"பாஜக எங்களை மிரட்டல! உரிமையா கூப்பிட்டாங்க!" அந்தர் பல்டி அடித்த பிரேமலதா! என்னென்ன சொல்றாரு பாருங்க
சென்னை: பாஜக கூட்டணியில் சேரச் சொல்லி மிரட்டியதாக தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசியது சர்ச்சையான நிலையில், இது தொடர்பாக அவரே விளக்கமளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல் நடக்கிறது. தேர்தலுக்கு இரண்டு வாரங்களே இருப்பதால் அங்கே பிரச்சாரம் தீவிரமாக நடந்து வருகிறது.

இந்த முறை தமிழ்நாட்டில் திமுக, அதிமுக கூட்டணியைத் தவிர்த்து பாஜகவும் தனது தலைமையில் கூட்டணியை அமைத்துள்ளது. அதில் பாமக, அமமுக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் உள்ளன.
தேமுதிக: லோக்சபா தேர்தல் கூட்டணி தொடர்பாக தேமுதிக தீவிர பேச்சுவார்த்தையில் இறங்கியது. அவர்கள் யாருடன் கூட்டணி என்பதில் சஸ்பென்ஸ் நிலவி வந்தது. அதன் பின்னரே ஒரு வழியாக அதிமுக உடன் கூட்டணி என அறிவித்தார்கள். இந்தச் சூழலில் சமீபத்தில் பிரச்சாரத்தில் பேசிய தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் தங்களை பாஜகவில் சேரச் சொல்லி மிரட்டியதாகக் கூறியிருந்தார்.
அதாவது திருவள்ளூரில் தேமுதிக வேட்பாளரை ஆதரித்துப் பேசிய பிரேமலதா விஜயகாந்த், "இந்தத் தேர்தலில் தேமுதிக அதிமுக உடன் கூட்டணி அமைத்துள்ளது. ஆனால், அதிமுக உடன் கூட்டணி அமைக்கும் முன்பு பாஜக சார்பில் எங்களுக்கு நிறைய நிர்ப்பந்தம் கொடுத்தார்கள். கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகும் வரை அழுத்தம் இருந்தது. ஆனாலும், அனைத்தையும் தாண்டி ஜெயலலிதாவைப் போல் நானும் துணிச்சலாக முடிவெடுத்தேன். இந்த முறை கூட்டணி அதிமுகவுடன் தான்.
சர்ச்சை: அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. மக்களுக்காக நாங்கள் இந்த முடிவை எடுத்துள்ளோம்.. பல நிர்ப்பந்தங்களைக் கொடுத்தார்கள். வங்கிக் கணக்கையும் முடக்கினார்கள். இப்படிப் பல வழிகளில் பயமுறுத்தினார்கள். நாங்கள் பனங்காட்டு நரி எந்த சலசலப்புக்கும் அஞ்ச மாட்டோம். இந்த சோதனைகளைத் தாண்டி தான் இந்த முடிவை எடுத்துள்ளோம்" என்று அவர் பேசியிருந்தார்.
பாஜக மிரட்டியதாக பிரேமலதா பேசியது மிகப் பெரிய சர்ச்சையானது. இதற்கிடையே இந்த விவகாரத்தில் அவர் திடீரென பல்டி அடித்துள்ளார். யாரும் தங்களை மிரட்டவில்லை என்றும் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டதும் இப்போது சரியாகிவிட்டதாகவும் அவர் கூறி அந்தர் பல்டி அடித்துள்ளார்.
விளக்கம்: இது குறித்து பிரபல டிவி சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், "எந்தக் காலத்திலும் யாராலும் தேமுதிகவை மிரட்ட முடியாது. அவர்கள் உரிமையோடு எங்களைக் கூட்டணிக்கு அழைத்துக் கொண்டே இருந்தார்கள். யாரும் தேமுதிகவை மிரட்ட முடியாது. விஜயகாந்த் இந்தக் கட்சியை அப்படி விட்டுச் செல்லவில்லை. தொடர்ந்து நிர்ப்பந்தம் செய்து கொண்டே இருந்தார்கள். கூட்டணிக்கு வாருங்கள் எனத் தொடர்ந்து அழைத்துக் கொண்டே இருந்தார்கள். அதைத் தான் நான் சொல்ல வந்தேன்.
எங்கள் கட்சியின் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டது உண்மை தான். ஆனால், அதன் பிறகு எங்கள் ஆடிட்டர் நேரில் சென்று உரிய விளக்கம் கொடுத்தார். அதை ஏற்றுக் கணக்கு மீண்டும் செயல்பாட்டிற்கு வந்தது.
மிரட்டவே இல்லை: தேர்தல் என்றாலே அனைத்து கட்சிகளும் கூட்டணிக்கு அழைக்கத் தான் செய்வார்கள். அது அவர்களின் உரிமை. ஆனால், எந்தக் கட்சியுடன் கூட்டணி அமைக்கலாம் என்பது நாங்கள் எடுக்கக்கூடிய உரிமை. அதன்படி இந்த முறை அதிமுகவுடன் கூட்டணி வைக்கலாம் என்று ஒட்டுமொத்த தேமுதிக நிர்வாகிகளும் இணைந்து முடிவு எடுத்துள்ளோம்.
எத்தனை நிர்ப்பந்தம் வந்தாலும் நாம் எடுக்கும் முடிவில் உறுதியாக இருக்க வேண்டும். அதைக் குறிப்பிடும் வகையில் தான் நான் பேசினேன். யாரும் தேமுதிகவை மிரட்டவெல்லாம் இல்லை. எல்லாரும் நட்புடன் தான் இருக்கிறார்கள். தேமுதிகவை யாராலும் மிரட்ட முடியாது. அவர்கள் எங்களை உரிமையுடன் அழைத்தார்கள் என்றே சொன்னேன்" என்றார்.












Click it and Unblock the Notifications