பாஜகவுக்கு தோல்வி பயம் வந்துருச்சு.. ஆவணங்களை அழிக்க உள்துறை அமைச்சகத்தில் தீ.. திமுக ஐடி விங் பரபர
சென்னை: டெல்லியில் உள்ள மத்திய உள்துறை அமைச்சக அலுவலகத்தில் இன்று சிறிய அளவில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தை சுட்டிக்காட்டி, பாஜகவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டதாகவும் அதனால்தான் ஆவணங்களை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருப்பதாகவும் திமுக ஐடிவிங் விமர்சித்துள்ளது.
தலைநகர் டெல்லியில் ரஸினா ஹில்ஸ் பகுதியில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் அலுவலகம் அமைந்துள்ளது. டெல்லி, வடக்கு பிளாக்கில் உள்ள இந்த கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் எதிர்பாராதவிதமாக இன்று தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து குறித்த தகவல் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு கொடுக்கப்பட்டது. இதையடுத்து, அங்கு விரைந்து வந்த தீ அணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன.

7 தீயணைப்பு வாகனங்கள் அங்கு வரவழைக்கப்பட்டு, தீயை அணைக்கும் பணி நடைபெற்றது. உடனடியாக தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்த தீ விபத்து ஏற்பட்ட போது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அலுவலகத்தில் இல்லை. இந்த தீ விபத்து தொடர்பாக டெல்லி தீயணைப்பு பிரிவு அலுவலகர்கள் கூறியதாவது:-
"இன்று காலை 9.20 மணிக்கு உள்துறை அமைச்சகத்தின் ஐ.சி. பிரிவில் தீ விபத்து ஏற்பட்டதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, உடனடியாக தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்று தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். எனினும், அலுவலகத்தில் உள்ள ஜெராக்ஸ் இயந்திரம் மற்றும் சில கம்ப்யூட்டர்கள், ஆவணங்கள் தீயில் எரிந்தன. அதிர்ஷ்டவசமாக தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை" என்றார்.

தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடப்பதாக உள்துறை அமைச்சக அதிகாரிகள் கூறினர். இதனிடையே, உள்துறை அமைச்சக அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தை தேர்தல் தோல்வியுடன் ஒப்பிட்டு திமுக ஐடிவிங் விமர்சித்துள்ளது. இது தொடர்பாக திமுக ஐடி விங் எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
தோல்வி பயத்தில் டெல்லி எரிகிறது! தேர்தல் தோல்வி பயத்தில் எதிர்க்கட்சியினரை ரைடு, கைது என்று அச்சுறுத்தும் வேலைகளில் இறங்கியுள்ள பாஜக தற்போது நாடாளுமன்ற அலுவலகத்தில் உள்ள முக்கிய ஆவணங்களை அழிக்க தீ விபத்தை ஏற்படுத்தியுள்ளது!” என்று பதிவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications