கரூர் பலி.. “ஆளுங்கட்சி முக்கிய புள்ளி சதி? விஜய்யை மிரட்டிய ராகுல் காந்தி” CBI விசாரணை கோரும் பாஜக
சென்னை: "கரூர் நெரிசல் பலி சம்பவத்தில், உள்ளூர் அரசியல்வாதிகளின் சதி இருக்கிறதா? எவ்வளவு பெரிய அரசியல் சக்தியாக இருந்தாலும் ஆளுங்கட்சியின் முக்கிய புள்ளியாக இருந்தாலும் விசாரணை நடத்தப்பட வேண்டும். ராகுல் காந்தியால் விஜய் மிரட்டப்பட்டதாக சொல்லப்படுவது குறித்தும் சிபிஐ விசாரணை வேண்டும்" என தமிழக பாஜக வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் விடுத்துள்ள அறிக்கையில், "கரூர் 41 பேர் பலியான கோர சம்பவத்தில், அரசியல் சதி இருக்கிறதா? என 6 கோடி தமிழக மக்களின் கேள்விக்கு விடை காண சிபிஐ விசாரணையை முதல்வர் ஸ்டாலின் அறிவிக்க வேண்டும். தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் ஆலோசனைகளை தவிர்க்க வேண்டும்.

சிபிஐ விசாரணை
கரூர் தவெக பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான அதி முக்கியத்துவம் வாய்ந்த கோரமான சம்பவத்தில், கண்துடைப்புக்காக திமுக அரசு நியமித்துள்ள முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான குறுகிய கால அவகாச விசாரணை அறிக்கையால் எந்தவித பயணம் ஏற்படாது என்பதால் தமிழக அரசு காலம் தாழ்த்தாமல் உடனடியாக சிபிஐ விசாரணையை அறிவிக்க வேண்டும்.
போஸ்ட்மார்ட்டம் அறிக்கை
மிக முக்கியமாக இறந்தவர்களின் உடலை பிரேதப் பரிசோதனை செய்வதில் தமிழக அரசு முழு கவனத்துடன் செயல்பட்டு உண்மைகளை வெளிக் கொணரும் வரையில் வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட வேண்டும். இது போன்ற சர்ச்சைக்கிடமான சந்தேகத்திற்கிடமான மரண சம்பவங்கள் ஏற்படும் போது பல்வேறு நீதிமன்றங்களின் தீர்ப்புகளின் அடிப்படையில் போஸ்ட்மார்ட்டம் செய்யப்படும் பொழுது அனுபவம் வாய்ந்த டாக்டர்களை கொண்டு போஸ்ட்மார்ட்டம் நடப்பதை முழுமையாக வீடியோ எடுக்கப்பட வேண்டும் என்பதே தமிழக அரசு பின்பற்றியுள்ளதா என்பதை தெரிவிக்க வேண்டும்.
இறந்தவர்கள் குடும்பத்துக்கு உடல்களை வேகமாக ஒப்படைக்க வேண்டும் என்ற கருத்து சரியானதாக இருந்தாலும், சட்டத்தின் வழிகாட்டுதல்படி இந்த துயர சம்பவத்திற்கு ஆதாரமான உண்மை தகவல்களை அளிக்கக்கூடிய போஸ்ட்மார்ட்டம் பரிசோதனை மற்றும் ரிப்போர்ட்களில் சமரசம் இல்லாமல் தமிழக அரசு முழு கவனத்துடன் வெளிப்படை தன்மை உடன் செயல்பட வேண்டும்.
காவல்துறையினரிடமும் விசாரணை
மேலும் தமிழக அரசு முதல் கட்ட விசாரணையை துரிதப்படுத்தும் வகையில், சிபிஐ விசாரணைக்கு முன்பாக, உடனடியாக ஐஜி அந்தஸ்தில் உள்ள ஒரு நேர்மையான காவல்துறை அதிகாரி விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டு அவருக்கு கீழே ஒரு டி.ஐ.ஜி குறைந்தபட்சம் மூன்று அனுபவம் வாய்ந்த டிஎஸ்பிக்கள் தலைமையில்
குழுக்கள் அமைக்கப்பட்டு, எத்தனை காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர், மாவட்டக் காவல்துறையினர், போக்குவரத்து காவல்துறையினர் ஆயுதப்படை காவலர்கள் எத்தனை பேர் நியமிக்கப்பட்டனர் என்பது உள்பட தமிழக மக்கள், முக்கிய பத்திரிகையாளர்கள் ஊடகங்கள் எழுப்பி உள்ள அனைத்து கோணங்களில் முழுமையான கள ஆய்வுடன் கூடிய விசாரணை நடத்த வேண்டும்.
