மோடி வரும் அதே நாளில்.. பிளான் போடும் பாஜக தலைவர்கள்.. கூட்டணி வியூகம் தொடர்பாக முக்கிய முடிவு!
சென்னை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் மார்ச் 4ஆம் தேதி பாஜக மாநில மையக் குழு கூட்டம் நடைபெறுகிறது. பிரதமர் மோடி சென்னை வரும் நாளன்றே இந்தக் கூட்டம் நடைபெற உள்ளது.
சென்னை பாஜக தலைமையகமான கமலாலயத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் பாஜக மாநில மையக் குழு கூட்டம் நாளை மறுநாள் (மார்ச் 4) நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் லோக்சபா தேர்தல் கூட்டணி வியூகம், தேர்தல் அறிக்கை உள்ளிட்டவை தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாஜக மேலிடப் பொறுப்பாளர் அரவிந்த் மேனன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக எம்.எல்.ஏக்கள் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், தேசிய செயற்குழு உறுப்பினர்களான ஹெச்.ராஜா, பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்க இருக்கின்றனர்.
பிரதமர் நரேந்திர மோடி அன்றைய தினம் சென்னைக்கு வர இருக்கிறார். பிரதமர் மோடி கடந்த 27, 28-ம் தேதிகளில் 2 நாள் பயணமாக தமிழகம் வந்தார். அரசு நிகழ்ச்சிகள், பாஜக பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டு பேசினார். இந்நிலையில் மார்ச் 4ஆம் தேதி மோடி மீண்டும் தமிழகம் வருகிறார். மார்ச் 4ஆம் தேதி சென்னையில் நடைபெறும் பாஜக பொதுக் கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார் பிரதமர் மோடி.
சென்னையில் பிரதமர் மோடி பங்கேற்கும் பாஜக பொதுக்கூட்டத்தில் கூட்டணி கட்சித் தலைவர்களையும் பங்கேற்க வைக்க தமிழக பாஜக திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே பல்லடம் கூட்டத்தில் ஜிகே வாசன், ஏசி சண்முகம், தேவநாதன், ஜான் பாண்டியன், பாரிவேந்தர் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் ஆகியோரை பா.ஜ.க தலைமையிலான கூட்டணியில் சேர்க்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பாஜகவுடன் கூட்டணி என ஓபிஎஸ்ஸும் உறுதி செய்துள்ளார்.
ஓபிஎஸ் மற்றும் தினகரன் உடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை விரைவில் நடைபெற உள்ளதாகத் தெரிகிறது. இன்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியுடன் பாஜக தரப்பு பேச்சுவார்த்தை நடத்தியது. அப்போது 4 லோக்சபா தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா இடங்களை ஜிகே வாசன் கேட்டதாக கூறப்படுகிறது.
வரும் நாட்களில் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும் எனத் தெரிகிறது. பாரிவேந்தர், ஏசி சண்முகம், தமிழருவி மணியன், தேவநாதன், ஜான் பாண்டியன் ஆகியோருக்கு தலா ஒரு தொகுதியை பாஜக ஒதுக்க திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பரபரப்பான கூட்டணி பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் பாஜகவின் மாநில மையக்குழு கூட்டம் நடைபெற இருப்பதால், பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தேமுதிக, பாமக ஆகிய கட்சிகளை கூட்டணியில் சேர்க்க பாஜக முயன்ற நிலையில், அந்த இரண்டு கட்சிகளுமே அதிமுக கூட்டணியில் இணைய ஆர்வம் காட்டி வருகின்றன. இதனால், பாஜகவின் அடுத்த கட்ட முயற்சி என்பதும் மார்ச் 4ஆம் தேதிக்குப் பிறகு தெரியும்.
மோடி உரையாற்றும் வகையில் தமிழகத்தில் அடுத்தடுத்து பல இடங்களில் பொதுக் கூட்டங்களை நடத்தவும் தமிழக பாஜக திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ராமநாதபுரம், கோவை, கன்னியாகுமரி, உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் மோடி பங்கேற்பார் எனக் கூறப்படுகிறது. பிரச்சார பொதுக்கூட்டங்கள் நடத்துவது தொடர்பாகவும் மையக்குழு ஆலோசிக்க உள்ளதாக தெரிகிறது.












Click it and Unblock the Notifications