தேர்தலுக்கு பிறகு முதல் முறையாக பாஜக செயற்குழு கூட்டம்.. அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனை!
சென்னை: பாஜக மாநில சிறப்பு செயற்குழு கூட்டம் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்று வருகிறது. இதில் திமுக அரசைக் கண்டித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸில் பாஜக மாநில செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றுள்ளனர்.

தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன், இணை பொறுப்பாளர் பி.சுதாகர் ரெட்டி, பாஜக மூத்த தலைவர்கள் பொன் ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜன், நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் மற்றும் 4000-க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகளும் இந்த செயற்குழு கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
பாஜக செயற்குழு கூட்டத்தில் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள், மறைந்த பாஜக உறுப்பினர்கள், பங்காரு அடிகளார், எம் எஸ் சுவாமிநாதன், இளையராஜாவின் மகள் பவதாரணி, பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் ஆகியோரின் மறைவுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
மேலும், இந்த செயற்குழு கூட்டத்தில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய மரணங்களை தடுக்கத் தவறிய திமுக அரசைக் கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு நடைபெறும் முதல் சிறப்பு செயற்குழு கூட்டம் என்பதால், இந்தக் கூட்டத்தில் தேர்தல் முடிவுகள். கட்சியின் செயல்பாடு, அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படுவதாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications