'கெட் அவுட்'.. அதிர்ந்த சென்னை மாநகராட்சி.. கிழித்து எறிந்து பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன் ஆவேசம்
சென்னை: சென்னை மாநகராட்சி கூட்டத்தில் இருந்து இன்று அதிரடியாக வெளிநடப்பு செய்த பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன், பள்ளிகளில் ஜாதிப் பாகுபாடுகளை நீக்குவது குறித்த முன்னாள் நீதிபதி சந்துருவின் ரிப்போர்ட் நகலை கிழித்து எறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
லோக்சபா தேர்தலுக்குப் பின் முதல் முறையாக சென்னை மாநகராட்சி கவுன்சில் கூட்டம் இன்று தொடங்கியது. இதில் கலந்து கொண்ட பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன், பள்ளிகளில் ஜாதிப் பாகுபாடுகளை நீக்குவது குறித்த முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி சந்துருவின் சமீபத்திய அறிக்கையைக் கண்டித்து கடுமையாக பேசினார். அத்துடன் கவுன்சிலர் உமா ஆனந்தன் மாநகராட்சி கூட்டத்திலேயே ஓய்வு பெற்ற நீதிபதி சந்துருவின் அறிக்கை நகலை கிழித்து எறிந்தார்.

தொடர்ந்து சென்னை மாநகராட்சி கூட்டத்தொடரில் இருந்து வெளிநடப்பு செய்த கவுன்சிலர் உமா ஆனந்தன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "திருப்பூர் பல்லடம் பக்கத்தில் குறிப்பிட்ட சாதியை சேர்ந்தவர்கள் கிறிஸ்தவ சுடுகாட்டில் விடவில்லை.. இதை பற்றி எல்லாம் நீதிபதி சந்துரு பேசியிருக்க வேண்டும். ஒரு தலைபட்சமான அறிக்கை, ஒரு தலைபட்சமான நீதிபதியை வைத்து ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அடுத்ததாக ஆகமத்துக்கு.. ஆகமத்துக்கு ஒரு நீதிபதி வைக்குறாங்க.. அவர் கடவுள் மறுப்பு கொள்கையாளர்.. அவரை எப்படி ஆகமத்துக்கு போடலாம்.. அதில் எவ்வளவு முரண்பாடுகள் இருக்கிறது. அவர்களுக்கு வேண்டப்பட்டவர்களை வைத்து ரிப்போர்ட் போடுவது என்பது கண் துடைப்பு நாடகம்.
நீதிபதி சந்துருவின் அறிக்கைக்கு சென்னை மாநகர மாமன்ற கூட்டம் கண்டனம் தெரிவிக்க வேண்டும். அவர்கள் கண்டனம் தெரிவிக்கவில்லை. இதனால் நீதிபதியின் அறிக்கையை நான் கிழித்து போட்டேன். ஒரு திமுக உறுப்பினர் என்னை வெளியே போக சொன்னார். யார் என்று கூட என்னால் பெயரை சொல்ல முடியும்.. இந்த சமயத்தில் நாம் ஏன் இதை பற்றி பேச வேண்டும் என்றார். இந்த சமயத்தில் ஏன் உதயநிதி ஸ்டாலினுக்கு துதி பாடுறீங்க.. முதல்வர் ஒகே.. உதயநிதிக்கு எதுக்கு துதி பாடனும்.. " இவ்வாறு ஆவேசமாக கவுன்சிலர் உமா ஆனந்தன் பேசினார்.
இதனிடையே சென்னை மாநகராட்சி கூட்டத்தில் நீதிபதி சந்துருவின் அறிக்கையை கிழித்து போட்ட பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தனை அடுத்த 3 மாதங்களுக்குள் அவைக்குள் நுழைய தடை விதிக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி கவுன்சிலர் அம்பேத்வளவன், சென்னை மேயர் பிரியாவிடம் கோரிக்கை விடுத்தார். அவரது கோரிக்கைக்கு திமுக கவுன்சிலர்கள் அனைவரும் ஆதரவு தெரிவித்தனர். ஆனால் என்ன முடிவு எடுக்கப்பட்டது என்பது குறித்து தகவல்கள் வெளியாகவில்லை..
சென்னை மாநகராட்சி கூட்டத்தில் இருந்து இன்று அதிரடியாக வெளிநடப்பு செய்த பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன் பள்ளிகளில் ஜாதிப் பாகுபாடுகளை நீக்குவது குறித்த முன்னாள் நீதிபதி சந்துருவின் ரிப்போர்ட் நகலை கிழித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நீதிபதி சந்துருவின் அறிக்கையை பாஜக நிர்வாகிகள், பாஜக தலைவர்கள் பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்தது குரல் கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications