ஆ.ராசா எம்பியை கண்டித்த.. பாஜக கவுன்சிலர் உமா ஆனந்த்! சென்னை மாநகராட்சி கூட்டத்தில் சலசலப்பு
சென்னை: சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குறித்து திமுக எம்பி ஆ.ராசா பேசியிருந்த கருத்துக்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இன்று சென்னை மாநகராட்சி கூட்டத்தில், திமுக எம்பி ஆ.ராசாவுக்கு பாஜக கவுன்சிலர் உமா ஆனந்த் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
சில நாட்களுக்கு முன்னர் சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றிருந்த ஆ.ராசா, மத்திய அரசையும் பாஜகவையும் கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார். அதேபோல அமித் ஷாவையும் விமர்சித்திருந்தார். இதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஏற்கெனவே ராசா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பாஜகவினர் புகார் அளித்தனர்.

அதேபோல பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனும், ஆ.ராசாவுக்கு எதிராக கடுமையான கண்டனங்களை பதிவிட்டிருக்கிறார். "கண்களுக்குத் தெரியாத காற்றில் கூட ஊழல் செய்து, அம்பலப்பட்டு, சிறை சென்று வந்த தி.மு.க., எம்.பி., ஆ. ராசா, நாட்டிற்காக நேர்மையாக உழைத்துக் கொண்டிருக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தரக்குறைவாக விமர்சித்துள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. மக்களின் பிரதிநிதியாக பார்லிமெண்டில் பதவி வகிப்போருக்கு நாவடக்கம் தேவை. உங்கள் கட்சியின் ஆபாசப் பேச்சாளர்கள் போல கைத்தட்டல்களுக்காக எதையாவது உளறுவது ஆபத்தானது.
கடந்த சில தினங்களாக பயங்கரவாதிகளின் புகலிடமாகத் தமிழகம் மாறியதற்கு முழு முதற்காரணம் உங்கள் திராவிட மாடல் அரசு, சர்வதேச போதைப் பொருள் கடத்தல் மன்னனைக் கட்சிப் பொறுப்பில் வைத்துத் தாலாட்டிக் கொண்டிருந்த அரசு உங்கள் விடியா அரசு.
தமிழகத்தில் ஆயுதக் கலாச்சாரம் வேரூன்றி வளர்வதை வேடிக்கை பார்க்கும் அரசு உங்கள் விளம்பர மாடல் அரசு, கர்ப்பிணிப் பெண்ணைக் காவல் நிலையத்திலேயே வைத்துக் கொடூரத் தாக்குதல் நடத்திய அரசு உங்கள் கொடுங்கோல் அரசு.
இப்படி பொதுமக்களின் பாதுகாப்பை முழுவதுமாக அடகுவைத்த நீங்கள், இந்தியா என்ற மாபெரும் ஜனநாயக நாட்டின் பாதுகாப்பை மொத்தமாகக் கட்டிக் காக்கும் மத்திய உள்துறை அமைச்சரைப் பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது?
அதுசரி, தி.மு.க., ஆட்சியில் தமிழகத்தின் அவல நிலை குறித்து எதுவும் தெரியாமல், "நாம் தான் நம்பர் 1 முதல்வர்" என்ற மாய உலகில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் ஒருவரை தலைவராகக் கொண்ட மூடர் கூட்டத்திற்கு அனைவரும் முட்டாளாகத் தான் தெரிவார்கள், மஞ்சள் காமாலைக்காரர் கண்களுக்கு அத்தனையும் மஞ்சளாகத் தெரிவது போல. உங்கள் கீழ்த்தரமான ஆணவமிக்க அரசியல் நாகரிகமற்ற பேச்சுக்களுக்கு, தமிழக மக்கள் உங்களை 2026க்குப் பிறகு அரசியலை விட்டே துரத்திவிடுவது உறுதி" என்று கடுமையாக கண்டனம் தெரிவித்திருந்தார்.
இதனை தொடர்ந்து இன்று மாநகராட்சி கூட்டத்தில், ராசாவுக்கு பாஜக கவுன்சிலர் உமா ஆனந்த் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications