முதல்வர் வேட்பாளர் செங்கோட்டையன்.. கிளைமாக்ஸ் நெருங்குது.. அதிமுக முன்னாள் நிர்வாகி பதிவால் பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் போர்க்கொடி தூக்கியுள்ளார். இந்நிலையில், பாஜக தலைமை, செங்கோட்டையனை முதல்வர் வேட்பாளராக்கி அதிமுக உடனான கூட்டணியை உருவாக்க காய் நகர்த்தி வருவதாக அதிமுக ஐ.டி விங்கின் முன்னாள் செயலாளரான அஸ்பயர் சுவாமிநாதன் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

எடப்பாடி பழனிசாமியை சந்திக்க மறுத்து, அதிமுக கூட்டங்களை புறக்கணித்து வருகிறார் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன். எடப்பாடி பழனிசாமிக்கு சீனியரான செங்கோட்டையன், இத்தனை காலம் அமைதியாக இருந்து வந்த நிலையில், அவரது அண்மைக்கால செயல்பாடுகள் தமிழக அரசியல் அரங்கை அதிர வைத்து வருகிறது. இந்நிலையில் தான் பாஜக ஒரு திட்டம் போட்டுள்ளதாகச் சொல்கிறார் அஸ்பயர் சுவாமிநாதன்.

aiadmk bjp Sengottaiyan

முதல்வர் வேட்பாளர் செங்கோட்டையன்

அதிமுக ஐ.டி விங் முன்னாள் செயலாளரான அஸ்பயர் சுவாமிநாதன் தமது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "முதல்வர் வேட்பாளர் செங்கோட்டையன்! அதிமுக - பாஜக கூட்டணி இறுதி செய்யப்பட்டுவிட்டது. தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக செங்கோட்டையினை முன்னிறுத்த பாஜக முடிவு. தமிழகத்தின் சீனியர் அரசியல் தலைவரான செங்கோட்டையனை, முதல்வர் வேட்பாளராக ஏற்கவும், அவருக்காக பிரசாரம் செய்யவும் அண்ணாமலை சம்மதம்.

அதிமுக, பாஜக, பாமக, அமமுக, ஓபிஎஸ் அணி, தேமுதிக, புதிய தமிழகம், ஐஜேகே, தமிழ் மாநில காங்கிரஸ், ஜான் பாண்டியன், ஏ.சி.சண்முகம் என ஒரு பிரமாண்டமான அணியை அமைத்து, திமுக கூட்டணியை வீழ்த்த டெல்லி வியூகம்.

இந்த பிரம்மாண்ட கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் பட்சத்தில் மூன்று வருட காலத்திற்கு செங்கோட்டையன் முதல்வராக இருப்பார். 2029-ல், 'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டம் அமலுக்கு வருமானால், அந்தத் தேர்தலுக்கு முதல்வர் வேட்பாளராக அண்ணாமலை முன் நிறுத்தப்படுவார். இறுதி காட்சிகள் நெருங்கிக் கொண்டிருக்கின்றன!" எனத் தெரிவித்துள்ளார்.

யார் இந்த அஸ்பயர் சுவாமிநாதன்?

அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப அணி செயலாளராக ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டவர் அஸ்பயர் சுவாமிநாதன். 7 ஆண்டுகளாக அக்கட்சிக்கு சமூக வலைதளங்களில் பரப்புரை மேற்கொண்டு வந்தார். கடந்த 2020 ஆம் ஆண்டு அதிமுக ஐடி விங் மண்டல வாரியாக பிரிக்கப்பட்டு, சென்னை மண்டல அதிமுக ஐடி விங் செயலாளராக அஸ்பயர் சுவாமிநாதன் நியமிக்கப்பட்டார்.

தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி தரப்பின் நெருக்கடியால் 2021 ஆம் ஆண்டு அப்பதவியில் இருந்து விலகினார். 2014 நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில், ஜெயலலிதா குரலில் "செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா?" என்ற ஆடியோ பதிவை பிரச்சாரத்தில் பயன்படுத்தியது அஸ்பயர் சுவாமிநாதனின் ஐடியா தான்.

செங்கோட்டையன் போர்க்கொடி

கடந்த மாதம், அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை செயல்படுத்தியதற்காக விவசாய அமைப்புகள் சார்பில் பழனிசாமிக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. விழா அழைப்பிதழில், எம்ஜிஆர், ஜெயலலிதா புகைப்படங்கள் இடம் பெறாததால் அதில் பங்கேற்கவில்லை என அதற்கு அவர் காரணம் கூறியிருந்தார்.

நேற்று முன்தினம் தமிழக பட்ஜெட் தாக்கலுக்கு முன்னதாக, சட்டப்பேரவை வளாகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. நேற்று வேளாண் பட்ஜெட் தாக்கலுக்கு முன்னதாக பேரவைத் தலைவர் அப்பாவுவை அவர் சந்தித்தார்.

மோதல் வெளிப்படை

பட்ஜெட் தாக்கலுக்குப் பின்னர் செய்தியாளர்களை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் செங்கோட்டையன் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த பழனிசாமி, "அதை அவரிடம் கேளுங்கள். காரணம், அவரைக் கேட்டால்தானே தெரியும்?! என்னை சந்திப்பதை அவர் ஏன் தவிர்த்தார் என்பது குறித்து அவரிடம் சென்று கேளுங்கள்." எனக் கூறினார்.

செங்கோட்டையனின் செயல்பாடுகள் அதிமுகவில் சலசலப்புகளை ஏற்படுத்தியுள்ளது. எடப்பாடி பழனிசாமி - செங்கோட்டையன் இடையே மோதல் போக்கு நிலவி வருவது அரசியல் அரங்கில் விவாதங்களைக் கிளப்பி வருகிறது. இப்படியான பரபரப்பான சூழலில் தான், பாஜக தலைமை, செங்கோட்டையனை முதல்வர் வேட்பாளராக்கி 2026 சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்கப் போகிறது என ஆரூடம் கூறியுள்ளார் அஸ்பயர் சுவாமிநாதன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+