ், பித்ரகுண்டா பாசஞ்சர்/எக்ஸ்பிரஸ் பித்ரகுண்டா - சென்னை சென்ட்ரல் ஆகிய ரயில்கள் இனி திருவெற்றியூரில் நின்று செல்லும். இந்த ரயில்கள் சென்ட்ரலில் இருந்து செல்லும் போது நிற்காது. ஆனால் வரும் போது மட்டும் நிற்கும். உதாரணமாக பெரம்பூர் ரயில் நிலையம் போல் வரும் போது மட்டும் நிற்கும்.
மெட்ரோ இணைப்பு
விம்கோ நகர் ரயில் நிலையம் மெட்ரோ நிலையத்துடன் (Blue Line) நேரடியாக இணைக்கப்பட்டுள்ளதால், பயணிகள் எளிதாக சென்னை நகரின் மற்ற பகுதிகளுக்குச் செல்ல முடியும். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் கூட்ட நெரிசலைக் குறைக்கவும், வட சென்னை மக்கள் எளிதாகப் பயணம் செய்யவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
நடைமேடை அதிகரிப்பு
நீண்ட தூர ரயில்கள் நிற்பதற்காக இங்குள்ள நடைமேடைகள் விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. 24 பெட்டிகள் கொண்ட எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிற்கும் வகையில் சுமார் 500 மீட்டருக்கும் மேல் நடைமேடை நீளம் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து நேற்று முதல் முறையாக விம்கோ நகர் ரெயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று சென்றது.
பாஜகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
நேற்று முதல் ரயிலாக ஆந்திர மாநிலம் பித்ரகுண்டாவில் இருந்து சென்னை சென்டிரல் வரை செல்லும் நீண்ட தூர ரெயில் விம்கோ நகர் ரயில் நிலையத்தில் நின்று சென்றது. இதைக்கொண்டாடும் விதமாக பாஜகவினர் மற்றும் திருவொற்றியூர் நல சங்கத்தினர் டிரைவருக்கும், பயணிகளுக்கும் இனிப்புகள் வழங்கினர்.












Click it and Unblock the Notifications