மோடி மூலம் ஆட்சி கவிழ்ப்பு... தற்கொலைப் பாதையை தேர்வு செய்கிறதா திமுக?
Recommended Video
சென்னை: பிரதமர் மோடி மூலம் ஆட்சி கவிழும் என வேலூர் லோக்சபா தொகுதி தேர்தல் பிரசாரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசியிருப்பது அக்கட்சியினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
லோக்சபா தேர்தலில் பாஜகவை எதிர்த்து மிக வலிமையான கூட்டணியை உருவாக்கியது திமுக. இந்தியா முழுவதும் பாஜகவுக்கு ஆதரவாக வீசிய பேரலை தமிழகத்தில் ஒரு சிறுசலனத்தையும் ஏற்படுத்தவில்லை.
பாஜக எதிர்ப்பு வேரூன்றி கிடப்பதால் தமிழகத்தில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. என்னதான் பாஜகவை எதிர்த்து திமுக வென்றிருந்தாலும் நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி.க்கள் குரல் உயர்ந்தே இருந்தாலும் சர்ச்சைக்குரிய மத்திய அரசின் மசோதாக்களுக்கு ஆதரவாகவே அக்கட்சி வாக்களித்து வருகிறது.
திமுகவின் தடுமாற்றம்
இது திமுக மீதான அதிருப்தியின் தொடக்க புள்ளியாக இருக்கிறது. இந்த புள்ளியை நீட்டித்து கோலம் போட தொடங்கியிருக்கிறது திமுக தலைவர் ஸ்டாலினின் மோடி மூலம் அதிமுக ஆட்சி கலையும் என்பது.
ஸ்டாலின் பேச்சால் சந்தேகம்
மோடியே அதிமுக ஆட்சியை கலைக்கும் அளவுக்கு நீங்கள் ஊழல்வாதிகள் என்கிற பொருளில் ஸ்டாலின் பேசியிருந்தால் அதுவேறு. மோடி மூலம் ஆட்சி கலையும் பொறுத்திருந்து பாருங்கள் என பேசியிருப்பதுதான் சந்தேகங்களை எழுப்பத் தொடங்கியுள்ளது.
தமிழகத்தை தாக்கும் புயல்?
பாஜகவை பொறுத்தவரை அரசியல் ஆட்டங்களை காட்டாத ஒரு மாநிலமாக இருந்து வருகிறது தமிழகம். பாஜகவின் இந்த கனத்த மவுனம் ஏதோ ஒரு பெரும் புயலை தமிழகத்தில் உருவாக்கப் போகிறது என்பது மட்டும் உறுதி. பாஜகவைப் பொறுத்தவரை அதிமுகவால் எந்த பயனும் இல்லை என்கிற முடிவுக்கு வந்துவிட்டதால் வேலூர் தொகுதியில் கவனம் செலுத்தாமல் இருந்து வருகிறது.
திணறும் திமுக
திமுகவின் தோளில் ஏறி சவாரி செய்தாவது தாமரையை தமிழகத்தில் மலரச் செய்யலாம் என்பது அத்திட்டம். அதற்காக திமுக தமது பிடிக்குள் கொண்டுவர திரைமறைவு வேலைகளை படுதீவிரமாக மேற்கொள்கிறது. திமுக தலைமைக்கும் பாஜகவுடன் போனால் நிச்சயம் நமக்கு படுகுழிதான் என தெரியும். ஆனால் பிரச்சனைகளில் இருந்து தப்பிக்க வேறுவழி இல்லை என்பதால் இப்படி க்ரீன் சிக்னல்களை கொடுக்க வேண்டியிருக்கிறது... நாடாளுமன்றத்தில் சர்ச்சைக்குரிய மசோதாக்கள் மீது அடிப்பது போல் அடித்து பேசிவிட்டு ஆதரவாக வாக்களிக்கும் போக்கை கடைபிடித்து வருகிறது.
அதிர்ச்சியும் மகிழ்ச்சியும்
இதன் அடுத்தகட்டமாகத்தான் பூனைகுட்டி வெளியே வந்த கதையாக மோடி மூலம் ஆட்சி கவிழும் என ஸ்டாலின் பேசியிருப்பது. இது அதிமுகவுக்கு ஒரு பக்கம் அதிர்ச்சி என்றாலும் அக்கட்சியின் மூத்த தலைவர்களுக்கு பெரும் நிம்மதிதான், பாஜகவை மடியில் கட்டிக் கொண்டு அலைவதால்தான் அதிமுக மீது மக்களுக்கு வெறுப்பு என்பது அனைவருக்கும் தெரியும்.
திமுகவின் தற்கொலைப் பாதை
இப்போது தங்களது சுமையை திமுக சுமந்தால், அதிமுகவை இனி எந்த காலத்துக்கும் தமிழக மக்கள் கைவிடமாட்டார்கள் என்பது அக்கட்சி தலைவர்களின் கருத்து. திமுகவின் இந்த போக்கு திராவிடர் இயக்கத் தலைவர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. ஏதோ சில பிரச்சனைகளுக்காக ஒட்டுமொத்த கட்சியையே பாஜக பக்கம் தள்ளுவது என்பது அக்கட்சி தற்கொலை பாதையை தேர்வு செய்வதாகும் என எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.