முழுமையான விசாரணை
தமிழக வெற்றி கழகத்தின் நீதிமன்ற மனுவில் கூறப்பட்டுள்ள சந்தேகப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து, இந்த கோர குற்றச் செயலில் அரசியல் பின்னணி இருக்கிறதா? உள்ளூர் அரசியல்வாதிகளின் சதி இருக்கிறதா? என்பதையும் தயவு தாட்சண்யம் இல்லாமல் பாரபட்சமில்லாமல், எவ்வளவு பெரிய அரசியல் சக்தியாக இருந்தாலும் ஆளுங்கட்சியின் முக்கிய புள்ளியாக இருந்தாலும், வெளிப்படை தன்மை உடன் சந்தேகம் எழுப்பப்பட்ட நபர்களுக்கு காவல்துறை சார்பாக சம்மன் அளித்து விசாரணை முழுவதுமாக நடத்தப்பட வேண்டும். மின்சார வாரியம் மற்றும் உள்ளாட்சி நிர்வாக அதிகாரிகள் மற்றும் உள்ளூர் தாசில்தார் வரை அனைவரிடமும் 41 உயிர்களை பலி கொண்ட இந்த கோர சம்பவத்தின் காண காரணங்கள், சந்தேகங்கள் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும்.
முன்னதாக, கரூர் டிஎஸ்பி செல்வராஜ் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கண்துடைப்புக்காக புதிய விசாரணை அதிகாரியாக ஏடிஎஸ்பி பிரேமானந்தன் நியமனம் செய்யப்பட்டுள்ளது தமிழக அரசின் அக்கறை இன்மையும் விசாரணையில் போதிய முன்னறிப்பை துரிதமாக எடுத்துச் செல்வதில் ஆர்வம் இல்லாததையும் பல்வேறு சந்தேகங்களையும் எழுப்புகிறது.
விஜய்யை மிரட்டிய ராகுல் காந்தி
நேற்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்க்கு ஆறுதல் கூறியதாக கூறப்பட்டாலும், திமுக அரசோடு இணக்கமாக செல்லுங்கள் இல்லையென்றால் பின் விளைவுகள் ஏற்படும் என்று தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் மிரட்டப்பட்டதாக தகவல் அறிந்து வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து, நேற்று ராகுல் காந்தி இது தொடர்பாக யார் யாரிடம் என்ன பேசினார் என்பதை மரியாதைக்குரிய நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையமும், தமிழக காவல்துறையும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் விசாரணை நடத்த வேண்டும்.
மேலும் கரூர் கோர சம்பவத்தின் பின்னணியில் அரசியல் சதி உள்ளது உள்ளூர் நபர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள் என்ற தமிழக வெற்றி கழகத்தின் குற்றச்சாட்டுகளை நீர்த்துப் போக செய்யும் வகையில், உண்மைகளை தடுப்பதற்கு , நடிகர் விஜய்க்கு அழுத்தம் கொடுத்து ராகுல் காந்தி மறைமுக முயற்சி எடுத்து வருவதை தமிழக பாஜக விரைவில் அம்பலப்படுத்தும்.
விசாரணைக்கு துணை நிற்போம்
நடிகர் விஜய் தன்னைக் காண, தன்னுடைய தேர்தல் பரப்புரைக்காக வந்து உயிரிழந்த 41 பேருக்கு ஆத்மார்த்தமாக அஞ்சலி செலுத்தும் வகையில், அந்த குடும்பங்களுக்கு நம்பிக்கை அளித்து ஆறுதல் அளிக்கும் வகையில், நடைபெறும் விசாரணையில் எந்தவித சமரசமும் காங்கிரஸ் இடைத்தரர்களுக்காக, திமுக அரசின் எந்தவித மிரட்டலுக்கும் அடிபணியாமல், வெளிப்படுத்தன்மையுடன், தமிழக மக்களுக்கும் தன்னுடைய உயிருக்கு உயிரான ரசிகர்களுக்கும் உண்மையுடன் செயல்பட வேண்டும்.. தமிழக பாஜக இந்த கோர சம்பவத்தின் விசாரணை விவகாரத்தில் தமிழக அரசுக்கும் நடிகர் விஜய்க்கும், தமிழக மக்களின் எண்ணத்தின் படி உண்மைக்கும் நியாயமான விசாரணைக்கும் முழுமையாக துணை நிற்கும்" என்று கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications