"சிட்டிங்" சரியில்லை.. 40% எம்.பிக்கு சீட்டு இல்லை.. புதுமுகங்கள்தான்.. பாஜக அதிரடி
சென்னை: தற்போது உள்ள எம்.பிக்களின் செயல்பாடுகள் சுத்தமாக சரியில்லை என்பதால் வரும் லோக்சபா தேர்தலில் 40 சதவீதம் புதுமுகங்களுக்கு வாய்ப்பளிக்க பாஜக திட்டமிட்டுள்ளதாம்.
கடந்த மக்களவை தேர்தலில் இருந்தது போல் இப்போது மோடி அலை எதுவும் இல்லை. இந்த முழக்கம் எதிர்கட்சிகளால் தொடர்ந்து வைக்கப்படுகிறது. இதை பாஜகவும் தற்போது உணர்ந்துள்ளது. தனியார் நிறுவனங்கள் மூலம் பல்வேறு கணக்கெடுப்புகளை நடத்திய பாஜக தங்களுக்கு நாடு முழுவதும் உள்ள எதிர்ப்பலையை உணர்ந்தே உள்ளது. ஆகவே மாற்று முறைகளை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளது.
பல்வேறு தனியார் ஊடகங்கள் நடத்திய கருத்துக் கணிப்புகளில் பெரும்பான்மையான கருத்துக் கணிப்புகள் கடந்த முறை போல இம்முறை மோடிக்கான செல்வாக்கோ அல்லது பாஜகவுக்கான செல்வாக்கோ இல்லை என்றே கூறி வருகின்றன. பாஜக சில தனியார் நிறுவனங்கள் மூலம் நடத்திய கணக்கெடுப்புகளும் இதை வழிமொழிவது போலவே உள்ளது என தகவல்கள் கூறுகின்றன. நாடு முழுவதும் உள்ள பாஜக சிட்டிங் எம்.பிக்கள் மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனராம்.

அதிருப்தி அலை
நாட்டில் உள்ள மொத்தம் 28 மாநிலங்களில் 12 மாநிலங்களில் பாஜக ஆட்சியையும் 6 மாநிலங்களில் கூட்டணி கட்சிகளின் ஆட்சியும் நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சிகளின் மீது மக்களுக்கு அதிருப்தி உள்ளது என்பதை சமீபத்திய கணக்கெடுப்புகள் கூறுவதாக பாஜக சீனியர்கள் கூறுகின்றனர். அதே வேளையில் அந்த கணக்கெடுப்புகள் சிட்டிங் எம்.பி க்களுக்கு பதிலாக புது முகங்களை களத்தில் இறக்கினால் வெற்றிக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளன.

புதுமுகங்களுக்கு வாய்ப்பு
இதை கவனத்தில் எடுத்துள்ள பாஜக புது முகங்களுக்கு வாய்ப்பளிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. மொத்தமுள்ள சிட்டிங் எம்.பி.க்களில் 40% எம்.பி.க்கள் மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளதை அந்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இதனால் இவர்களை மாற்றிவிட்டு புதியவர்களுக்கு வாய்ப்பளிக்க பாஜக தலைவர் அமிட்ஷா திட்டமிட்டுள்ளதாக பாஜக மூத்த தலைவர் ஒருவர் கூறினார்.

அத்வானிகளுக்கு இடமில்லை
கடந்த 2014 ம் ஆண்டு மக்களவை தேர்தலின்போதே வயது முதிர்ந்தவர்களுக்கு போட்டியிட வாய்ப்பளிப்பதில்லை என்ற முடிவுக்கு பாஜக வந்திருந்தது. (அத்வானி இப்படித்தான் கழட்டி விடப்பட்டார்). கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற நாடாளுமன்ற பாஜக கூட்டத்திலும் குறிப்பிட்ட வயதுக்கு மேலுள்ளவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிப்பதில்லை என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

91 தொகுதிகளுக்கு புதுமுகம்
ஆகவே வரும் தேர்தலில் நாடு முழுவதும் பல புதிய முகங்களை பாஜக களம் இறக்கும் என எதிர்பார்க்கலாம். முதற்கட்டமாக நடைபெறவுள்ள 91 தொகுதிகளுக்கும் கூட பல புதிய முகங்களை பாஜக வேட்பாளர்களாக அறிவிக்கும் திட்டத்தில் உள்ளது. இந்த அறிவிப்பு இன்னும் ஓரிரு தினங்களில் வெளியாக வாய்ப்புள்ளது.












Click it and Unblock the Notifications