முதல்வர் ஸ்டாலின்.. தேவையே இன்றி பாஜகவை சீண்டி உள்ளார்.. அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டு!
சென்னை: முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் தேவையே இன்றி பாஜகவை சீண்டி உள்ளார் என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் திமுக நிர்வாகிகளுக்கு கடிதம் ஒன்றை எழுதினார். உள்ளாட்சி என்பது மக்களாட்சியான ஜனநாயகத்தின் ஆணிவேர். அது வலிவுடனும் பொலிவுடனும் இருந்தால்தான், அரசின் நலத்திட்டங்கள் நாளும் தழைத்து - நன்குசெழித்து, கடைசிப் பகுதியில் உள்ள குடிமக்கள் வரை, அவரவர்க்கான உரிமைகளையும் உற்ற நலன்களையும் பெறமுடியும்.
திராவிட முன்னேற்றக் கழகம் எப்போதுமே உள்ளாட்சிகளை, உரு சிதையா வண்ணம், உயர்த்தி வலிமைப்படுத்துவதில் தனிக் கவனம் செலுத்தக்கூடிய இயக்கமாகும். ஆட்சி செய்கின்ற வாய்ப்பு அமையும்போதெல்லாம், உள்ளாட்சி அமைப்புகள் செழித்து வளர்ந்திட முறையாக நீர் வார்ப்பது கழகத்தின் இயல்பு என்று குறிப்பிட்டு இருந்தார். இதில் பாஜகவையும் முதல்வர் விமர்சனம் செய்து இருந்தார்.

பாஜக விமர்சனம்
முதல்வர் ஸ்டாலின் கடிதத்தில், அமைதியான சூழலும் - நல்லிணக்கமான வாழ்க்கையும் கொண்ட தமிழ்நாட்டு மக்களின் மனதில் மதவெறியை விதைத்து, கலவரத்தைத் தூண்டிவிட்டு, அதில் அரசியல் குளிர்காய அவசரம் காட்டும் பா.ஜ.க.வின் சீரழிவு அரசியலை அம்பலப்படுத்துங்கள். மக்கள் நலனுக்கு எதிரான இரண்டு கட்சிகளும் கூட்டணி அமைத்து தமிழ்நாட்டைப் பாழ்ப்படுத்த நினைப்பதை எடுத்துக் கூறுங்கள். மதவாத அரசியலுக்கு ஒருபோதும் இடமளிக்காத தமிழ்நாட்டு மக்களின் தனித்தன்மையை நினைவுபடுத்துங்கள், என்று குறிப்பிட்டு இருந்தார்.

முதல்வர் ஸ்டாலின் கடிதம்
இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பாஜக தலைவர் அண்ணாமலை இன்று பதில் அளித்துள்ளார். அதில், அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது கவலை இல்லை. பாஜகவை மக்கள் இடையே கொண்டு செல்ல இந்த தேர்தல் வசதியாக இருக்கும். தமிழ்நாட்டில் திமுகவின் மோசமான ஆட்சியை மக்களிடம் எடுத்து சொல்வோம். 8 மாதத்தில் திமுக நிறைய எதிர்ப்புகளை சம்பாதித்து இருக்கிறது. நிறைய வாக்குறுதிகளை கொடுத்தனர். இதை செய்வோம், அதை செய்வோம் என்றனர். ஆனால் திமுக எதுவும் செய்யவில்லை.

அண்ணாமலை
திமுகவின் பொய் பிரச்சாரத்தை மக்களிடம் கொண்டு செல்வோம். நேற்று முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் தேவையே இன்றி பாஜகவை சீண்டி உள்ளார். பாஜக மதவாத கட்சி, நாங்கள் மதத்தை வைத்து அரசியல் செய்கிறோம் என்று கூறியுள்ளனர். இன்று மதுரை ஹைகோர்ட்டில் நீதிபதி கொடுத்த தீர்ப்பில் பாஜக, பொது மக்கள், மாணவியின் பெற்றோர் எல்லோரும் வைத்த கோரிக்கையை நிறைவேற்றி உள்ளார். அவர் நீதியின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கி உள்ளார்.

திமுக பொய்
இந்த தீர்ப்பு மதத்திற்காக செய்யப்பட்டதா.. நியாயத்திற்காக செய்யப்பட்டதா என்பதை முதல்வர் ஸ்டாலின் தன்னை தானே கேட்டுக்கொள்ள வேண்டும். எங்களின் முழு ஆதரவு மாநிலத்தின் முதல்வருக்கு எப்போதும் இருக்கும். அதை தொடக்கத்தில் இருந்தே செய்து வருகிறோம். எந்த விதமான அரசியலை முன்னெடுக்க வேண்டும் என்று திமுகதான் முடிவு செய்ய வேண்டும். எப்படிப்பட்ட அரசியலை செய்ய போகிறோம் என்பதை திமுகதான் முடிவு செய்ய வேண்டும்.
Recommended Video

அண்ணாமலை விமர்சனம்
எப்படிப்பட்ட கொள்கையை கடைபிடிக்க வேண்டும் என்று அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும் . அவர்கள் செய்கிற செயல்கள், பேசுகிறது பேச்சுக்கள் அனைத்திற்கும் பாஜக பதிலடி கொடுக்கும். திமுகவிற்கு எதிராக ஒவ்வொரு நாளும் நாங்கள் களத்தில்தான் இருக்கிறோம். அதை முதல்வர் ஸ்டாலினும் புரிந்து கொள்ள வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம் என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications