அடிதடி டூ அரசியல்! பாஜகவில் ஐக்கியமான பிரபல ரவுடி டொக்கன் ராஜாவுக்கு போலீஸ் ஸ்கெட்ச்.. சென்னையில் கைது
சென்னை: சென்னையின் பிரபல ரவுடியும் பாஜக மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளருமான டொக்கன் ராஜாவை துரைப்பாக்கத்தில் வைத்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இவர் மீது கொலை, கொலை முயற்சி, கொள்ளை, வழிப்பறி என சுமார் 20க்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இந்நிலையில் காவல்துறையினர் இவரை நீண்ட நாட்களாக தேடி வந்துள்ளனர்.
இவர் இதேபோல கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் கைது செய்யப்பட்டார். ஆனால் ஜாமீன் பெற்றுக்கொண்டு பின்னர் மீண்டும் தலைமறைவாகிவிட்டார்.

டாப் 10 ரவுடிகள்
அதேபோல அதற்கு முன்னரும் இதே கதைதான். அதாவது காவல்துறையினர் இவரை கைது செய்வார்கள். பின்னர் இவர் ஜாமீன் பெற்றுக்கொண்டு தலைமறைவாகிவிடுவார். மீண்டும் இவரை காவல்துறையினர் கைது செய்வார்கள். எனவே இவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இவர் இவ்வளவு பிரபல ரவுடியாக வலம் வருவதற்கு மற்றொரு காரணம் இவருடைய பாஸ் சிடி ரவிதான். சிடி ரவியின் வலது கரமாக செயல்பட்டவர்தான் இந்த டொக்கன் ராஜா. சென்னையின் டாப் 10 ரவுடி பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர்தான் சிடி ரவி. இவர் மீது இல்லாத வழக்குகளே கிடையாது என்று சொல்லலாம். கொலை முதல் போலீசார் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது முதல் ஏராளமான வழக்குகள் இவர் மீது இருக்கின்றன.

பாதுகாப்பு பெல்ட்
இந்நிலையில் இவரை கடந்த ஆண்டு ஜூன் மாதம் காவல்துறையினர் கைது செய்தனர். இதனையடுத்து இவரது கூட்டாளிகளை தொடர்ச்சியாக தேடி வந்தனர். ஆனால் அவர்கள் தலைமறைவாகவே இருந்து வந்துள்ளனர். இவ்வாறு தேடப்பட்டு வந்த முக்கிய கூட்டாளிதான் டொக்கன் ராஜா. சிடி ரவி தாதாவாக சுற்றித் திரிந்த காலத்தில் அவர் செய்த பல குற்ற சம்பவங்களுக்கு டொக்கன் ராஜா துணையாக இருந்திருக்கிறார். ஒரு கட்டத்தில் ரவி மீது எதிர் தரப்பினர் தாக்குதல் நடத்தி இருக்கின்றனர். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு பின்னர் ரவி உஷாராகி தனக்கென ஒரு பாதுகாப்பு பெல்ட்டை உருவாக்கிக் கொண்டார்.

போலீஸ் ஸ்கெட்ச்
அப்படி உருவாக்கப்பட்ட பாதுகாப்பு பெல்ட்டுக்கு தளபதியாக ராஜா செயல்பட்டுள்ளார். இக்காலகட்டங்களில் ரவியின் காரை அதிநவீனப்படுத்த ராஜர உதவியுள்ளார். அதாவது இக்காரை குண்டு துளைக்காத காராக மாற்ற முயற்சித்துள்ளனர். எனவே கார் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளையெல்லாம் பின்னாள் நின்று ராஜாதான் செய்து கொடுத்ததாக தகவல்கள் வெளியாகின. எனவே ரவிக்கு அடுத்து ராஜாவை தூக்குவதுதான் காவல்துறையின் திட்டம். ஆனால் இதில் ஒரு சின்ன சிக்கல் மேலெழுந்திருக்கிறது. அதாவது ராஜா உட்பட பலர் சமீபத்தில் பாஜகவில் இணைந்துவிட்டனர்.

கைது
இதில் டொக்கன் ரவிக்கு வடசென்னை பாஜக மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் ஒரு முறைக்கு இருமுறை இந்த கைது குறித்து மேலிடத்திலிருந்து உறுதியான உத்தரவை பெற்றிருக்கின்றனர். பின்னர் துரைப்பாக்கத்தில் பதுங்கி இருந்ததாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவல் உண்மை என உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் தங்கியிருந்த வீட்டை சுற்றி வளைத்து காவல்துறையினர் ராஜாவை கைது செய்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications